Amusingly Simple

A blog by Deepak Venkatesan

பிச்சாவரம் வனப்பகுதி – ஓர் இனிய அனுபவம்

12 comments

‘ஏவிசினியா மெரினா’ என்று அந்தப் படகோட்டி, மேங்குரோவ் மரங்களின் அறிவியல் பெயரைக் கூறிய போது, நான் ஒரு கணம் வாயடைத்துப் போனேன் – நானே பள்ளியில் படித்து மறந்து போன இப்பெயரை படிப்பறிவில்லாத இவர் இவ்வளவு அழகாகச் சொல்கிறாரே என்று. பின்னர் தான் தெரிந்தது, இப்பெயரை அங்குள்ள படகோட்டிகள் யாவரும் சொல்வார்கள் என்று. கடலூர் மாவட்டம் பிச்சாவரம் சதுப்புநிலப் பகுதி, கோடை வெயிலைத் தணிக்கும் ஒரு இனிய மாலைப் பொழுது அனுபவமாகவே அமைந்தது.  சிறு வயதில் பள்ளிக்கூடத்தில் எட்டாம் வகுப்பு படித்த போது, தாவரவியல் பாடத்தில் சுவாசிக்கும் வேர்கள் (Respiratory Roots) பற்றி படித்தது நன்றாக நினைவிலிருக்கிறது. சதுப்பு நிலப்பகுதிகளில் வளரும் மேங்குரோவ் மரங்கள், தண்ணீர் பரப்புக்கு மேல் விரல்களைப் போல நீட்டிக் கொண்டிருக்கும் வேர்களைக் கொண்டவை. அவ்வேர்களில் தான் அம்மரங்கள் சுவாசிப்பதற்கான துவாரங்கள் அமைந்துள்ளன. பக்கவாட்டில் வளரும் வேர்களிலிருந்து, மேல்நோக்கி வளரும் இந்த சுவாசிக்கும் வேர்கள், நேரே மேல்நோக்கி வளர்ந்து, அம்மரங்களின் கிளைகளில் முட்டி ஐக்கியமாகின்றன. தாவரவியல் பாடப்புத்தகத்தில் பார்த்த அம்மரத்தின் வரைபடங்கள் நேரில் பார்த்த போது அந்த இயற்கையின் விந்தை அழகை இன்னும் பல மடங்கு அதிகமாகவே ரசிக்கும்படியாக இருந்தது. ஒரு வாரம் சிதம்பரதில் தங்க வேண்டிய அவசியம் எனக்கு. கோடை சூரியன் – உச்சியைப் பிளக்கிற வெயில் – மொத்த வெப்பமும் சிதம்பரத்தின் மீதே கோட்டுகிறதோ என்னும்படி அப்படியொரு வெயில். பல நாட்களாய் கேள்விப்பட்டிருந்த சிதம்பரதின் பெருமையெல்லாம் எனக்கு மறந்துபோய், இனி இவ்வூர் பக்கம் வரவே கூடாது என்று முடிவெடுக்கும்படி ஆகிவிட்டேன். ஆனால், பிச்சாவரம் போய் வந்த அம்மாலைப் பொழுது மட்டும் என்றும் நினைவிலிருக்கும் கணமாக என் மனதில் பதிந்துபோனது. சிதம்பரம் வரும் முன்பே, பிச்சாவரம் பற்றி கொஞ்சம் தெரிந்து வைத்திருந்தேன். சிதம்பரத்திலிருந்து 17 கி.மீ. தொலைவில் உள்ளது பிச்சாவரம். சிதம்பரத்தில் நாங்கள் தங்கியிருந்த லாட்ஜின் கண்காணிப்பாளரிடம் கேட்டேன். ‘பஸ் இருக்கு சார். பிச்சாவரம் வனப்பகுதின்னே போட்டிருப்பான். கரெக்டா ஒன் அவர் ஆகும்’ என்றார். 17 கி.மீ. போக எதற்கு ஒரு மணி நேரம் என்று நினைத்தேன். ஆனால் போகப் போகத்தான் எனக்கு விளங்கியது. சிதம்பரம் பேருந்து நிலையத்தில் ‘முடசலோடை’ என்று ஒரு பக்கமும், ‘பிச்சாவரம்’ என்று ஒரு பக்கமும் போட்டிருந்த பேருந்து வந்து நின்ற மாத்திரத்திலேயே ஃபுல். வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டை, டர்க்கி டவல் போட்டு, வீரப்பன் மீசை சகிதமாக நின்றிருந்த ஒருவரிடம் கேட்டேன். ‘இது தான் தம்பி, வாங்க நானும் அங்க தான் போறேன்’ என்றார். ஏறிக்கொண்டோம். சீட் கிடைக்கவில்லை என்றாலும், ஜன்னல் வழி வேடிக்கை பார்ப்பதில் மிகுந்த ஆர்வமுடைய நான், டிரைவர் அருகில் நின்று கொண்டேன். சிதம்பரம் நகர எல்லை வரை நல்ல தார்ச் சாலைகள் போட்டிருந்தார்கள். சில கிலோமீட்டர் போன மாத்திரத்தில் பேருந்தின் டயர்களைக் கூடக் கொள்ளும் அளவு இல்லாத மிகக் குறுகிய சாலை ஆரம்பமானது. கடலூர் மாவட்டத்தின் குறிப்பிட்டுச் சொல்லும்படியான ஒரு சுற்றுலாத் தலமான பிச்சாவரத்திற்குப் போகிற சாலை இப்படியிருக்கும் என்று நான் நினைக்கவில்லை. என்னுடன் வந்திருந்த வட இந்திய நண்பர்கள், ‘டீக் ராஸ்தா ஹெய் நா?’ என்று மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டே வந்தார்கள். நானும் மீசைக்காரரிடம் இரண்டு முறை கேட்டு உறுதிப்படுத்திக் கொண்டேன். எதிரே வந்த புல்

லட் வண்டிகளுக்கெல்லாம் ஒரு நிமிடம் நின்று, ஒதுங்கி, ஓட்டுவதென்றால், 17 கி.மீ. போக ஏன் ஒரு மணி நேரம் ஆகாது? எப்படியோ, பிச்சாவரம் போய் சேர்ந்தோம். ஒரு அண்ணா சிலை, ஒரு TTDC படகு நிலையம், ஒரு சில நாற்காலிகள். இது தான் பிச்சாவரம். TTDC (தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம்) அலுவலகத்தில் டிக்கெட் வாங்கிக்கொள்ள வேண்டும். ஒரு படகிற்கு ஒரு மணி நேரத்திற்கு 125 ரூபாய். 5 நபர்கள் போகலாம். இல்லை, நான் தனியாகத் தான் போவேன் என்று நீங்கள் அடம் பிடித்தாலும், 125 ரூபாய் நிச்சயம் கொடுக்க வேண்டும். டிக்கெட் வாங்கிக் கொண்ட பிறகு, படகுத்துறையின் வாயிலில், வனத்துறையைச் சேர்ந்த ஒரு அதிகாரி இருப்பார். அவரிடம் நிச்சயமாக ஆளுக்கு 50 பைசா கட்ட வேண்டும். நீங்கள் வெறுமனே கையில் கேமரா வைத்திருப்பவரானால் பரவாயில்லை. ஆனால், அதை பயன்படுத்திப் புகைபடம் எடுப்பவரானால், அதற்கான கட்டணத்தை இவர்களிடம் செலுத்த வேண்டும். நடைமுறைகள் எல்லாம் முடிந்து நானும் நண்பர்களும் படகில் ஏறிக் கொண்டோம். படகோட்டி, இக்காடுகள் பற்றி சொல்லிக் கொண்டே வந்தார். சுமார் 3000 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த மேங்குரோவ் காடுகள் இந்தியாவில் இரு இடங்களில் தான் இருக்கின்றனவாம். ஒன்று, கோல்கத்தா அருகே சுந்தர்வன் காடுகளிலும், அதன் பிறகு பிச்சாவரத்தில் தான் இருக்கிறது என்றார். பேக்வாட்டர் எனப்படும் இந்நீர்நிலை, கடலோடு நேரடியாக இணைப்புள்ளது. கேரளத்தில் பிரசித்தமான இத்தகைய பேக்வாட்டர்களை தமிழகத்தில் இப்போது தான் காண்கிறேன். ஆழம் 3 அடி தான் இருக்கும், ஆனால் அடியில் சதுப்பு நிலம் என்பதால் ஒரு ஆள் உயரம் தண்ணீர் இருக்கும் என்றார் படகோட்டி. சரத்குமார் நடித்த ‘சூரியன்’ படத்தின் சண்டைக் காட்சிகள் இங்கு தான் படமாக்கப் பட்டனவாம். புரட்சித்ததலைவர் எம்.ஜி.ஆர் படத்திலும் வந்திருக்கிறது என்றார். பின்னர் மேங்குரோவ் மரங்கள் எங்கள் அருகில் வந்தன. படகை அம்மரங்களின் ஊடே செலுத்திய போது, என் அறிவியல் ஆசிரியை போதித்த ஏவிசினியா மரங்களை நேரில் பார்க்கிற பாக்கியம் எனக்கு கிடைத்தது. இரண்டு ஆள் உயரமிருக்கும் மரங்கள். தண்ணீர் பரப்பின் மேல் முளைத்து வளரும் வேர்கள். புதர் மாதிரி நிறைய இலைகள். அம்மரங்களின் அடியில் எல்லாம் நிறைய நண்டுகள் இருந்தன. நரிகளைக் கூட காணமுடியும் என்றார் படகோட்டி. ஆனால், நாங்கள் நரி எதையும் பார்க்கவில்லை. கோடைக் காலம் என்பதால் பறவைகளும் அதிகம் இல்லை. ஆனால், சுற்றி இருக்கும் மரங்கள் நடுவே படகில் போவது, ஏதோ ‘அனகோண்டா’ காடுகளில் பயணிப்பது போன்று ‘த்ரில்லிங்’காக இருந்தது. ஆயிரக்கணக்கான கால்வாய்கள் இங்கிருந்து பிரிந்து செல்கின்றனவாம். ஒரு மணி நேரம் அவிசினியா மரங்களை ரசித்தோம். இவற்றின் அறிவியல் சமாச்சாரங்களை என் வட இந்திய நண்பர்களுக்குச் சொல்லிக் கொண்டே வந்தேன். சூரியன் மறைகிற சமயம் என்பதால், குளிர்ச்சியாக இருந்தது. சிதம்பரத்தில் தங்கியிருந்த ஒரு வாரத்தில் குளிர்ச்சியாயிருந்தது என்று சொல்லக்கூடிய ஒரே சந்தர்ப்பம் இது தான். சுனாமி வந்த போது, 20 அடிக்கு நீர் மேலெழுந்ததாம். இம்மரங்கள் தான் நீரின் வேகத்தைப் பெரிதும் கட்டுப்படுத்தினவாம். கால்வாய்களின் வழியாக நீர் பிரிந்து விட்டதால், பாதிப்புகள் அதிகம் இல்லை என்றார். ஆனாலும், அருகே எம்.ஜி.ஆர். குப்பத்தில் இருந்த பல நூறு குடும்பங்கள் அடித்துச் செல்லப்பட்டன. ‘இந்த வழியாத்தான் சார் பொணங்கள் எல்லாம் போச்சு’ என்று அப்படகோட்டி சொன்ன போது, அவர் கண்கள் கலங்கின. சுனாமியால் பாதிக்கப் பட்டவர்களுக்காக வீடுகள் கட்டிக் கொடுத்திருக்கிறார்கள். ஒரு வழியாக, பிச்சாவரம் சுற்றுலா முடிந்து சிதம்பரம் நோக்கிப் பயணப்பட்டோம். அதே குறுகலான பாதையில் 17 கி

.மீ. அதே ஒரு மணி நேரம். ஏவிசினியா மரங்களைப் பார்த்தது, ஏதோ சொந்தக்காரர்களைப் பார்த்துவிட்டு வந்தது போல மனதிற்கு இதமாக இருந்தது.

Related Posts with Thumbnails

Written by Deepak

May 14th, 2006 at 7:37 pm

12 Responses to 'பிச்சாவரம் வனப்பகுதி – ஓர் இனிய அனுபவம்'

Subscribe to comments with RSS or TrackBack to 'பிச்சாவரம் வனப்பகுதி – ஓர் இனிய அனுபவம்'.

  1. Deepak,

    Thts a nice post.. thanks for itt..

    btw how far its frm Chennai & apart from the boating, what are the other possible places worth spending ??

    – Vignesh

    [Reply]

    Vignesh

    14 May 06 at 8:15 pm

  2. Well done Job.
    Keep writing.

    Ramesh
    NJ

    [Reply]

    Anonymous

    14 May 06 at 8:45 pm

  3. நன்றி, நல்லதொரு பதிவு. வாரக்கடைசிக்கு பொருத்தமாய், பழைய நினைவுகளை அசைபோட தோதாக இருந்தது.

    [Reply]

    வாசன்

    14 May 06 at 9:40 pm

  4. மிக்க நன்றி ரமேஷ், வாசன் & விக்னேஷ்.
    சென்னையிலிருந்து சிதம்பரம் 5 மணி நேரம், அங்கிருந்து பிச்சாவரம் 1 மணி நேரம். அங்கு பார்ப்பதற்கு வேறொன்றும் இல்லை. நீங்கள் உங்கள் பயணத்தின் ஒரு பகுதியாக அங்கு செல்லலாமே அன்றி, அதற்காகப் போவது பயனுடையதில்லை.
    தாவரவியல், விலங்கியல், சுற்றுச்சூழலியல் ஆய்வாளர்களுக்கு மிகவும் பயவுள்ளது.
    அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் சுற்றுச்சூழல் ஆய்வகம் இங்கு விஸ்தாரமான ஆய்வுப்பணிகளை மேற்கொள்கிறார்களாம். அம்மாணவர்கள் அடிக்கடி இங்கு வருவதுண்டாம். மற்றபடி, ஒரு மாலைப் பொழுதைக் கழிக்க ஏற்ற தலம்.

    [Reply]

    தீபக்

    14 May 06 at 9:47 pm

  5. தீபக், பிச்சாவரம் பற்றிய விவரங்களைச் சுவைபடக் கொடுத்திருக்கிறீர்கள். நன்று.

    [Reply]

  6. மிக்க நன்றி செல்வராஜ் :)

    [Reply]

    தீபக்

    17 May 06 at 6:57 am

  7. Looks like you guys had enough fun. Could have posted few more snaps :)

    [Reply]

    demigod

    17 May 06 at 9:13 pm

  8. Yeah… We didn’t want to shell out extra for takin snaps… already we were runnin short of money fighting the sun ;)

    [Reply]

    தீபக்

    17 May 06 at 10:07 pm

  9. நன்று…ரொம்ப ரொம்ப சின்ன வயதில் போயிருக்கிறேன்… அந்த மகா மேங்க்ரூவ் ஏரியின் ஒரு கரையில் தமிழ்நாடு ஓட்டல் இருக்கிறது. நாங்கள் போயிருந்தபோது சரியான மழை…ஈரம்…சகதி…

    பயணிகளுக்கான காட்டேஜ் எல்லாம் நட்ட நடுவில் தீவாக இருக்கும் இரவில் லைட்டெல்லாம் கிடையாது என்பதாக நினைவிருக்கிறது… நம்மூரில் இப்படி ஒரு இடமா(சொர்க்கம்) என்று ரொம்ப நாட்களாக வியந்திருக்கிறேன்…முதல்தடவை பார்க்கிறவர்களுக்கு பிரமிப்பு.

    படகுக்காரர்களே வந்த வழியை மறப்பார்கள் எனக்கேள்விப்பட்டிருக்கிறேன். (எப்படி அதே வழியில் வந்தீர்கள்?) இல்ல எனக்கு சொல்லப்பட்டது கப்சாவா?

    அந்தப்புறம்(‘ர’ இல்ல) கடல் இருக்குமே அதைப்பார்த்தீங்களா?

    அன்புடன்
    கார்த்திகேயன்

    [Reply]

  10. ஆமாம் கார்த்திகேயன்,
    காட்டேஜ் இருக்கிறது, ஆனால், இப்போது வசதிகள் செய்ய்து தரப்பட்டுள்ளன. கடலூர் மாவட்டத் தேர்தல் கண்காணிப்பாளர் அங்கே தான் தங்கியிருந்தார் என்றார் பார்த்துக் கொள்ளுங்களேன்.

    படகுக்காரர்கள் மிகவும் உள்ளே சென்றால் ஒரு வேளை பாதை மறந்து போகலாம். ஆனால் அந்த காட்டேஜுக்கெல்லாம் மறக்க முடியாது. அது கண்ணெதிரே தெரிகிற தூரத்தில் தான் இருக்கிறது.

    கடலுக்குப் போக நான்கு கி.மீ. அதுவும் ரூ.500 ஆகும் என்றார்கள். நாங்கள் போக முடியவில்லை.

    பின்னூட்டம் இட்டமைக்கு மிக்க நன்றி. :)

    [Reply]

    தீபக்

    20 May 06 at 4:41 pm

  11. பிச்சாவரம் மாதிரியே உங்க விவரிப்பும் அருமையா இருக்கு தீபக்…
    ம்ம்ம்…ஒருமுறை போய்ட்டு வரனும்னு தோணுது…

    அன்புடன்
    அருள்.

    [Reply]

  12. மிக்க நன்றி அருட்பெருங்கோ… :)

    [Reply]

    தீபக்

    20 May 06 at 5:07 pm

Leave a Reply