Amusingly Simple

A blog by Deepak Venkatesan

மார்கழியில் மாக்கோலங்கள்

2 comments

என் சிறு வயது முதலே, டிசம்பர் மாதத்து மத்தியில் மார்கழி மாதம் தொடங்கியதும் எங்கள் வீடு களை கட்டும். மார்கழி என்றாலே கோலங்கள் தானே. சிறியதும் பெரியதுமாய் வண்ணக் கோலங்கள். எங்கள் வீட்டில் படத்தில் இருப்பதி simple தேர்க் கோலம். நிஜமான தேர்க் கோலத்தின் படம் கிடைக்கவில்லை.பெண் பிள்ளைகள் யாரும் இல்லை என்பதால், கோலம் போடுவதில் அம்மா – பாட்டிக்கு அஸிஸ்டென்ட் வேலை செய்யும் விதமாகத் தொடங்கியது என் கோல மோகம். கோலங்களுக்கு கலர் போடுவதில் தொடங்கி, பின்னர் படிப்படியாக புள்ளி வைத்துக் கோலம் போடுவது முதல், பல காம்ப்ளிகேஷன்கள் கொண்ட கம்பிக் கோலங்கள் போடுவது வரை பலவும் பழகியிருக்கிறேன். பக்கத்து வீட்டார் கொண்டு வந்து கொடுத்த கோலப் புத்தகத்தில் இருந்த கோஅங்களையெல்லாம் காப்பி அடித்து நோட்டில் வரைந்து வைக்க ஆரம்பித்து, பின்னால், அதை அடிப்படையாகக் கொண்டு மண் தரையில் கோலமாவில் மாக்கோலம் போடும் அளவுக்குக் கைதேர்ந்தவனானேன் என்பதில் எனக்கு நிறைய பெருமிதம் உண்டு.

;

அப்போதெல்லாம், கோலம் என்றாலே எல்லோரும் சங்கு கோலம், மயில் கோலம், கத்திரிக்காய் கோலம், ரோஜா கோலம் என்று சில ஸ்டாண்டர்ட் கோல வகைகள் வைத்திருப்பார்கள். இவையெல்லாம் பல யுகங்களாகப் போட்டிருப்பார்கள் என்று நினைக்கிறேன். கண்ணிமைக்கும் நேரத்தில் கத்திரிக்காய் கோலம் போட்டு விடுவார்கள். அவ்வளவு பிராக்டிஸ். இன்னும், பஃபூன் கோலம், தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை கோலம், என்றெல்லாம் உண்டு. பின்னர் தான் கொஞ்சம் கொஞ்சமாக, விகடன், குமுதம் போன்ற அறிவுக் களஞ்சியங்கள் வாயிலாக மக்கள் புதுப்புது கோலங்களைக் கற்க ஆரம்பித்தார்கள். இன்றைக்கு, கோலத்திற்கென்றே பட்டயப் படிப்பு இருக்கிறதென்று யாராவது சொன்னால் ஆச்சரியப்படுவதற்கில்லை.

என்னதான் விதம் விதமாகக் கலர் கோலங்கள் போட்டாலும், எனக்கு எப்போதும் கம்பிக் கோலங்கள் மீது நிறைய பாசம் உண்டு. கம்பி கோலங்கள் தான் ஒரு கோல வல்லுனரின் நிபுணத்துவத்தை (expertise) பறைசாற்றுவது போல இருக்கும். என்னிடம் இருந்த கலெக்ஷனிலேயே மிகவும் கடினமான கம்பிக் கோலங்களைக் கண்டுபிடித்து, அவற்றையெல்லாம் பழகி, இரவு நேரங்களில் போடுவேன். என் வீட்டில் இரவில் தான் கோலம் போடுவர்கள். மார்கழி பனியில் அதிகாலை எழுந்து குளித்துவிட்டுக் கோலம் போடுவதெல்லாம் கிடையாது. எங்கள் தெரு முழுவதும் இரவில் கோலம் போடுவார்கள். எல்லோரும் போட்டி போட்டுக்கொண்டு கோலங்கள் போடுவார்கள். பின்னர், தெரு பெரியவர்கள் ஒவ்வொரு கோலமாகப் பார்த்து மார்க் போடுவதும் நடக்கும். நன்கைந்து பேர் சுற்றி நின்றுகொண்டு கோலம் போடுவதைப் பார்த்தார்கள் என்றால், நாம் பாஸ். நிறைய முறை என் கோலம் பாஸ் ஆகியிருக்கிறது. ஃபர்ஸ்ட் கிளாஸில் எல்லாம் கூட…

இப்போதெல்லாம் கோலங்கள் குறைந்து விட்டன. இன்னும் எங்கள் தெருவில் கோலம் போடுகிறார்கள். ஆனால் முன்பிருந்த போட்டி, வேகம் எல்லாம் இல்லை. நானும் கல்லூரி, வேலை என்று விலகி விட்டதால் என் அம்மாவும் பாட்டியும் தான் இன்றைக்கும் கோலம் போடுகிறார்கள். பல நண்பர்கள் வீடுகளில் எல்லாம் கோலம் போடுமளவிற்கு வீட்டின் வாசலில் இடம் இல்லை. குறிப்பாக, இப்போது அனைவரும் பிளாட்டுகளில் வசிப்பதால், ஸ்டிக்கர் கோலம் வாங்கி வந்து, கதவின் வெளியில் ஒட்டி விடுகிறார்கள். ஒரு மார்கழியிலிருந்து அடுத்த மார்கழி வரும் வரைக்கும் ஒரே ஸ்டிக்கர் தான். கத்திரிக்காய் கோலம் எல்லாம் மலையேறிவிட்டது என்று நினைக்கிறேன். சங்கு கோலம் பட்டும் இன்னும் பல இடங்களில் பார்க்க முடிகிறது. என்ன இருந்தாலும், இன்றைக்கும் தேர் வடிவில் கம்பிக் கோலம் யாராவது போட்டிருந்தால், இரண்டு நிமிடம் நின்று பார்த்து ரசித்துவிட்டுச் செல்கிறேன். நாளைக்கு இருக்குமோ இருக்காதோ…!

Related Posts with Thumbnails

Written by Deepak

January 11th, 2007 at 10:14 pm

2 Responses to 'மார்கழியில் மாக்கோலங்கள்'

Subscribe to comments with RSS or TrackBack to 'மார்கழியில் மாக்கோலங்கள்'.

  1. இன்று காலை 6வது மாடியில் இருந்து இறங்கும் போது 3 வது மாடியில் உள்ள தமிழ் குடும்பம் வீட்டு வாசலில் அழகான மாடு ஒன்று போட்டு பொங்கலுக்கான அடையாளமாக சில கரும்புகளையும் போட்டிருந்தார்கள்.
    சிங்கை வீட்டில் கோலமா??
    ஒன்றும் புதுசு இல்லங்க, அவுங்க வீட்டில் “இந்திய பணிப்பெண் உள்ளார்”.

    [Reply]

    vaduvurkumar

    15 Jan 07 at 6:46 am

  2. கோலம் போடுவது ஒரு கலை. அது இன்னும் காப்பாற்றப்பட்டு வருவது வரவேற்கத்தக்கது.

    [Reply]

    Deepak

    15 Jan 07 at 1:08 pm

Leave a Reply