அண்மைக் காலங்களில் திரைப்படங்களில் மட்டுமே கலக்கி வந்த ஹீரோயின்கள் பலர், இம்முறை தேர்தலில் கட்சிகளின் அமோக ஆதரவால், தமிழகமெங்கும் அரசியல் மேடைகளிலும் கலக்கியது செய்தி. ஆனால், இங்கே நான் குறிப்பிடுவது சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் நடிகைகளைப் பற்றியல்ல… நிஜமாகவே சுழற்றியடிக்கும் சூறாவளிகளைப் பற்றி. முதலில் அமெரிக்காவில் 'காத்ரினா' என்ற சூறாவளி தாக்கியது. அதன் பிறகு 'ரீட்டா'. அதே மூச்சோடு நம்மூரிலும் 'மாலா', 'ஃபனூஸ்' என்று தன் பங்கிற்கு பெண் புயல்கள் சக்கைப் போடு போட்டன. இப்போது சீனாவில் பல பேரைக் கதிகலங்கச் செய்திருக்கும் 'ச்சான்ச்சூ' என்ற சூறாவளி ஆணா பெண்ணா என்று தெரியவில்லை. ஒரு வேளை சீன தேசத்து சிம்ரனாக இருக்கலாம்.
'அமெரிக்காவில் தான் அப்படிச் சூறாவளிகளுக்குப் பெயர் வைக்கிறார்கள் என்றால் நம்மூரிலும் மாலா – ஷீலா என்று பெயர் வைக்க வேண்டுமா?' என்று நண்பர் கணேஷ் மாதிரி பலருக்கும் தோன்றியிருக்கும். இதனால், எனக்கு மூன்றாவது வீட்டில் வசிக்கிற மாலாவைப் பார்த்து யாரும் "சூறாவளி… சூறாவளி… சூறாவளி… நீதான்டி!" என்று உணர்ச்சிவசப்பட்டுப் பாடிவிட மாட்டார்களா? என்று கூட நினைத்திருக்கிறேன். ஆனால் இந்தச் சூறாவளிகளுக்குப் பின்னால் ஒரு ஃபிளாஷ்பேக்கே இருப்பது தெரியவந்தது. பசிஃபிக் பெருங்கடல், இந்தியப் பெருங்கடல் போன்றவை பரப்பரவில் மிகப்பெரியவை என்பதால், ஒரே சமயத்தில் பல புயல் சின்னங்கள் அவற்றில் தோன்றக் கூடும். இவற்றில் ஒன்று வடக்கு நோக்கியும், ஒன்று மேற்கு நோக்கியும், ஒன்று கிழக்கு நோக்கியும் நகர்கிறது என்றால், சன் டீவியில் வானிலைச் செய்திகள் வாசிப்பதற்காகத் தோன்றும் பெண் எந்தப் புயலைப் எத்திசையில் நகர்கிறது என்று குழம்பிப் போகக் கூடும். கேட்கிற நாமும் எந்தப் புயலைப் பற்றிச் சொல்கிறார் என்று புரியாமல் விழிக்கலாம். இப்படிப்பட்ட அசௌகரியங்களைத் தீர்க்கவே புயல்களுக்குப் பெயர் வைக்க ஆரம்பித்தார்கள். இன்னும், இப்படிப் பெயர் வைப்பதால் வானிலை ஆய்வு மையங்களில் வெவேறு புயல்களைப் பற்றி communicate செய்வது எளிதாகிவிடுகிறது. முதல் முதலாக போன நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆ̥ஸ்திரேலியாவில் வானிலை ஆய்வாளர் ஒருவர் தான் இப்படிப் பெயர் வைக்கும் பழக்கத்தை ஆரம்பித்திருக்கிறார். அந்த ஊரில் அவருக்குப் பிடிக்காத அரசியல் தலைவர்களின் பெயர்களைச் சூறாவளிகளுக்கு வைத்திருக்கிறார். நம்மூர் போல அங்கே தலைவர்களைப் 'புரட்சிப் புயல்' என்று அழைக்காமல், புயலைத் 'தலைவா' என்று அழைக்கிறார்கள் போல… இதனால், "மன்னார்குடி மாடசாமி மேற்கு நோக்கி நகர்கிறார்", "லல்லு பிரசாத்தால் பல கோடி ரூபாய் சேதம் ஏற்பட்டது", "செங்கல்பட்டு சிவாவின் தாக்கம் சென்னையில் குறைந்துவிட்டது" – என்பது போன்ற அறிவிப்புகள் செய்து, தம் மனதை அவர் திருப்திபடுத்திக் கொண்டிருக்கலாம். இரண்டாம் உலகப் போரின் போது பணியற்றிய வானிலை ஆய்வாளர்கள், அட்டகாசம் செய்யும் சூறாவளிகளுக்குத் தன் மனைவி அல்லது கேர்ள் ஃபிரண்டின் பெயரை வைத்து மகிழ்ந்தார்கள். இதன் பின்னால், அமெரிக்க அரசாங்கம் புயல்களுக்குப் பெயர் வைப்பதற்காக ஒரு லிஸ்டைத் தயாரித்தது. ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு புயலாக உருவாகும்போது, இந்த லிஸ்டில் உள்ள ஒவ்வொரு பெயராக வைகிறார்கள். அடுத்த ஆண்டு மீண்டும் இந்த லிஸ்ட் ரீசெட் செய்து, முதலிலிருந்து ஆரம்பிக்கப்படுகிறது. உலகின் ப
்வேறு இடங்களில் தோன்றும் புயல்களுக்கு அங்கே அருகிலிருக்கும் நாடுகள் புயலின் பெயரை வழங்கி உதவி புரிகின்றன. இந்த மாதிரி உருவானது தான் 'மாலா', 'ஃபனூஸ்' என்ற புயல்கள். இந்த வரிசையில் ப்ரியா, நிலோஃபர், நிஷா என்று இன்னும் பல பெயர்கள் சூட்டப்படுவதற்காகக் காத்திருக்கின்றன. அமெரிக்காவிலும் ஜூலியா, பலோமா, மெலிஸா போன்ற புயல்கள் உண்டு. பெண் புயல்கள் மட்டும் தானா என்கிறீர்களா? இல்லை. ஆகாஷ், சாகர், தாஸ் என்று பல ஆண் புயல்களும் வரக் காத்திருக்கின்றன. சுழற்றியடித்து சேதம் விளைவிப்பதில் ஆண் பெண் என்ற பாகுபாடு இல்லை. சுழற்ச்சி முறையில் நம்மூருக்கு மாலா, ப்ரியா போன்ற புயல்கள் மீண்டும் மீண்டும் வரும் என்பதால் அவற்றின் ரசிகர்கள் மனம் தளரத் தேவையில்லை. ஒரு குறிப்பிட்ட புயலால் ஒரு நாடு மிகுந்த சேதங்களுக்கு ஆளாகிறது என்றால், அப்புயலுக்கு 'ரிட்டயர்மென்ட்' கொடுத்து விடலாம். அதன் பின்னால் அப்புயல் திரும்ப வராது. வேறு 'இளம்புயலை'த் தேடிக்கொள்ள வேண்டியதுதான். எதிர்காலத்தில் நம் பெயர்களில் எல்லாம் கூடச் சூறாவளிகள் வரலாம். எல்லோரும் சேர்ந்து கலக்கலாம். இப்புயல்களுக்கு ரசிகர் மன்றங்கள் உருவாகலாம். கோயில்கள் கூடத் தோன்றலாம். 'சுழற்றியடித்த சொப்னா திருக்கோயில்', 'அள்ளித் தெறித்த அல்ஃபோன்ஸா ஆலயம்' என்றெல்லாம் பெயர்கள் கேள்விப்படலாம். ப்ரியாவும் நிஷாவும் நிலோஃபரும் தேர்தல் காலங்களில் மேடைகளில் கலக்கலாம். மந்திரி கூட ஆகலாம். இன்னும் என்னென்னவோ… அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா! எப்படியோ… மூன்றாவது வீட்டு 'மாலா' ரிட்டயர் ஆகாமல் அடிக்கடி வந்துகொண்டிருந்தால் மகிழ்ச்சிதான்! நன்றி: நேஷனல் ஹரிக்கேன் சென்டர், விக்கிபீடியா
இந்தியாவைக் கலக்கப் போகும் ப்ரியா, நிஷா, நிலோஃபர்
May 20th, 2006 4 comments
உங்களுக்கு மூளையை வளர்க்கும் ஆசை உண்டா?
June 10th, 2005 4 comments
வெண்டைக்காய் சாப்பிட்டால் மூளை வளரும் என்பதற்காக என் நண்பனின் அம்மா (அப்போது 10 வயதிருக்கும்) அவனுக்கு தினமும் மதிய உணவுக்கு வெண்டைக்காய் சாம்பார், வெண்டைக்காய் பொறியல், வெண்டைக்காய் பச்சிடி என்று கட்டிக் கொடுத்து அனுப்பியது இன்னும் நினைவிருக்கிறது. அதில் எந்த அளவுக்கு அவனின் மூளை விருத்தி அடைந்தது என்று எனக்குத் தெரியாது, ஆனால், சமீபத்தில் நியூ சைன்டிஸ்ட் இதழில் வெளியான கட்டுரையில், மூளையை வளர்க்க 11 வழிகள் என்று சொல்லி இருக்கிறார்கள். க்ரிம்ஸன் ரூம்களையும், விரிடியன் ரூம்களையும் திறக்கவேனும் பயன்படுமே என்று அந்த விஷயங்களைப் படித்து வைத்தேன். சில வழிகள் தெரிந்தவை, சில விஷயங்கள், 'அப்படியா என்ன?' ரகம். நிறைய பயாலஜி சம்பந்தமான விளக்கங்கள் சொல்லியிருந்தார்கள். அதெல்லாம் இல்லாமல் gist மட்டும் தர முயல்கிறேன். கொஞ்சம் இங்கே சாம்பிள் பாருங்களேன்… வயசானலும் மங்கிப் போகாத நினைவு வேண்டுமா? Modafinil எடுத்துக் கொள்ளுங்கள்! இது நமக்குப் பெரிதும் உதவும் என்று நினைக்கிறேன். ஒரு 90 மணி நேரம், அதாவது, 4 நாள் – முழுக்க தூக்கமில்லாமல் வேலை செய்து கொண்டே இருக்க முடியுமா? முடியும் என்கிறார்கள் – modafinil எடுத்துக் கொண்டால்! எனது நண்பன் ஒருவன் பஸ்ஸில் ஏறிய அடுத்த நிமிடம் தூங்கி வழிவான்; கொஞ்சம் ஏஸி இருந்தால், அவன் கண்கள் சொக்கும். அவனைப் போன்ற ஆசாமிகளுக்கு வழங்கப்பட்டு வந்த இந்த modafinil, இன்று, வேலைப் பளுவால் தூக்கம் கெட்டுப் போகிறவர்களுக்கும் பரிதுரைக்கப் படுகிறது. இன்னும், வயதானவர்களுக்கே உரிய அசௌகரியமான ஞாபக மறதியைப் போக்குவதற்குக் கூட மருந்து உண்டாம். தாத்தாக்களை எல்லாம் வாலிபர்கள் போல செயலாற்ற வைக்குமாம். ஆச்சரியமாக உள்ளது. எங்கள் தொகுதி MLA-வுக்குக் கொடுக்க வேண்டும். வில்லிவாக்கத்தில் ரயில்வே மேம்பாலம் அமைப்போம் என்று 5 வருடங்களுக்கு முன் கூறி, ஏனோ பாவம், மறந்துவிட்டார். உண்மையிலேயே மூளை வளர்ச்சிக்கு வெண்டைக்காய் சாப்பிட வேண்டுமா? மூளைக்கு சரியான அளவு குளூக்கோஸ் கிடைத்துக் கொண்டே இருக்க வேண்டும். காலையில் breakfast ஸ்கிப் செய்தால், அலுவலகக் கணக்கில் கோட்டை விடும் வாய்ப்பு இருக்கிறது. ஜாக்கிரதை! எப்படியாவது, தினமும் பீன்ஸ் சாப்பிடச் சொல்கிறார்கள். மதிய உணவில், ஒரு ஆம்லெட், அப்புறம் கொஞ்சம் பச்சை விஷயங்கள் இருக்க வேண்டும் என்பதனால், சாலட் வகையறாக்கள், அதன் பின், கொஞ்சம் தயிர், இதெல்லாம் மூளையைச் சுறுசுறுப்பாக வைத்திருக்கும். பிஸ்கட், கேக், பீட்ஸா போன்ற junk food-களின் பக்கம் தலை வைத்தும் படுக்காதீர்கள் என்கிறார்கள். சில எலிகளைப் பிடித்து, நிறைய junk food சாப்பிட வைத்து, அவற்றை ஒரு maze-இல் விட்டிருக்கிறார்கள். அத்தனை எலிகளும் ஒரே மந்தமாகச் செயல்பட்டனவாம். உஷார்! மாலை வேளையில், சாவகாசமாக உட்கார்ந்து ஸ்ட்ராபெர்ரி சாப்பிடுங்கள். விஞ்ஞானிகள் சொல்கிறது போல் உங்கள் கவனம் கூர்மையாகிறதோ இல்லையோ, மாலையில் நல்ல சுவையான சமாச்சாரம் சாப்பிட்ட திருப்தியாவது கிடைக்குமல்லவா? இசை அமைப்பவர்கள் மட்டும் மேதைகள் இல்லை, இசையைக் கேட்கின்றவர்களும் தான்! என்ன ஆச்சரியமாக உள்ளதா? பல நபர்களை Mozart-இன் இசையைக் கேட்கச் செய்து சோதித்திருக்கிறார்கள். கேட்டவர்கள் எல்லாம் மிக்க உற்சாகத்தோடு தம் வேலையைச் செய்திருக்கிறார்களாம். இசை கேட்டால் உற்சாகமாவது இயற்கை தான் என்கிறீர்களா? இதே இசையை எலிகளையும் கேட்க வைத்திருக்கிறார்கள். அவயும் Mozart-இன் இசையைக் கேட்டு maze-களில் உற்சாகமாக வழியைக் கண்டுபிடித்தனவாம். சிறு வயதில் இசை வகுப்புகளுக்குச் சென்ற
மாணவர்களின் IQ, மற்றவர்களை விட சில புள்ளிகள் அதிகமாக இருந்தனவாம். எப்படியும், இசையைக் கேட்பதில் நஷ்டமில்லை என்பதால், கேட்டு வைப்போமே. மூளை அதுபாட்டுக்கு ஒரு மூலையில் வளரட்டும்! எதுவுமே தேறவில்லை என்றால் இருக்கவே இருக்கிறது டெக்னாலஜி! பல நாட்கள் முன்னால், சுஜாதாவின் 'பேசும் பொம்மைகள்' நாவல் படித்தேன். Downloading என்று ஒரு கற்பனை டெக்னாலஜியில், மூளையில் சிப் வைத்து, ஒருவரின் நினைவு வங்கியையே மாற்றலாம் என்கிற போக்கில் எழுதியிருந்தார். அப்படிப்பட்ட தொழில்நுட்பம் இன்னும் வரவில்லை என்றாலும், மூளையில் சில மின்னணு சர்க்கிட்களைப் பொறுத்தி, செயற்கை கை, கால் போன்றவற்றை இயக்க முடியும் என்கிறார்கள். இன்னும், வெறும் மின்காந்த அலைகளைப் பயன்படுத்தி, ஒருவரின் கற்பனை சக்தி, ஆற்றல் எல்லாவற்றையும் மாற்றலாம், ஒரு ஊசி மூலாமாக, இறந்த மூளை செல்களை இயங்கச் செய்யலாம், சில எலெக்ட்ரோடுகளைச் செருகியும் (Terminal Man நாவலில் வருவதைப்போல…) மூளையின் செயல்பாட்டைக் கட்டுப்படுத்தலாம் என்றெல்லாம் சொல்கிறார்கள். மெத்தப் படித்த விஞ்ஞானிகள் – சொல்வதில் நிச்சயம் விஷயம் இருக்கும். மைக்கேல் க்ரைட்டன் சொல்வதையே நம்புகிற கூட்டம் இருக்கும் போது, இவர்கள் சொல்வதை ஏன் நம்பக்கூடாது? மூளையைச் சரியான முறையில் work out செய்ய வேண்டும். அண்மைக் காலம் வரையில், ஒரு மனிதனின் problem solving, verbal reasoning போன்ற திறமைகள் அவனின் மரபணுக்களின் அமைப்பில் நிர்ணயம் செய்யப்படுகிறது என்று கருதப்பட்டது. சமீபத்தில் தான், அவனது working memory-யை பழக்குவதன் மூலம், இவற்றையெல்லாம் மேம்படுத்தலாம் என்று கண்டறிந்துள்ளனர். ஆமாம், அதென்ன working memory? நீங்கள் ஒரு சின்ன கணிதக் கணக்கு போடுகிறீர்கள்: 68+7-23-4+35 என்று ஒரு தொடர் கணக்கு. இதை மனதில் படிப்படியாகத் தானே ஸால்வ் செய்வீர்கள்? அடுத்தடுத்த படிகளின் விடைகளை மனதில் பதிந்துக் கொண்டு, (கணிப்பொறியில் பயன்படும் stack போல…), இறுதியில் சரியான விடையைச் சொல்கிறீர்கள். நம் மூளைக்குள் இதற்கு உதவுகிற stack தான் இந்த working memory. (செயல் நினைவகம் எனலாமா?) பல குழந்தைகளை வைத்து ஆராய்ந்து, செயல் நினைவகத்தைச் சரியான முறையில் பயிற்றுவித்தால் IQ அதிகரிக்கிறது என்று கண்டறிந்துள்ளார்கள். எதுவுமே நினைவில் வைத்துக்கொள்ள முடியவில்லையா? ஒரு அரங்கத்தில் 100 பேர் இருக்கிறார்கள். எல்லோரும், ஒவ்வொருவராக எழுந்து, தம் பெயர்களைச் சொல்லி அமர்கிறார்கள். ஒரு மணி நேரம் கழித்துக் கேட்டால், அத்தனைப் பேரின் பெயர்களையும் உங்களால் நினைவில் வைத்திருந்து சொல்ல முடியுமா? இதெல்லாம் அஷ்டாவதானிகளுக்குத் தான் சாத்தியம், என்னை ஆளை விடுடா சாமி என்று ஒதுங்குகிறீகளா? அதெல்லாம் பொய். பழகினால் எல்லாருக்குமே சாத்தியம் தான் என்கிறார்கள் விஞ்ஞானிகள் (இவர்களெல்லாம் திருந்தவே மாட்டர்களா?) நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய விஷயங்களை, மனதில் கதை போல உருவாக்கி வைத்துக்கொள்ள வேண்டும். mnemonics என்பார்களே, அதுதான். நபர்களின் முகத்தோடு பெயர்களைத் தொடர்புபடுத்தி நினைவில் வைத்துக்கொள்ள, அவர்களைப் பற்றி ஹாஸ்யமாக ஏதேனும் நினைவில் பதித்துக் கொள்ளுங்கள். (கவுண்டமணி வசனங்கள் நமக்குப் பெரிதும் உதவும்… தீச்சட்டித் தலையா!, ஆம்லெட் மண்டையா! – இதுமாதிரி). சம்பந்தப்பட்ட நபருக்குத் தெரியாத வரையில் ஆபத்தில்லை! தூக்கம் கூட ஒரு அருமருந்து! தூங்காதே தம்பி தூங்காதே என்ற பட்டுக்கோட்டை பாடல் எல்லா சமயங்களிலும் பொருந்தும் என்று சொல்லிவிட முடியாது. நீங்கள் 21 மணி நேரம் தொடர்ந்து விழித்துக்கொண்டிருக்கிறீர்கள் என்றால், உங்கள் மனநிலை, நன்றாக மது அருந்திய நபருக்கு ஒப்பாக இருக்குமாம். இதற்கு என்ன தீர்வு? கொஞ்ச நேரம் தூங்குங்கள்
. அது போதும்! ஒரு வீடியோ கேம் விளயாடுகிறீர்கள். தொடர்ந்து 2 மணி நேரம் விளையாடிவிட்டு, 1 மணி நேரம் தூங்கியெழுந்து பின்னால் ஆட்டத்தைத் தொடர்ந்தால், உங்கள் ஆடுதிறன் அதிகரித்திருக்குமாம். தூக்கத்தின் போது, உங்கள் மூளையின் சிக்கலான சர்க்கிட்களில் உள்ள செய்திகள் எல்லாம் ஒன்றோடொன்று தொடர்புபடுத்தப் படுகின்றன. இதன் காரணமாக, தூங்கி எழுந்ததும் ஒரு தெளிவு பிறக்கிறது. வேதிப் பொருட்களுக்கான periodic table அமைத்துக் கொடுத்த ரஷ்ஷிய விஞ்ஞானி Dmitri Mendeleev, அந்த டேபிளை உருவாக்க ஒரு நாள் முழுக்க முயன்றும் முடியாமல் தூங்கப் போனாராம். தூக்கத்தில், அவருக்கு வந்தக் கனவில் அந்த டேபிளை எவ்வாறு உருவாக்குவது என்கிற சூத்திரம் தெரிந்ததாம். தூக்கத்திற்கு அவ்வளவு பவர் உண்டு! இன்னும் பல வழிகள் உண்டு – மூளையை வளர்க்க! தினமும் நடை பயிற்சி செய்கிறவர்களின் மூளைத் திறன், நடை பயிலாதோரை விடவும் அதிகமாக இருப்பதாக ஆராய்ந்துள்ளனர். யோகா முறையில் கூட மூளை வளர்ச்சியை அதிகரிக்கும் பயிற்சிகள் உண்டு. யோகாவில், பின் பக்கமாக வளைகிற ஆசனம், மூளைக்கு ஒரு வேகத்தை அளிக்கிறதாம். மிகவும் ஆச்சரியமான விஷயம்: 2001-இல், சில நபர்களை வைத்து ஒரு சோதனை செய்யப்பட்டது. அவர்கள் அனைவரும் தங்கள் தோள் தசைகளை வலுப்படுத்தும் பயிற்சியில் ஈடுபட்டது போல் கற்பனை செய்துகொள்ள பணிக்கப்பட்டார்கள். தினமும் 15 நிமிடங்கள் இது போல் கற்பனை செய்துகொள்ள வேண்டும். 12 வாரங்கள் கழித்துச் சோதித்ததில், அவர்களின் தோள்கள் 13% வலுவடைந்திருந்தன!! தீயன பார்க்காதே, தீயன கேட்காதே, தீயன பேசாதே என்ற காந்தியின் தத்துவம் மூளைக்குச் சரியான ஆரோக்கியம் தரவல்லது என்று ஆராய்ந்திருக்கிறார்கள். கிறிஸ்தவக் கன்னியாஸ்திரீக்கள் 100 வருடங்கள் மன ஆரோக்கியத்துடன் இருக்கிறார்களாம் – தீயனவற்றிலிருந்து விலகியிருப்பதால்! பி.கு.: ஒரு கன்னியாஸ்திரீ சொன்னாராம்: "Think no evil, do no evil, hear no evil, and you will never write a best-selling novel" என்று! மூளைக்குத் தொலை இயக்க சக்தி இருக்கிறது என்றால் நம்புவீர்களா? எப்படி என்று இன்னும் கண்டுபிடிக்கவில்லை. ஆனால், நியூரோஃபீட்பேக் என்கிறார்கள். EEG (Electroencephalogram) என்பது மூளையில் இருக்குன் மின் அலைகள். இந்த அலைகளில் alpha அலைகள் என்று ஒரு வகை உண்டு. இந்த alpha அலைகளைக் கொண்டு நாம் நினைக்கிறதை இயக்க முடியும் – பயிற்சி இருந்தால். தலையின் மேற்பரப்பில் பொறுத்தப்பட்ட surface electrode-கள் வழியாக இந்த alpha அலைகளைப் பெற்று, அதன் மூலமாக, ஒரு வீடியோ கேமில் காரின் வேகத்தைக் கட்டுப்படுத்திக் காட்டியிருக்கிறார்கள். நினைத்தாலே போதும் – கார் பறக்கிறது என்றால் சும்மாவா? இது போல, நினைப்பதன் மூலமாகவே, கற்பனை சக்தியைக் கூட்டலாம், உடல் வலையை இல்லாமல் செய்யலாம், வேலைத் திறனை அதிகரிக்கலாம், இன்னும் பல அதிசயங்கள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன! எப்படியோ, நான் தினமும் செய்கிற நடப்பது, சாப்ப்பிடுவது, தூங்குவது, இசை கேட்பது – எல்லாமே மூளையை வளர்க்கும் என்றால் என்னால் நம்பவே முடியவில்லை!
அது ஒரு அழகிய “புறா”க் காலம்
May 3rd, 2005 0 comments
“உலகம் அழியப் போகுது சார்” என்று திடீரென்று எங்கிருந்தோ ஒருவர் உங்களிடம் வந்து சொன்னால் எப்படி இருக்கும்? சொன்னார். சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில்! சொல்லிவிட்டு, ஏதோ சில மதப் பிரச்சார நோட்டீஸையும் கொடுத்துவிட்டு வேகமாக ஓடினார், அடுத்திருந்த பெண்மணியை நோக்கி! நூறு டிகிரி சுட்டெரித்த வெயிலையும் மீறின என் கோபத்தை அடக்கிக் கொண்டு அவரை லேசாக முறைத்துவிட்டு நகர்ந்தேன். பொதுவாக இது மாதிரி கண்ட இடத்திலெல்லாம் துண்டுப் பிரச்சார சீட்டுகளைக் கையில் கொடுத்து உபத்திரவிக்கும் நபர்கள், ஏதேனும் புத்தகம் ஒன்றை வைத்துப் படித்துக் கொண்டிருப்பவர்களை அண்டுவதில்லை. அன்று துரதிர்ஷ்டவசமாக என் கையில் இருந்த புத்தகத்தைப் படித்து முடித்து உள்ளே வைத்தேனோ, அடுத்த நிமிடம் என் கைகளில் பிரச்சாரச் சீட்டு! உலகத்தின் அழிவைப் பற்றிய உபதேசம் இலவச இணைப்பு! இந்த பேத்தல் சமாசாரங்களை எல்லாம் ஒரு மூலையில் கிடத்திவிட்டு, விஷயத்திற்கு வருவோம். இரண்டாம் உலகப் போர் காலத்தில் ஏவுகணைகளைச் சரியாக இலக்கு நோக்கிச் செலுத்துவதற்கு (guidance), புறாக்களைப் பயன்படுத்தும் முயற்சிகள் நடந்தன என்றால் நம்ப முடிகிறதா? பொதுவாக, உளவியல் நிபுணர்கள் பலரும் உள்மனம் தொடர்பான விஷயங்களையே அதிகம் ஆராய்ந்துள்ளனர். இதில், “என் வழி, தனீ வழி” என்று போன சிலரில் ஒருவர் தான் அமெரிக்க உளவியல் நிபுணர் பி. எஃப். ஸ்கின்னர் (B.F.Skinner). இந்த உள்மனம், ஸப் கான்ஷியஸ் – இதெல்லாம் உதவாத விஷயம், வெளிப்புற செயல்பாடுகள், நடத்தை – இவற்றை வைத்து ஆராய்ச்சி செய்தால் பல பயன்பாடுகள் கிடைக்கும் என்ற ஆழ்ந்த நம்பிக்கை ஸ்கின்னருக்கு! மனிதர்களை நம்பிக் காரியத்தில் இறங்கினால் ஆவதற்கில்லை என்று இவர் பல புறாக்களை வாங்கி வைத்துக் கொண்டார். “பட்சி சாதி நீங்க, எங்க பகுத்தறிவாளரைப் பார்க்காதீங்க” என்று பாடி, அந்தப் புறாக்களின் அறிவுக் கண்ணைத் திறந்தாரா என்பதெல்லாம் தெரியாது – ஆனால், நிச்சயமாக, அப்புறாக்களைத் தன் காதலியிடம் தூது போ என்று அனுப்பவில்லை! இன்றைக்கு நாம் பயன்படுத்துகிறோமே, ரேடார், அது போன்ற ஒரு கருவியை இந்தப் புறாக்களை வைத்தே உருவாக்கினார். மூன்று புறாக்களை ஒரு திரையின் முன் அமர்த்தினார். இந்தத் திரையில், ஏவுகணை தாக்கி அழிக்க வேண்டிய இலக்கு தெரிகிறது. புறாக்கள் சாதாரணப் புறாக்கள் இல்லை – பழக்கப் பட்ட அதிரடிப் புறாக்கள்! திரையில் தெரியும் இலக்கை அலகால் சரியாகக் கொத்த வேண்டும். சரியாகக் கொத்தினால், எதிரே இருக்கும் சிறிய தட்டில், அப்புறாவிற்கு நெல் தானியம் கிடைக்கும். ‘கைல காசு, வாய்ல தோசை’ என்பது போன்ற விஷயம்! இந்தத் திரை, ஏவுகணை guidance உபகரணத்தோடு இணைக்கப் பட்டிருக்கும். மூன்று புறாக்களில் இரண்டு சரியாகக் கொத்தினால், ஏவுகணையின் இலக்கு சீர் செய்யப்படும். பிறகென்ன? புறா ரேடார் ரெடி! சுற்றியும் இரைச்சல், கலவரம் என்று என்ன நேர்ந்தாலும் இந்தப் புறாக்கள் தம் கடமையைத் தவறாமல் செய்யும். எந்த நடனமணி தேவதையும் இவற்றின் கவனத்தைச் சிதறடிக்க முடியாது. ஒருவேளை நடனமணிகளுக்குப் பதிலாக, அதிசுவையான நெல் மணிகளைக் கொண்டு சென்றால் அவை கவனம் பிசகலாம் – ஆனால் யாரும் அப்படிச் சோதித்தார்களா எனத் தெரியவில்லை! ரேடார் போன்ற அதிநவீன ட்ராக்கிங் கருவிகள் வந்துவிடவே, தேவயில்லாமல் புறாக்களை இம்சிப்பானேன் என்று இந்த முறை பயன்படுத்தப் படாமல் போயிருக்கிறது. கடலில் கப்பல் கவிழ்ந்து போய், நீரில் மிதந்து உயிருக்குப் போராடும் நபர்களைக் கண்டுபிடிக்கவும் இந்தப் புறாக்கள் பயன்பட்டன. கடல் நீலத்தில் ஒரு ஆரஞ்சு பொட்டு – அதாவது தத்தளிப்போரின் லைஃப் ஜாக்கெட் தெரிந்தால் போதும்
, இவை உடனே கொத்தி அடையாளம் காட்டும். மனிதனை விட இந்தப் புறாக்களின் பார்வை கூர்மையானது. இவைகளுக்கு அலுப்பு கிடையாது – கடலில் ஒரு மனிதனைக் கண்டுபிடித்துவிட்டு, ஒரு யுகம் கழிந்து தான் அடுத்த மனிதன் தெரிவான் என்றாலும், இவை அரட்டை அடித்துக் கோட்டை விடுவதில்லை. உஷாராக இருந்து காரியத்தைக் கச்சிதமாக முடிக்கும். இவற்றின் தேவையெல்லாம், கொஞ்சம் நெல் – அவ்வளவுதான். எனவே, இனி யாரும் புறாக்களிடம் வம்பு வைத்துக்கொள்ளாதீர்கள். எதிர்காலத்தில், அந்தப் புறா ஏதேனும் ஏவுகணைக்குள் ஒளிந்து வந்து உங்களைக் காட்டுத் தாக்கு தாக்கினாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை. புள்ளினங்களுக்குள் ஒரு வல்லினம்!


