Amusingly Simple

A blog by Deepak Venkatesan

Archive for November, 2006

இப்போது தான் ஈ அடிக்கிறேன்

7 comments

ஆங்கிலத்தில் மிக அதிகமாக உபயோகிக்கப்படுகிற எழுத்து – ‘E’ தான். ‘அவனின்றி ஓரணுவும் அசையாது’ என்பது போல், ‘E’ இல்லையெனில் ஆங்கிலத்தில் வாக்கியங்களே இல்லை. இன்னும் E என்பது Energy-யைக் குறிக்கிற குறியீடு. எனர்ஜி என்பது சக்தி. E – ஆங்கில மொழியின் சக்தி. இன்று, அலுவலகத்தில் அடுத்த மேஜையில் இருக்கிறவரிடம் ஒரு தகவல் சொல்ல வேண்டும் என்றால் E-மெயில் அனுப்ப வேண்டியிருக்கிறது. வர்த்தகமெல்லாம் E-காமர்ஸாக மாறி வருகிறது. நாம் தினமும் உட்கொள்கிற உணவு செரிமானம் ஆவதற்கு, குடலுக்குள் இருக்கிற ‘E’.coli பாக்டீரியா தான் காரணமாக இருக்கிறது. இந்தத் தகவலையெல்லாம் என் கணிப்பொறியில் உள்ளீடு செய்வதற்கு E-கலப்பை என்ற மென்பொருளைத் தான் பயன்படுத்துகிறேன். ‘ஈ’ என்ற பெயரில் நயந்தாரா நடித்தப் படம் வந்து சக்கை போடு போடுகிறது. E என்ற பெயரில் கணிப்பொறி மொழி கூட உள்ளது.

கணிதத்தில் ‘e’ என்பது natural logrithms-ஐக் குறிக்கிறது. பள்ளிக்கூடத் தேர்வில் இந்த விஷயத்தைப் பக்கத்தில் இருக்கும் பையனைப் பார்த்து அட்சரம் பிசகாமல் எழுதினால் ‘ஈ’ அடிச்சான் காப்பி என்கிறார்கள். அறிவியல் மாமேதை ஐன்ஸ்டீன் புகழ் பெற்றதே ‘E’-யின் மதிப்பைச் சொல்லித்தான். இசையின் ஏழு ஸ்வரங்களில் ‘E’ தான் மூன்றாவது ஸ்வரம். ‘E’ என்ற எழுத்து குறிக்கிற electric field இல்லையேல் மின்சாரம் இல்லை, மின்னணுவியல் இல்லை, மின்காந்த அலைகள் இல்லை, டிவி, ரேடியோ, மொபைல், இணையம் – எதுவுமே இல்லை.

இதையெல்லாம் ஏன் சொல்கிறேன் என்று பார்க்கிறீர்களா? E என்பது நம் அன்றாட வாழ்வில் எவ்வளவு முக்கியம் என்பதை உணர்ந்து கொள்வதற்குச் சமீபத்தில் தான் எனக்கு வாய்ப்பு ஏற்பட்டது.

பல வருடங்களுக்கு முன்னால் ஒரு கவிதை எங்கேயோ படித்திருக்கிறேன் (தினத்தந்தி – குடும்ப மலர் என்று நினைக்கிறேன்). இன்னும் வரிகள் நினைவிலிருக்கிறது. வ்டித்தவர் பெயர் நினைவில்லை.

ஒன்றாய் இருந்த போது ஒட்டத் தெரியாத இதயம்,
ஒதுங்கிச் இருக்கும் போது ஒன்றிடத் தவிக்கிறது.

அது போல், E-யின் அருமை E இல்லாத போது தான் தெரிந்தது. என் அலுவலகக் கணிப்பொறியின் கீபோர்டில், E என்ற எழுத்து மட்டும் ஒரு பதினைந்து நாட்களாக வேலை செய்யவில்லை. அதனால், E அடிக்க முடியாமல் நான் ஈ அடித்துக் கொண்டிருந்த சமயத்தில் E பற்றி அறிந்து கொண்டேன்.

கடைசியாக என் கீபோர்டை மாற்றிவிட்டார்கள். அலுவலகத்தில் இப்போது நிம்மதியாக E அடித்துக் கொண்டிருக்கிறேன்.

Written by Deepak

November 12th, 2006 at 12:21 am

இன்றைய தமிழகம் பிறந்த நாள்

6 comments

தமிழ்நாடு, ஆந்திர, கர்நாடக, கேரள மாநிலங்களின் சில பகுதிகள் என்று அனைத்தையும் உள்ளடக்கியிருந்த ‘மெட்ராஸ் ப்ரெஸிடென்ஸி‘, மொழிவாரியாகப் பிரிக்கப்பட்டு, இன்றைய தமிழ்நாட்டைக் கொண்ட ‘மெட்ராஸ் ஸ்டேட்‘ உதயமானது நவம்பர் 1, 1956-இல். மாநிலங்கள் ம்றுசீரமைப்புச் சட்டம் (States Reorganisation Act, 1956) அமலாக்கப்பட்டதால், கர்நாடகா, ஆந்திரா, கேரளா என்று மொழி அடிப்படையில் தனித்தனி மாநிலங்கள் பிரிக்கப்பட்டு இன்றைக்குச் சரியாக 50 ஆண்டுகள் ஆகின்றன. கர்நாடகாவில் இந்நாளை, ‘கன்னட ராஜ்யோத்ஸவா‘ (Rajyotsava day) என்ற பெயரில் கொண்டாடுகிறார்கள். கேரளாவில் ‘கேரளப் பிறவி தினம்‘ என்று பெயர். ஆனால், அப்போது பிரிக்கப்பட்ட போது, மெட்ராஸ் ஸ்டேட், மைசூர் ஸ்டேட், நிஜாம் ஸ்டேட், கேரளா ஸ்டேட் என்று தான் பெயரிடப்பட்டன. பின்னர் 1968-இல் தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் பெற்றது யாவரும் அறிந்ததே.

கர்நாடகம் 1956-இல் தனியாகப் பிரிக்கப்பட்டாலும், மைசூர் என்ற பெயர் தான் இருந்தது. பின்னர் 1973-இல் கர்நாடகா என்ற பெயர் பெற்றது. அன்று முதன் ‘கன்னட ராஜ்யோத்ஸவம்’ கொண்டாடப்படுகிறது.

அதே போல, சுதந்திரத்திற்கு முன்னால், திருவாங்கூர், மலபார், கொச்சி என்று பிரிந்திருந்த மாநிலங்கள், கேரளா என்ற புதிய மாநிலமானது 1956-இல் தான். உலகெங்கும் இருக்கிற மலையாள நண்பர்கள், இந்நாளைக் ‘கேரளப் பிறவி’ என்று கொண்டாடுகின்றனர்.

இன்றைய மெட்ராஸ் ஸ்டேட்டில் ஐக்கியமாகியிருந்த ஆந்திராவைப் பிரித்துத் தனி மாநிலம் அமைக்கும் கோரிக்கை நெடுநாளாக இருந்து வந்தது. ‘மெட்ராஸ் மானதே’ என்று கோஷமிட்டு சென்னையைத் தலநகராகக் கொண்ட ஆந்திரா அமைக்க வேண்டிப் போராட்டங்கள் நடைபெற்றன. இருந்தாலும், அன்றைக்கு மாநிலத்திலும் மத்தியிலும் தமிழர்களின் ‘கை’ ஓங்கியிருந்ததால், சென்னை தமிழகத்திற்கே கிடைத்தது. 1952-இல் ‘குர்நூலை’த் தலைநகராகக் கொண்டு ஆந்திரா அமைக்கப்பட்டது. பின்னர் 1956-இல் தான் தெலங்கானா ஆந்திராவுடன் சேர்க்கப்பட்டு, ‘ஐதராபாத்’தைத் தலைநகராகக் கொண்டு இன்றைய ஆந்திரா பிறந்தது.

Related Posts with Thumbnails

Written by Deepak

November 1st, 2006 at 12:36 am