
A stork scene
பெங்களூரிலிருந்து 120 கி.மீ தொலைவில் இருக்கும் அழகான நகரம் மைசூரு. மைசூருக்கு 10 கி.மீ முன்பு வலது புறமாகச் செல்லும் சிறிய சாலையில் இறங்கி, ஒரு 5 கி.மீ அளவுக்குச் சென்றால் கிடைக்கிற இயற்கையின் அற்புதமான படைப்பு தான் ரங்கனதிட்டு பறவைகள் சரணாலயம். ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் தொடங்கி ஏப்ரல் மாதம் முடிய உலகின் பல நாடுகளிலிருந்தும் வரும் விதவிதமான வண்ணமிகு பறவைகளைக் காண சரியான இடம் தான் ரங்கனதிட்டு.
நானும் எனது நண்பர்கள் கார்த்திகேயன், சுப்ரமணியன் – மூவரும் இந்த பறவைகள் சரணாலயத்திற்குச் செல்வது என்று முடிவு செய்தோம். அதிகாலை 6 மணிக்குக் கிளம்புவது சரியாக இருக்கும். பெங்களூரு-மைசூரு சாலை நல்ல அகலமாகவும், மேடு பள்ளங்கள் இன்றி சீராகவும் இருப்பதால், 2 முதல் 2.5 மணி நேரத்தில் 120 கி.மீ தொலைவில் உள்ள ரங்கனதிட்டுவை அடைந்துவிடலாம். நாங்கள் சரியாக 8.30 மணிக்கு இவ்விடத்தை அடைந்தோம். இங்கு காலை வேளையில் செல்வது தான் மிகவும் உசிதம். ஏனென்றால், வெயில் அதிகமாக அதிகமாக, பறவைகள் அவ்வளவாகப் பறக்காமல் தங்கள் மரங்களிலேயே தங்கியிருந்து குஞ்சுகளைப் பாதுகாப்பதில் மும்முரமாக இருக்கும். அதனால், அவற்றைச் சரியாகப் பார்க்க முடியாது. நமக்கும் வெயிலில் சாவகாசமாகப் பார்ப்பது கடினம்.

Painted Stork
ரங்கனதிட்டுவிற்குச் செல்லும் பாதையில் நுழையும் போதே சில வண்ணமயமான Painted Stork எனப்படும் செங்கால் நாரைகள் வானில் பறந்து போவதைப் பார்த்தேன். அது ஒரு கண்கொள்ளாக் காட்சி. இவ்வளவு அழகான பறவைகளை இவ்வளவு கிட்டத்தில் பார்ப்பேன் என்று நான் எண்ணிப்பார்த்ததில்லை. இது மேலும் எனது ஆவலைத் தூண்டியது. போதாக்குறைக்கு, எனது Nikon D80 நிழற்படக் கருவியையும் கையோடு எடுத்துச் சென்றிருந்தேன். மிகுந்த எதிர்பார்ப்புகளோடு சென்ற எங்களை நுழைவு வாயிலில் நிறுத்தினார்கள். காலை 9 மணிக்கு தான் சரணாலயத்திற்குள் செல்ல அனுபதிப்பார்களாம். நாங்கள் ஏமாற்றத்தோடு காத்திருந்த போது, ஒரு 5-10 நிமிடங்கள் கழித்து அங்கு இருந்ந்த அலுவலர் எங்களை உள்ளே அனுமதித்தார். காரில் சென்றதால், ஏறத்தாழ 100-150 ரூபாய் நுழைவுக் கட்டணம் கொடுத்ததாக நினைவு.உள்ளே வாகனங்களை நிறுத்துவதற்கு நல்ல பரவலான இடம் ஒதுக்கியிருக்கிறார்கள். ரங்கனதிட்டு சரணாலயமானது காவிரி நதியின் ஒரு பகுதியாக அமைந்திருப்பதால், இவ்விடம் காவிரிக் கரையில் ஒரு அழகான பூங்கா போல் அமைக்கப்பட்டுள்ளது. சின்ன குளம், மீன்கள், ஏராளமான மரம் – செடிகொடிகள் என ரம்யமாக

Eurasian Spoonbill
இருக்கிறது. சிறிய தொலைவே நடப்பதற்குள் காவிரியாற்றை அடைந்துவிடுகிறோம். அதன் பின் காணும் காட்சிகளை வருணிக்க வார்த்தைகளைத் தேட வேண்டியிருக்கும்.
அத்ற்கு முன் இன்னபிற logistics பற்றிச் சொல்லிவிடுகிறேன். இந்த சரணாலயத்தில் பறவைகளைப் பார்த்து மகிழ சரியான உத்தி, அங்கிருக்கும் படகில் சென்று பார்ப்பதுதான். படகிற்கு, அரை மணி நேரத்திற்கு 250 ரூபாய் வசூலிக்கிறார்கள். 1 மணி நேரம் என்றால் 500 ரூபாய். நீங்கள் தனியாக ஒரு படகினை அமர்த்திக்கொள்ளலாம், அல்லது, அங்கு வந்திருக்கும் மற்ற பயணிகளோடு சேர்ந்து ஒரு படகில் பயணம் செய்யலாம். ஒரு படகில் 8 பேர் செல்லலாம் என்று நினைக்கிறேன். நாங்கள் தனியாக ஒரு படகினை அமர்த்திக்கொண்டு பயணத்தைத் தொடங்கினோம்.
ரங்கனதிட்டுவில் ஒரு அற்புதம் என்னவென்றால், மரக்கிளைகளில் அமர்ந்திருக்கும் இந்தப் பறவைகளை அம்மரங்களின் அருகிலேயே சென்று மிக நன்றாகக் கண்டு களிக்கலாம். இப்பறவைகளும், மனிதர்க்ள் அங்கு வந்து செல்வதற்குப் பழகிப்போயிருப்பதால், நம்மை அவ்வளவாகக் கண்டுகொள்வதில்லை. தாம் உண்டு, தம் குஞ்சுகளுண்டு என்று இருக்கின்றன. இதனால், மிக அண்மையில் பார்த்து, சிறப்பான நிழற்படங்கள் எடுப்பதற்கு மிக ஏதுவாக இருக்கிறது. ஒரு விடயத்தில் கவனம் தேவை. இங்கே நீரில் முதலைகள் உண்டு. அதனால், எச்சரிக்கையாக இருப்பது அவசியம். இங்கு நீரில் முதலைகள் இருப்பதால், குரங்கு, நரி போன்ற மற்ற மிருகங்கள் எவையும் நீருக்குள் இறங்குவதில்லை. பறவைகளும் நீரின் நடுவே இருக்கிற மரங்களில் மட்டுமே கூடுகளைக் கட்டுகின்றன.

River tern landing
இம்முதலைகள் இவ்வகையில் பறவைகளைப் பாதுகாக்கின்றன. பறவைகளின் முட்டைகளோ குஞ்சுகளோ தவறுதலாக ஆற்றில் விழும் போது முதலைகள் அவற்றை இரையாக்கிக் கொள்கின்றன.
மற்ற சமயங்களில் மீன்கள் இவற்றிற்கு இருக்கவே இருக்கிறதே. எனவே, இவ்விடம் பறவைகளுக்கு இயற்கையான பாதுகாப்பிடமாக பல மில்லியன் ஆண்டுகளாக இருந்து வருகிறது என்பது நிதர்சனமாகிறது.
நம்மூரில் குளிர்காலம் தொடங்கும் நவம்பர்-டிசம்பர் மாதங்களில், ஆஸ்திரேலியா, சைபீரியா போன்ற பல ஆயிரம் கி.மீ-களுக்கு அப்பாலிருக்கும் நாடுகளிலிருந்து இப்பறவைகள் இந்தியாவிற்கு ஆகாய மார்க்கமாக வருகின்றன. இனச்சேர்க்கை முடிந்து, முட்டைகள் இட்டு, குஞ்சுகள் பொரித்து, அவை வளர்ந்து பெரிதாகி அவையும் பறப்பதற்குத் தயாராகும் தருணம் வரை இவை இங்கேயே தங்கியிருக்கின்றன. பின்னால், வெயில் காலம் தொடங்கும் மார்ச்சு-ஏப்ரல் மாதங்களில், ஒவ்வொரு பறவைக் குடும்பங்களாக, தத்தமது குஞ்சுகளோடு தமது நாட்டிற்குச் சென்று விடுகின்றன. மீண்டும் அடுத்த குளிர்காலம் தொடங்கும் போது திரும்புகின்றன. இந்த cycle, பல மில்லியன் ஆண்டுகளாகத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Cormorants
அதிகப் பரவலாக இங்கு காணப்படும் பறவைகள் – நாரை வகைகள். இவை தான் பல்வேறு வண்ணங்களில் நம் கண்களுக்குப் பளிச்சென்று புலப்படுகின்றன. குறிப்பாக, செங்கால் நாரைகள் (Painted Storks). அழகான ஆரஞ்சு நிறத்தில் நீளமான அலகுகளை உடைய இவை, சாதாரணமாக சாம்பல் நிறத்தில் இருக்கும். இனச்சேர்க்கை சமயங்களில், கருப்பு – சிகப்பு என்று பல வண்ணங்களில் இறகுகளை வளர்த்துக் கொண்டு அட்டகாசமாகக் காட்சியளிக்கின்றன. இவை தான் ரங்கனதிட்டுவின் ‘highlight’ என்று சொல்லலாம்.
அதன் பிறகு, பிளவு பட்டது போன்ற அலகினையுடைய ‘Openbilled Storks‘ எனப்படும் நத்தை கொத்தி நாரைகள். இவற்றின் அலகுகள் சேராமல் இருந்து, முனையில் மட்டும் சேர்கின்றன. மற்றொரு interesting-ஆன நாரையினம், ‘Spoonbilled Storks‘ எனப்படும் கரண்டி மூக்கு நாரைகள். நன்கு தட்டி வைத்தது போன்று அகலமான, தட்டையான, தோசைக் கரண்டி போன்ற அல்குகள் கொண்டிருக்கின்றன. இவ்வலகுகள், இவற்றிற்கு மீன்களை எளிதில் பிடிக்க உதவுகிறன. ஒரு கவனிக்க வேண்டிய விடயம் என்னவென்றால், இந்த கரண்டி மூக்கு நாரைகள் மார்ச்சு மாதத்தோடு தங்களின் நாடுகளுக்குத் திரும்பிவிடுகின்றன. எனவே, இவற்றைக் காண மார்ச்சுக்கு முன்பு போகவேண்டும்.

Lotus Pond
இந்த நாரையினங்கள் எல்லாம், தண்ணீரில் நீண்ட நேரம் நின்று நீர் அருந்திக் கொண்டிருப்பது போல் தோன்றுகின்றன, எனினும், உண்மையில், இவை தமது அலகுகளில் நீரினைச் சேகரித்துக் கொண்டு, பின் பறந்து சென்று, மரங்களில் இருக்கும் தமது குஞ்சுகளை நீர் அருந்தச் செய்கின்றன. இன்னொரு பார்ப்பத்ற்கரிய காட்சி, ‘Pelican‘ எனப்படும் கூழைக்கடாக்கள். இப்பறவைகள், நீரின் பரப்பிற்கு சற்று மேலே பறந்தவாறே சென்று, சட்டென்று த்மது தலையை நீருக்குள் விட்டு மீன்களைப் பிடித்துவிடுகின்றன. கூழைக்கடாக்களுக்கு அலகின் அடிப்பாகத்தில் ஒரு பை போன்ற அமைப்பு இருக்கிறது. இதில் மீன்களைச் சேகரித்துக் கொண்டு, தம் குஞ்சுகளுக்குச் சென்று அவற்றை ஊட்டுகின்றன. இவை பறந்து சென்றவாறே மீன் பிடிக்கும் அழகே அழகு.

Night Heron in Penance
மேலும், ரங்கனதிட்டுவில் காணப்படும் பறவைகள், சிறிய உடலமைப்பினை உடைய ‘Night Heron‘ எனப்படும் வக்கா. இது இரவில் மட்டுமே இரைதேடும் ஒரு அரிய பறவை. இவற்றை மிகுதியாக சென்னை அருகே உள்ள வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் காணலாம். இன்னும், ‘Little Egret‘ எனப்படும் சின்ன வெள்ளைக் கொக்குகள், ‘Cattle Egret‘ எனப்படும் உண்ணிக் கொக்குகள், ‘Median Egret‘ எனப்படும் வெள்ளைக் கொக்குகள், ‘Indian River Tern‘ எனப்படும் குளத்து ஆலா, ‘Little Cormorant‘ எனப்படும் நீர் காகம், ‘Swallow‘ எனப்படும் தலை இல்லாத குருவி, ‘Darter‘ எனப்படும் பாம்புத்தாரா, ‘White Ibis‘ எனப்படும் வெள்ளை அரிவாள் மூக்கன், ‘Partridge‘ எனப்படும் கௌதாரி, என்று சொல்லிக்கொண்டே போகலாம். இன்னும் இவ்விடத்திலேயே indigenous-ஆகக் காணப்படும் பறவைகளும் உண்டு. மயில், புறா, ஆந்தை போன்ற பறவைகளும் பார்க்க முடிந்தது.
குறிப்பிட்டுச் சொல்லும் படியான பறவை – குளத்து ஆலா. இது அங்கிருக்கும் பாறைகள் மீது தான் முட்டையிடுகிறது. ஆனால், முதலைகள் இவற்றை நெருங்குவதில்லை. ஏனென்றால், இவை முதலைகளின் கண்களைக் கொத்திவிடுமாம். என்னே தற்காப்பு!

Openbilled Stork
இவை நாரைகளை விடச் சற்று தாமதமாக முட்டையிடுகின்றன. ஏனென்றால், கோடைக் காலம் ஆரம்பமாகும் போது ஆற்றில் நீர் குறைந்து பாறைகள் மூழ்காமல் நல்ல பரவலாக இருக்கும் போது தான் இவை அப்பாறைகளின் மீது முட்டையிட முடிகிறது.
மழை ஆரம்பமாவதற்குள் தமது குஞ்சுகளைப் பயிற்றுவித்து அழைத்துச் சென்றுவிடுகின்றன.
இயற்கையின் படைப்பில் எத்தனை விந்தைகள்!
இந்த பலதரப்பட்ட பறவைகளையும் நிதானமாக 1 மணி நேரம் பார்த்து ரசித்து, நிழற்படங்கள் நிறைய எடுத்துக் கொண்டு கிளம்பினோம். மீண்டும் அடுத்த வருடம் வரவேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டோம். அடுத்து வருகிற ஜூன் – ஜூலை மாதங்களில், மழைக் காலத்தில் இனச்சேர்க்கை கொள்ளும் வெள்ளை அரிவாள் மூக்கன்களை (White Ibis) நிறைய பார்க்கலாம். இவை மழைக்காகவே இங்கு வருகின்றனவாம். இவ்விடயங்களையெல்லாம் எங்களுக்கு விளக்கமாக எடுத்துச் சொன்ன எங்களின் படகினைச் செலுத்தி வந்த அன்பருக்கு மிக்க நன்றிகள்.
ஜனவரி மாதம் என்றாலே சென்னையில் என் போன்ற புத்தகப் புழுக்களுக்குக் கொண்டாட்டம் தான். ஆண்டுதோறும் சென்னையில் எல்லோரும் ஆவலோடு எதிர்பார்த்திருக்கும் சென்னை புத்தகக் காட்சி ஆண்டுக்கு ஆண்டு மெருகேறிக் கொண்டே போகிறது. வழக்கமான இடத்தில் இல்லாமல், இம்முறை பூந்தமல்லி நெடுஞ்சாலையில், பச்சையப்பன் கல்லூரிக்கு எதிரில் உள்ள பள்ளியில் காட்சியை அமைத்திருக்கிறார்கள்.
இவ்விடத்தில் முதல் நல்ல விஷயம், போக்குவரத்து இடர்பாடு இல்லாமல் எளிதில் சென்றடைய முடிகிறது. வெளியில் வைத்திருக்கும் வண்ணமயமான வரவேற்பு வளைவைத் தாண்டிச் சென்று, உள்ளே ஏராளமாக இருந்த parking area-வில் வண்டியை நிறுத்தினோம்.
குமுதம், விகடன், எக்ஸ்பிரஸ் என்று எல்லோரும் சேர்ந்து வரவேற்றார்கள். நுழைவுச்சீட்டு வாங்க நேராகச் சென்ற எங்களுக்கு ஒரு சின்ன இன்ப அதிர்ச்சி. நடிகர் சூர்யா எழுதிய “இப்படிக்கு சூர்யா” என்ற நூல் வெளியீடு விழா நடந்து கொண்டிருந்தது. அலையன்ஸ் பதிப்பகத்தின் வெளியீடு. பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்கள் புத்தகத்தை வெளியிட்டு வாழ்த்துரை வழங்கிக் கொண்டிருந்தார். எதேச்சையாக வந்த கூட்டத்தைத் தவிர பெரிய கூட்டம் இல்லை. அதனால், சூர்யாவை அருகில்
சென்று கண்குளிர (ஹிஹி… என்ன பண்றது…?) பார்த்து டிஜிக்கேமில் படங்கள் எடுத்துக் கொண்டோம். சூர்யா எப்படியெல்லாம் பெற்றோருக்கு அடங்கிய சமர்த்துப் பிள்ளையாக இருக்கிறார் என்பது பற்றி பாப்பையா பேசிக்கொண்டிருந்தார். அங்கேயே புத்தகம் வாங்குகிறவர்களுக்கு சூர்யா கையெழுத்திட்டுத் தருவார் என்றதும் பல இளைஞர் இளைஞிகள் மேடையை மொய்த்தனர். நாங்கள் ticket counter-ஐ நோக்கி நடந்தோம்.
ஐந்து ரூபாய் நுழைவுச்சீட்டு வாங்கிக் கொண்டு உள்ளே நுழைந்ததும் முதலில் கவனித்த விஷயம், பிளைவுட் தரை அமைத்திருந்தார்கள். தூசு, மேடு-பள்ளம் என்ற கவலையெல்லாம் இல்லை. இன்னும் அந்த மைதானம் முழுவதற்குமாகப் பெரிய பந்தல் அமைத்திருந்தார்கள். ஆங்காங்கே மின்விசிறிகள்
அமைத்திருந்தார்கள். குறுக்கும் நெடுக்குமாகப் போவது போல் இல்லாமல், வரிசையாக ஸ்டால்களை அமைத்திருந்தார்கள். ஒரு வரிசையை முடித்துவிட்டு, நேராக, அடுத்த வரிசைக்குச் செல்லலாம். அதுமட்டுமின்றி, நல்ல அகலமான பாதை. சென்ற ஆண்டு நடந்தது போல தள்ளுமுள்ளு அனுபவமெல்லாம் இம்முறை கிடையாது. நிறைய கூட்டம் இருந்தபோதும், free-யாக நடக்க முடிந்தது.
புத்தகக் காட்சியில் பெருவாரியாகக் கண்ணுக்குத் தெரிந்த புத்தகங்கள், குழந்தைகளுக்கானவை தான். இளமையிலேயே படிக்கும் ஆர்வத்தைத் தூண்டும் முயற்சி என்றால், பாராட்டலாம். இரண்டாமிடம் ஆன்மீகப் புத்தகங்களுக்கு.
புதிது புதிதாகப் பல ஆன்மீகவாதிகள் தோன்றிக் கொண்டே இருக்கிறார்கள். சென்ற ஆண்டுக்கு இந்த ஆண்டு ஆன்மீகம் அதிகமாகி இருக்கிறது என்று நினைக்கிறேன். (என் கற்பனையாகவும் இருக்கலாம்). அதன் பின்னால், எப்போதும் போல், பணம் பண்ணுவது எப்படி, வேலை தேடுவது எப்படி போன்றவைகள். எனக்கு மிகவும் பிடித்தமானவை, புத்தக விநியோகஸ்தர்களின் (distributors) ஸ்டால்கள் தான். அவர்களிடம் பல ஊர்களிலிருந்தும், பல நாடுகளிலிருந்தும் பலரும் எழுதும் quality writing கிடைக்கிறது. அது தவிர, பல நம் ஊர் பதிப்பகங்கள் வாயிலாக, புதிய படப்பாளாகளை அடையாளம் காண முடிந்தது. பொதுவாக புத்தகக் கடைகளில் கிடைப்பதை விட இங்கு 10% விலை குறைவு என்பது ஒரு பிளlt;br /> ?் பாயிண்ட்.
புஸ்தக் மஹால், திருமகள் நிலையம், கிழக்கு பதிப்பகம், உயிர்மை பதிப்பகம் என்று பல ஸ்டாலகளில் பலப்பல புத்தகங்கள் வாங்கித் திணித்துக் கொண்டேன். ஒரு வருடம் முழுவதற்கும் வேண்டுமல்லவா? உயிர்மை பதிப்பகத்தில் மனுஷ்யபுத்ரன் அவர்களைப் பார்த்தது இரட்டிப்பு மகிழ்ச்சி.
பல இடங்களில் மின்விசிறிகள் வைத்திருந்தாலும், காற்றோட்டமாக இல்லாமல் கொஞ்சம் அடைப்பாக இருந்தது ஒரு குறை. அதுவுமில்லாமல், வரிசைகள் நீளமாக இருந்ததும், ஒரு வரிசை முழுவதும் கடந்து தான் அடுத்த வரிசைக்குப் போகவேண்டியிருந்ததும் கொஞ்சம் கஷ்டமாக இருந்தது. ஸ்டால்களுக்கு இடையில் இருந்த இடைவெளிகளில் தடுப்புகள் போட்டிருந்தார்கள். பல தடுப்புகள் தள்ளப்பட்டு, மக்கள் அடுத்த வரிசைக்குச் செல்ல குறுக்கு வழிகள் ஏற்படுத்தியிருந்தார்கள். ஆங்காங்கே தண்ணீர் வைக்கப்பட்டிருந்தது. ஆனால், காட்சிக்கு உள்ளே எதுவும் உண்பதற்குக் கிடைக்கவிலை.
இது ஒரு விதத்தில் நன்றாக இருந்தாலும், கிட்டத்தட்ட 400 ஸ்டால்கள் இருப்பதால், பாதி முடிப்பதற்குள் சோர்வாகிவிடுகிறது. எதுவும் உள்ளே போகாமல் முழுவதும் முடிப்பது சிரமம். ஆனால், கண்காட்சிக்கு விளியில், பெரிய அரங்கம் அமைத்து “The Rice Bowl” என்ற பெயரில் food court அமைத்திருக்கிறார்கள். மிகவும் வரவேற்கத்தக்கது. (ஹிஹி…).
Prodigy ஸ்டாலில் புதிய முயற்சியாக குழந்தைகளுக்காக, ஓவியம் தீட்டும் போட்டிகள் நடத்துகிறார்கள்.
பல குழந்தைகளை வரைய விட்டு அம்மாக்கள் அவர்களை மேய்த்துக் கொண்டிருந்தார்கள். வெளியே மற்றுமொரு சிற்றரங்கத்தில் அறிவியல் காட்சி அமைக்கப்பட்டிருந்தது குழந்தைகளுக்கும் சிறுவர்-சிறுமிகளுக்கும் பயனளிக்கும். இன்னும் ஆவணப் படங்கள் போன்றவற்றுக்காக சிற்றரங்கம் அமைத்திருந்தார்கள். நேரமின்மையால் இவற்றைக் கவர் பண்ண முடியவில்லை. இம்முறை காட்சியில் ஸ்டால்கல் எல்லாம் Chennai Trade Centre-இல் இருப்பது போல் நேர்த்தியாகவும் கச்சிதமாகவும் அமைத்திருந்தது குறிப்பிடவேண்டிய விஷயம். எல்லாம் முடித்துக் கொண்டு வெளியில் வந்த போது, கங்கை அமரன் அவர்களின் இசை நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. சில நல்ல பழைய பாடல்களைப் பாடிக் கொண்டிருந்தார்கள்.
புத்தகக் காட்சியில் எல்லா தரப்பினருக்கும் ஏதேனும் கிடைக்கிறது. என் போன்றவர்களுக்கு எல்லாமே கிடைக்கிறது. BAPASI நடத்தும் இந்தப் புத்தகத் திருவிழாவிற்குத் தமிழக முதல்வர் permanent-ஆக நிலம் ஒதுக்க இசைந்திருப்பது வரவேற்கத்தக்கது. இன்னும் தன் சொந்தப் பணத்திலிருந்து ஒரு கோடி ரூபாய் எழுத்தாளர்களுக்காக வழங்கியிருக்கிறபடியால் கலைஞரைப் பாராட்டலாம். சென்னையில் புத்தகக் காட்சி பற்றி இன்னும் அதிகமாக விளம்பரமும் விழிப்புணர்வும்
ஏற்படுத்துவது அவசியம். தமிழக-தென்னக-இந்திய எழுத்தாளர்களின் படைப்புகளோடு, அதிகமான அளவில் உலக எழுத்தாளர்களின் படைப்புகளையும் அவற்றின் தமிழாக்கப் பதிப்புகளையும் கொண்டு வரலாம். இன்னும், தமிழ் புத்தகங்களின் அச்சுத் தரத்தை மேம்படுத்தலாம். Travelogues, Armchair Reading, Satires போன்ற விஷயங்களைத் தமிழில் அதிகமாகவும் அழகாகவும் வெளியிட முயலலாம். இது போன்ற படைப்புகளுக்கு பதிப்பகத்தாரும், அவ்வண்ணமே அரசாங்கமும் ஊக்கமளித்தால், தமிழின்-தமிழரின் ப்டைப்புகளில் ஒரு variety-யைக் கொண்டுவர முடியும். தமிழ் கற்றவர்களின் அறிவுத் தேடல்களுக்கு நல்ல தீனி போட முடியும்.
கற்றது கைம்மண்ணளவு – கல்லாதது உலகளவு! அனைவருக்கும் இனிய பொবt;br /> ??்கல் நல்வாழ்த்துகள்!
என் சிறு வயது முதலே, டிசம்பர் மாதத்து மத்தியில் மார்கழி மாதம் தொடங்கியதும் எங்கள் வீடு களை கட்டும். மார்கழி என்றாலே கோலங்கள் தானே. சிறியதும் பெரியதுமாய் வண்ணக் கோலங்கள். எங்கள் வீட்டில்
பெண் பிள்ளைகள் யாரும் இல்லை என்பதால், கோலம் போடுவதில் அம்மா – பாட்டிக்கு அஸிஸ்டென்ட் வேலை செய்யும் விதமாகத் தொடங்கியது என் கோல மோகம். கோலங்களுக்கு கலர் போடுவதில் தொடங்கி, பின்னர் படிப்படியாக புள்ளி வைத்துக் கோலம் போடுவது முதல், பல காம்ப்ளிகேஷன்கள் கொண்ட கம்பிக் கோலங்கள் போடுவது வரை பலவும் பழகியிருக்கிறேன். பக்கத்து வீட்டார் கொண்டு வந்து கொடுத்த கோலப் புத்தகத்தில் இருந்த கோஅங்களையெல்லாம் காப்பி அடித்து நோட்டில் வரைந்து வைக்க ஆரம்பித்து, பின்னால், அதை அடிப்படையாகக் கொண்டு மண் தரையில் கோலமாவில் மாக்கோலம் போடும் அளவுக்குக் கைதேர்ந்தவனானேன் என்பதில் எனக்கு நிறைய பெருமிதம் உண்டு.
;
அப்போதெல்லாம், கோலம் என்றாலே எல்லோரும் சங்கு கோலம், மயில் கோலம், கத்திரிக்காய் கோலம், ரோஜா கோலம் என்று சில ஸ்டாண்டர்ட் கோல வகைகள் வைத்திருப்பார்கள். இவையெல்லாம் பல யுகங்களாகப் போட்டிருப்பார்கள் என்று நினைக்கிறேன். கண்ணிமைக்கும் நேரத்தில் கத்திரிக்காய் கோலம் போட்டு விடுவார்கள். அவ்வளவு பிராக்டிஸ். இன்னும், பஃபூன் கோலம், தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை கோலம், என்றெல்லாம் உண்டு. பின்னர் தான் கொஞ்சம் கொஞ்சமாக, விகடன், குமுதம் போன்ற அறிவுக் களஞ்சியங்கள் வாயிலாக மக்கள் புதுப்புது கோலங்களைக் கற்க ஆரம்பித்தார்கள். இன்றைக்கு, கோலத்திற்கென்றே பட்டயப் படிப்பு இருக்கிறதென்று யாராவது சொன்னால் ஆச்சரியப்படுவதற்கில்லை.
என்னதான் விதம் விதமாகக் கலர் கோலங்கள் போட்டாலும், எனக்கு எப்போதும் கம்பிக் கோலங்கள் மீது நிறைய பாசம் உண்டு. கம்பி கோலங்கள் தான் ஒரு கோல வல்லுனரின் நிபுணத்துவத்தை (expertise) பறைசாற்றுவது போல இருக்கும். என்னிடம் இருந்த கலெக்ஷனிலேயே மிகவும் கடினமான கம்பிக் கோலங்களைக் கண்டுபிடித்து, அவற்றையெல்லாம் பழகி, இரவு நேரங்களில் போடுவேன். என் வீட்டில் இரவில் தான் கோலம் போடுவர்கள். மார்கழி பனியில் அதிகாலை எழுந்து குளித்துவிட்டுக் கோலம் போடுவதெல்லாம் கிடையாது. எங்கள் தெரு முழுவதும் இரவில் கோலம் போடுவார்கள். எல்லோரும் போட்டி போட்டுக்கொண்டு கோலங்கள் போடுவார்கள். பின்னர், தெரு பெரியவர்கள் ஒவ்வொரு கோலமாகப் பார்த்து மார்க் போடுவதும் நடக்கும். நன்கைந்து பேர் சுற்றி நின்றுகொண்டு கோலம் போடுவதைப் பார்த்தார்கள் என்றால், நாம் பாஸ். நிறைய முறை என் கோலம் பாஸ் ஆகியிருக்கிறது. ஃபர்ஸ்ட் கிளாஸில் எல்லாம் கூட…
இப்போதெல்லாம் கோலங்கள் குறைந்து விட்டன. இன்னும் எங்கள்
தெருவில் கோலம் போடுகிறார்கள். ஆனால் முன்பிருந்த போட்டி, வேகம் எல்லாம் இல்லை. நானும் கல்லூரி, வேலை என்று விலகி விட்டதால் என் அம்மாவும் பாட்டியும் தான் இன்றைக்கும் கோலம் போடுகிறார்கள். பல நண்பர்கள் வீடுகளில் எல்லாம் கோலம் போடுமளவிற்கு வீட்டின் வாசலில் இடம் இல்லை. குறிப்பாக, இப்போது அனைவரும் பிளாட்டுகளில் வசிப்பதால், ஸ்டிக்கர் கோலம் வாங்கி வந்து, கதவின் வெளியில் ஒட்டி விடுகிறார்கள். ஒரு மார்கழியிலிருந்து அடுத்த மார்கழி வரும் வரைக்கும் ஒரே ஸ்டிக்கர் தான். கத்திரிக்காய் கோலம் எல்லாம் மலையேறிவிட்டது என்று நினைக்கிறேன். சங்கு கோலம் பட்டும் இன்னும் பல இடங்களில் பார்க்க முடிகிறது. என்ன இருந்தாலும், இன்றைக்கும் தேர் வடிவில் கம்பிக் கோலம் யாராவது போட்டிருந்தால், இரண்டு நிமிடம் நின்று பார்த்து ரசித்துவிட்டுச் செல்கிறேன். நாளைக்கு இருக்குமோ இருக்காதோ…!