Amusingly Simple

A blog by Deepak Venkatesan

Archive for the ‘பார்வை’ Category

வாரணம் ஆயிரம்

12 comments

திரைப்படங்களுக்குத் தமிழில் பெயர் வைப்பது என்பது மிகப்பெரும் சர்ச்சையாகி, பின் வரிவிலக்கு அறிவிப்பால் இப்போதெல்லாம் தயாரிப்பாளர்கள் போட்டிபோட்டுக் கொண்டு தமிழில் பெயர் வைப்பது ஒரு புறம் இருக்கட்டும். இயக்குநர் கௌத்தம் மேனன், சூர்யாவுடனான தன் அடுத்த படம் பற்றிய அறிவிப்பை வெளியிட்டதிலிருதே எல்லோரும் “வாரணம் ஆயிரம்” பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறார்கள். “வாரணம் என்றால் என்ன?” என்பது தான் பேச்சின் சாராம்சம். இப்படத்த்ன் தலைப்பு, “வர்ணம் என்னவோ…”, “வானரம் ஆயிரம்”, “வருணம் ஆயிரம்”, “வரணும் ஆயிரம்” என்று நண்பர்கள் நாவிலெல்லாம் பல பரிணாமங்களைப் பெற்றுக் கொண்டிருக்க, பலர் ‘வாரணம்’ என்றால் என்ன என்று தெரியாமல் திகைப்பது தெரிந்ததே. அதனால், ‘சும்மா’ – வாரணம் பற்றி ஒரு சின்ன பதிவு.

‘வாரணம்’ என்றால் யானை. ‘வாரணம் ஆயிரம்’ படத்தைப் பற்றி செய்தி வெளியிடும் போதே சில ஏடுகள், அடைப்பில், “Thousand Elephants” என்று சேர்த்தே வெளியிடுகின்றன. Hmmm…. ஒரு தமிழ்ச் சொல்லின் பொருள் ஆங்கிலத்தில் சொன்னால்தான் தெரிந்துகொள்ள முடிகிறது.

இன்னும், “வாரணம் ஆயிரம்” என்ற சொற்பிரயோகம், ஆண்டாள் அருளிய ‘நாச்சியார் திருமொழி’யில் வருகிறது. திருமால் தன்னைத் திருமணம் செய்வதுபோல் தான் கண்ட கனவை ஆண்டாள் தன் தோழியர்க்குச் சொல்கிறபோது,

“வாரணம் ஆயிரம் சூழ வலம் செய்து
நாரண நம்பி நடக்கின்றான் என்றெதிர்
பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும்
தோரணம் நாட்டக் கனாக்கண்டேன் தோழீ நான்”

என்கிறார். திருமால், ஆயிரம் யானைகள் சூழ்ந்து வருகிறார். அதை அறிந்ததும், ஊர் மக்கள் எல்லாம், பொன்னாலான குடங்களில் நீர் நிரப்பி வைத்து, எல்லா திசைகளிலும் தோரணங்கள் கட்டி திருமாலை வரவேற்பதாக நான் கனவு கண்டேன் தோழி என்று ஆண்டாள் சொல்கிறார்.

இந்தப் பாடல், ‘கேளடி கண்மணி’ படத்தில் இளையராஜா இசையில் இசைப்பாடலாக வந்துள்ளது. இந்தச் சுட்டியைச் சொடுக்கவும்.

இயக்குநர் கௌத்தம் மேனன் தொடர்ந்து தன் படங்களுக்கு அழகிய தமிழ்ப் பெயர்கள் வைப்பது மகிழ்ச்சி. (பெயர்கள் அவரின் சொந்தக் கற்பனை அல்ல என்றாலும் அழகாக இருக்கிறது என்று ஒத்துக்கொள்ளலாம் :) அவரின் படப் பாடல்களும் விரசமில்லாமல், தூய பாடல்களாகவும், உணர்ந்து இரசிக்கும்படியும் இருப்பது இரட்டிப்பு மகிழ்ச்சி. கௌத்தம் படங்களுக்குப் பாடல்கள் எழுதும் கவிஞர் தாமரைக்கு ஒரு “ஓ!” போடலாம்.

Written by Deepak

November 30th, 2006 at 9:07 pm

இன்றைய தமிழகம் பிறந்த நாள்

6 comments

தமிழ்நாடு, ஆந்திர, கர்நாடக, கேரள மாநிலங்களின் சில பகுதிகள் என்று அனைத்தையும் உள்ளடக்கியிருந்த ‘மெட்ராஸ் ப்ரெஸிடென்ஸி‘, மொழிவாரியாகப் பிரிக்கப்பட்டு, இன்றைய தமிழ்நாட்டைக் கொண்ட ‘மெட்ராஸ் ஸ்டேட்‘ உதயமானது நவம்பர் 1, 1956-இல். மாநிலங்கள் ம்றுசீரமைப்புச் சட்டம் (States Reorganisation Act, 1956) அமலாக்கப்பட்டதால், கர்நாடகா, ஆந்திரா, கேரளா என்று மொழி அடிப்படையில் தனித்தனி மாநிலங்கள் பிரிக்கப்பட்டு இன்றைக்குச் சரியாக 50 ஆண்டுகள் ஆகின்றன. கர்நாடகாவில் இந்நாளை, ‘கன்னட ராஜ்யோத்ஸவா‘ (Rajyotsava day) என்ற பெயரில் கொண்டாடுகிறார்கள். கேரளாவில் ‘கேரளப் பிறவி தினம்‘ என்று பெயர். ஆனால், அப்போது பிரிக்கப்பட்ட போது, மெட்ராஸ் ஸ்டேட், மைசூர் ஸ்டேட், நிஜாம் ஸ்டேட், கேரளா ஸ்டேட் என்று தான் பெயரிடப்பட்டன. பின்னர் 1968-இல் தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் பெற்றது யாவரும் அறிந்ததே.

கர்நாடகம் 1956-இல் தனியாகப் பிரிக்கப்பட்டாலும், மைசூர் என்ற பெயர் தான் இருந்தது. பின்னர் 1973-இல் கர்நாடகா என்ற பெயர் பெற்றது. அன்று முதன் ‘கன்னட ராஜ்யோத்ஸவம்’ கொண்டாடப்படுகிறது.

அதே போல, சுதந்திரத்திற்கு முன்னால், திருவாங்கூர், மலபார், கொச்சி என்று பிரிந்திருந்த மாநிலங்கள், கேரளா என்ற புதிய மாநிலமானது 1956-இல் தான். உலகெங்கும் இருக்கிற மலையாள நண்பர்கள், இந்நாளைக் ‘கேரளப் பிறவி’ என்று கொண்டாடுகின்றனர்.

இன்றைய மெட்ராஸ் ஸ்டேட்டில் ஐக்கியமாகியிருந்த ஆந்திராவைப் பிரித்துத் தனி மாநிலம் அமைக்கும் கோரிக்கை நெடுநாளாக இருந்து வந்தது. ‘மெட்ராஸ் மானதே’ என்று கோஷமிட்டு சென்னையைத் தலநகராகக் கொண்ட ஆந்திரா அமைக்க வேண்டிப் போராட்டங்கள் நடைபெற்றன. இருந்தாலும், அன்றைக்கு மாநிலத்திலும் மத்தியிலும் தமிழர்களின் ‘கை’ ஓங்கியிருந்ததால், சென்னை தமிழகத்திற்கே கிடைத்தது. 1952-இல் ‘குர்நூலை’த் தலைநகராகக் கொண்டு ஆந்திரா அமைக்கப்பட்டது. பின்னர் 1956-இல் தான் தெலங்கானா ஆந்திராவுடன் சேர்க்கப்பட்டு, ‘ஐதராபாத்’தைத் தலைநகராகக் கொண்டு இன்றைய ஆந்திரா பிறந்தது.

Written by Deepak

November 1st, 2006 at 12:36 am

சுஜாதாவின் சில்வியா

4 comments

வெகு நாள் கழித்து விகடனில் சுஜாதா அவர்கள் புதிய தொடர்கதை எழுதுகிறார் என்று கேள்விப்பட்ட அடுத்த நொடி ஓடிச் சென்று விகடன் வாங்கி விட்டேன். சுஜாதா அவர்களின் எழுத்து மீது மிகுந்த ஆர்வம் கொண்டவன் என்பதால் பல எதிர்பார்ப்புகள் எனக்கு. அதிலும் கணேஷ் வசந்த் நாவல் என்பதால் எதிர்பார்ப்புகள் இன்னும் அதிகமாகவே இருந்தது.

வழக்கம் போல் கலர் கலராக படம் போட்டிருந்த விகடனின் டெம்ப்டேஷனை எல்லாம் தாண்டி, சுஜாதா பக்கத்திற்கு வந்தேன். கிடைத்தற்கரிய செப்பேடு கிடைத்துவிட்டாற்போல வாசிக்கத் தொடங்கினேன். கதை எனக்குப் பரிச்சயமான ஜி.என்.செட்டி ரோட்டில் தொடங்குகிறது. பொதுவாக சுஜாதா நாவல்களை வாசிக்கும்போது இருக்கும் ‘அட…’ என்ற ஃபீலிங் இதில் அவ்வளவாக இல்லை. சுஜாதா தம்முடைய வழக்கமான க்ளீஷேக்களை அளவுக்கதிகமாகப் பயன்படுத்துகிறாரோ என்று எண்ணத் தோன்றுகிறது. பொதுவாக கதையோடும் நடையோடும் ஒட்டி விளையாடும் அவருடைய நையாண்டிகள், இதில் கொஞ்சம் ஓவர் யூஸ் செய்யப்பட்டது போல தோன்றுகிறது. எனக்கு மட்டும் தான் இப்படித் தோன்றுகிறதா, இல்லை வாசகர்கள் பலருக்கும் இதே கருத்து இருக்கிறதா என்று தெரியவில்லை.

‘டைலாமோ’ பாடல், கானா உலகநாதன் – என்று இன்றைக்கிருக்கும் சென்ஸேஷன்களைத் தான் ஃபாலோ அப் செய்வதை வலுக்கட்டாயமாகப் பிரகடனப்படுத்தாமல் இருந்திருக்கலாம். இன்னும் அவருடைய அதே பாணியைத் தான் கையாள்கிறார் என்றாலும், சிறு தொய்வு தெரிகிறது. பொதுவாகப் பெண்களிடம் “உங்களை ஒரு அரங்கேற்றத்தில் பார்த்திருக்கேன்” என்று சொல்லிக் கடலை போடும் வசந்த், இதில், “உங்களை ஒரு ரேம்ப்வாக்கில் பார்த்திருக்கேன்” என்று சொல்வது ஒரு முன்னேற்றம் :)

மற்றபடி இக்கதையின் தொடக்கம் அவ்வளவு ஈர்ப்பாக இல்லை. சுஜாதா எழுதினாரா, இல்லை, சுஜாதாவின் நடையில் எழுதத் துடிக்கும் எண்ணற்றவர்களில் யாரோ எழுதினார்களா என்று எண்ணும்படி உள்ளது :( அவர் நடையிலேயே சொல்வதென்றால், ஜல்லியடிக்கிற சமாசாரம் தான். “அப்படீன்னா?” என்றார் வசந்த். “அப்படியா?” என்றார் கணேஷ். -ரசிக்கும்படி இருந்ந்தது.

சுஜாதாவை விமர்சிக்கும் அளவுக்கு எனக்கு ஞனமோ அனுபவமோ இல்லை என்றாலும், அவரின் நீண்ட நாள் ரசிகன் என்ற முறையில் என் கருத்துகளைத் தான் பதிந்தேன். முதல் அத்தியாயம் தான் முடிந்திருக்கிறது. இன்னும் போகப் போக அவருக்கே உரிய ஸ்டைலில் கதை நகரும் என்று நம்புவோம்.

Related Posts with Thumbnails

Written by Deepak

May 16th, 2006 at 10:55 am