Amusingly Simple

A blog by Deepak Venkatesan

உங்களுக்கு மூளையை வளர்க்கும் ஆசை உண்டா?

4 comments

வெண்டைக்காய் சாப்பிட்டால் மூளை வளரும் என்பதற்காக என் நண்பனின் அம்மா (அப்போது 10 வயதிருக்கும்) அவனுக்கு தினமும் மதிய உணவுக்கு வெண்டைக்காய் சாம்பார், வெண்டைக்காய் பொறியல், வெண்டைக்காய் பச்சிடி என்று கட்டிக் கொடுத்து அனுப்பியது இன்னும் நினைவிருக்கிறது. அதில் எந்த அளவுக்கு அவனின் மூளை விருத்தி அடைந்தது என்று எனக்குத் தெரியாது, ஆனால், சமீபத்தில் நியூ சைன்டிஸ்ட் இதழில் வெளியான கட்டுரையில், மூளையை வளர்க்க 11 வழிகள் என்று சொல்லி இருக்கிறார்கள். க்ரிம்ஸன் ரூம்களையும், விரிடியன் ரூம்களையும் திறக்கவேனும் பயன்படுமே என்று அந்த விஷயங்களைப் படித்து வைத்தேன். சில வழிகள் தெரிந்தவை, சில விஷயங்கள், 'அப்படியா என்ன?' ரகம். நிறைய பயாலஜி சம்பந்தமான விளக்கங்கள் சொல்லியிருந்தார்கள். அதெல்லாம் இல்லாமல் gist மட்டும் தர முயல்கிறேன். கொஞ்சம் இங்கே சாம்பிள் பாருங்களேன்… வயசானலும் மங்கிப் போகாத நினைவு வேண்டுமா? Modafinil எடுத்துக் கொள்ளுங்கள்! இது நமக்குப் பெரிதும் உதவும் என்று நினைக்கிறேன். ஒரு 90 மணி நேரம், அதாவது, 4 நாள் – முழுக்க தூக்கமில்லாமல் வேலை செய்து கொண்டே இருக்க முடியுமா? முடியும் என்கிறார்கள் – modafinil எடுத்துக் கொண்டால்! எனது நண்பன் ஒருவன் பஸ்ஸில் ஏறிய அடுத்த நிமிடம் தூங்கி வழிவான்; கொஞ்சம் ஏஸி இருந்தால், அவன் கண்கள் சொக்கும். அவனைப் போன்ற ஆசாமிகளுக்கு வழங்கப்பட்டு வந்த இந்த modafinil, இன்று, வேலைப் பளுவால் தூக்கம் கெட்டுப் போகிறவர்களுக்கும் பரிதுரைக்கப் படுகிறது. இன்னும், வயதானவர்களுக்கே உரிய அசௌகரியமான ஞாபக மறதியைப் போக்குவதற்குக் கூட மருந்து உண்டாம். தாத்தாக்களை எல்லாம் வாலிபர்கள் போல செயலாற்ற வைக்குமாம். ஆச்சரியமாக உள்ளது. எங்கள் தொகுதி MLA-வுக்குக் கொடுக்க வேண்டும். வில்லிவாக்கத்தில் ரயில்வே மேம்பாலம் அமைப்போம் என்று 5 வருடங்களுக்கு முன் கூறி, ஏனோ பாவம், மறந்துவிட்டார். உண்மையிலேயே மூளை வளர்ச்சிக்கு வெண்டைக்காய் சாப்பிட வேண்டுமா? மூளைக்கு சரியான அளவு குளூக்கோஸ் கிடைத்துக் கொண்டே இருக்க வேண்டும். காலையில் breakfast ஸ்கிப் செய்தால், அலுவலகக் கணக்கில் கோட்டை விடும் வாய்ப்பு இருக்கிறது. ஜாக்கிரதை! எப்படியாவது, தினமும் பீன்ஸ் சாப்பிடச் சொல்கிறார்கள். மதிய உணவில், ஒரு ஆம்லெட், அப்புறம் கொஞ்சம் பச்சை விஷயங்கள் இருக்க வேண்டும் என்பதனால், சாலட் வகையறாக்கள், அதன் பின், கொஞ்சம் தயிர், இதெல்லாம் மூளையைச் சுறுசுறுப்பாக வைத்திருக்கும். பிஸ்கட், கேக், பீட்ஸா போன்ற junk food-களின் பக்கம் தலை வைத்தும் படுக்காதீர்கள் என்கிறார்கள். சில எலிகளைப் பிடித்து, நிறைய junk food சாப்பிட வைத்து, அவற்றை ஒரு maze-இல் விட்டிருக்கிறார்கள். அத்தனை எலிகளும் ஒரே மந்தமாகச் செயல்பட்டனவாம். உஷார்! மாலை வேளையில், சாவகாசமாக உட்கார்ந்து ஸ்ட்ராபெர்ரி சாப்பிடுங்கள். விஞ்ஞானிகள் சொல்கிறது போல் உங்கள் கவனம் கூர்மையாகிறதோ இல்லையோ, மாலையில் நல்ல சுவையான சமாச்சாரம் சாப்பிட்ட திருப்தியாவது கிடைக்குமல்லவா? இசை அமைப்பவர்கள் மட்டும் மேதைகள் இல்லை, இசையைக் கேட்கின்றவர்களும் தான்! என்ன ஆச்சரியமாக உள்ளதா? பல நபர்களை Mozart-இன் இசையைக் கேட்கச் செய்து சோதித்திருக்கிறார்கள். கேட்டவர்கள் எல்லாம் மிக்க உற்சாகத்தோடு தம் வேலையைச் செய்திருக்கிறார்களாம். இசை கேட்டால் உற்சாகமாவது இயற்கை தான் என்கிறீர்களா? இதே இசையை எலிகளையும் கேட்க வைத்திருக்கிறார்கள். அவயும் Mozart-இன் இசையைக் கேட்டு maze-களில் உற்சாகமாக வழியைக் கண்டுபிடித்தனவாம். சிறு வயதில் இசை வகுப்புகளுக்குச் சென்ற

மாணவர்களின் IQ, மற்றவர்களை விட சில புள்ளிகள் அதிகமாக இருந்தனவாம். எப்படியும், இசையைக் கேட்பதில் நஷ்டமில்லை என்பதால், கேட்டு வைப்போமே. மூளை அதுபாட்டுக்கு ஒரு மூலையில் வளரட்டும்! எதுவுமே தேறவில்லை என்றால் இருக்கவே இருக்கிறது டெக்னாலஜி! பல நாட்கள் முன்னால், சுஜாதாவின் 'பேசும் பொம்மைகள்' நாவல் படித்தேன். Downloading என்று ஒரு கற்பனை டெக்னாலஜியில், மூளையில் சிப் வைத்து, ஒருவரின் நினைவு வங்கியையே மாற்றலாம் என்கிற போக்கில் எழுதியிருந்தார். அப்படிப்பட்ட தொழில்நுட்பம் இன்னும் வரவில்லை என்றாலும், மூளையில் சில மின்னணு சர்க்கிட்களைப் பொறுத்தி, செயற்கை கை, கால் போன்றவற்றை இயக்க முடியும் என்கிறார்கள். இன்னும், வெறும் மின்காந்த அலைகளைப் பயன்படுத்தி, ஒருவரின் கற்பனை சக்தி, ஆற்றல் எல்லாவற்றையும் மாற்றலாம், ஒரு ஊசி மூலாமாக, இறந்த மூளை செல்களை இயங்கச் செய்யலாம், சில எலெக்ட்ரோடுகளைச் செருகியும் (Terminal Man நாவலில் வருவதைப்போல…) மூளையின் செயல்பாட்டைக் கட்டுப்படுத்தலாம் என்றெல்லாம் சொல்கிறார்கள். மெத்தப் படித்த விஞ்ஞானிகள் – சொல்வதில் நிச்சயம் விஷயம் இருக்கும். மைக்கேல் க்ரைட்டன் சொல்வதையே நம்புகிற கூட்டம் இருக்கும் போது, இவர்கள் சொல்வதை ஏன் நம்பக்கூடாது? மூளையைச் சரியான முறையில் work out செய்ய வேண்டும். அண்மைக் காலம் வரையில், ஒரு மனிதனின் problem solving, verbal reasoning போன்ற திறமைகள் அவனின் மரபணுக்களின் அமைப்பில் நிர்ணயம் செய்யப்படுகிறது என்று கருதப்பட்டது. சமீபத்தில் தான், அவனது working memory-யை பழக்குவதன் மூலம், இவற்றையெல்லாம் மேம்படுத்தலாம் என்று கண்டறிந்துள்ளனர். ஆமாம், அதென்ன working memory? நீங்கள் ஒரு சின்ன கணிதக் கணக்கு போடுகிறீர்கள்: 68+7-23-4+35 என்று ஒரு தொடர் கணக்கு. இதை மனதில் படிப்படியாகத் தானே ஸால்வ் செய்வீர்கள்? அடுத்தடுத்த படிகளின் விடைகளை மனதில் பதிந்துக் கொண்டு, (கணிப்பொறியில் பயன்படும் stack போல…), இறுதியில் சரியான விடையைச் சொல்கிறீர்கள். நம் மூளைக்குள் இதற்கு உதவுகிற stack தான் இந்த working memory. (செயல் நினைவகம் எனலாமா?) பல குழந்தைகளை வைத்து ஆராய்ந்து, செயல் நினைவகத்தைச் சரியான முறையில் பயிற்றுவித்தால் IQ அதிகரிக்கிறது என்று கண்டறிந்துள்ளார்கள். எதுவுமே நினைவில் வைத்துக்கொள்ள முடியவில்லையா? ஒரு அரங்கத்தில் 100 பேர் இருக்கிறார்கள். எல்லோரும், ஒவ்வொருவராக எழுந்து, தம் பெயர்களைச் சொல்லி அமர்கிறார்கள். ஒரு மணி நேரம் கழித்துக் கேட்டால், அத்தனைப் பேரின் பெயர்களையும் உங்களால் நினைவில் வைத்திருந்து சொல்ல முடியுமா? இதெல்லாம் அஷ்டாவதானிகளுக்குத் தான் சாத்தியம், என்னை ஆளை விடுடா சாமி என்று ஒதுங்குகிறீகளா? அதெல்லாம் பொய். பழகினால் எல்லாருக்குமே சாத்தியம் தான் என்கிறார்கள் விஞ்ஞானிகள் (இவர்களெல்லாம் திருந்தவே மாட்டர்களா?) நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய விஷயங்களை, மனதில் கதை போல உருவாக்கி வைத்துக்கொள்ள வேண்டும். mnemonics என்பார்களே, அதுதான். நபர்களின் முகத்தோடு பெயர்களைத் தொடர்புபடுத்தி நினைவில் வைத்துக்கொள்ள, அவர்களைப் பற்றி ஹாஸ்யமாக ஏதேனும் நினைவில் பதித்துக் கொள்ளுங்கள். (கவுண்டமணி வசனங்கள் நமக்குப் பெரிதும் உதவும்… தீச்சட்டித் தலையா!, ஆம்லெட் மண்டையா! – இதுமாதிரி). சம்பந்தப்பட்ட நபருக்குத் தெரியாத வரையில் ஆபத்தில்லை! தூக்கம் கூட ஒரு அருமருந்து! தூங்காதே தம்பி தூங்காதே என்ற பட்டுக்கோட்டை பாடல் எல்லா சமயங்களிலும் பொருந்தும் என்று சொல்லிவிட முடியாது. நீங்கள் 21 மணி நேரம் தொடர்ந்து விழித்துக்கொண்டிருக்கிறீர்கள் என்றால், உங்கள் மனநிலை, நன்றாக மது அருந்திய நபருக்கு ஒப்பாக இருக்குமாம். இதற்கு என்ன தீர்வு? கொஞ்ச நேரம் தூங்குங்கள்

. அது போதும்! ஒரு வீடியோ கேம் விளயாடுகிறீர்கள். தொடர்ந்து 2 மணி நேரம் விளையாடிவிட்டு, 1 மணி நேரம் தூங்கியெழுந்து பின்னால் ஆட்டத்தைத் தொடர்ந்தால், உங்கள் ஆடுதிறன் அதிகரித்திருக்குமாம். தூக்கத்தின் போது, உங்கள் மூளையின் சிக்கலான சர்க்கிட்களில் உள்ள செய்திகள் எல்லாம் ஒன்றோடொன்று தொடர்புபடுத்தப் படுகின்றன. இதன் காரணமாக, தூங்கி எழுந்ததும் ஒரு தெளிவு பிறக்கிறது. வேதிப் பொருட்களுக்கான periodic table அமைத்துக் கொடுத்த ரஷ்ஷிய விஞ்ஞானி Dmitri Mendeleev, அந்த டேபிளை உருவாக்க ஒரு நாள் முழுக்க முயன்றும் முடியாமல் தூங்கப் போனாராம். தூக்கத்தில், அவருக்கு வந்தக் கனவில் அந்த டேபிளை எவ்வாறு உருவாக்குவது என்கிற சூத்திரம் தெரிந்ததாம். தூக்கத்திற்கு அவ்வளவு பவர் உண்டு! இன்னும் பல வழிகள் உண்டு – மூளையை வளர்க்க! தினமும் நடை பயிற்சி செய்கிறவர்களின் மூளைத் திறன், நடை பயிலாதோரை விடவும் அதிகமாக இருப்பதாக ஆராய்ந்துள்ளனர். யோகா முறையில் கூட மூளை வளர்ச்சியை அதிகரிக்கும் பயிற்சிகள் உண்டு. யோகாவில், பின் பக்கமாக வளைகிற ஆசனம், மூளைக்கு ஒரு வேகத்தை அளிக்கிறதாம். மிகவும் ஆச்சரியமான விஷயம்: 2001-இல், சில நபர்களை வைத்து ஒரு சோதனை செய்யப்பட்டது. அவர்கள் அனைவரும் தங்கள் தோள் தசைகளை வலுப்படுத்தும் பயிற்சியில் ஈடுபட்டது போல் கற்பனை செய்துகொள்ள பணிக்கப்பட்டார்கள். தினமும் 15 நிமிடங்கள் இது போல் கற்பனை செய்துகொள்ள வேண்டும். 12 வாரங்கள் கழித்துச் சோதித்ததில், அவர்களின் தோள்கள் 13% வலுவடைந்திருந்தன!! தீயன பார்க்காதே, தீயன கேட்காதே, தீயன பேசாதே என்ற காந்தியின் தத்துவம் மூளைக்குச் சரியான ஆரோக்கியம் தரவல்லது என்று ஆராய்ந்திருக்கிறார்கள். கிறிஸ்தவக் கன்னியாஸ்திரீக்கள் 100 வருடங்கள் மன ஆரோக்கியத்துடன் இருக்கிறார்களாம் – தீயனவற்றிலிருந்து விலகியிருப்பதால்! பி.கு.: ஒரு கன்னியாஸ்திரீ சொன்னாராம்: "Think no evil, do no evil, hear no evil, and you will never write a best-selling novel" என்று! மூளைக்குத் தொலை இயக்க சக்தி இருக்கிறது என்றால் நம்புவீர்களா? எப்படி என்று இன்னும் கண்டுபிடிக்கவில்லை. ஆனால், நியூரோஃபீட்பேக் என்கிறார்கள். EEG (Electroencephalogram) என்பது மூளையில் இருக்குன் மின் அலைகள். இந்த அலைகளில் alpha அலைகள் என்று ஒரு வகை உண்டு. இந்த alpha அலைகளைக் கொண்டு நாம் நினைக்கிறதை இயக்க முடியும் – பயிற்சி இருந்தால். தலையின் மேற்பரப்பில் பொறுத்தப்பட்ட surface electrode-கள் வழியாக இந்த alpha அலைகளைப் பெற்று, அதன் மூலமாக, ஒரு வீடியோ கேமில் காரின் வேகத்தைக் கட்டுப்படுத்திக் காட்டியிருக்கிறார்கள். நினைத்தாலே போதும் – கார் பறக்கிறது என்றால் சும்மாவா? இது போல, நினைப்பதன் மூலமாகவே, கற்பனை சக்தியைக் கூட்டலாம், உடல் வலையை இல்லாமல் செய்யலாம், வேலைத் திறனை அதிகரிக்கலாம், இன்னும் பல அதிசயங்கள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன! எப்படியோ, நான் தினமும் செய்கிற நடப்பது, சாப்ப்பிடுவது, தூங்குவது, இசை கேட்பது – எல்லாமே மூளையை வளர்க்கும் என்றால் என்னால் நம்பவே முடியவில்லை!

Related Posts with Thumbnails

Written by Deepak

June 10th, 2005 at 12:14 am

4 Responses to 'உங்களுக்கு மூளையை வளர்க்கும் ஆசை உண்டா?'

Subscribe to comments with RSS or TrackBack to 'உங்களுக்கு மூளையை வளர்க்கும் ஆசை உண்டா?'.

  1. மூள வளர்றது இருக்கட்டும்.
    இப்ப உங்க நண்பர் அதான், வெண்டைக்காயா சாப்பிட்டவர்
    ‘வழவழ கொழகொழ’ன்னு பேசறாரா?

    அதைச் சொல்லுங்க!

    [Reply]

  2. The rooms are great. Tips too.. Thx
    -balaji
    Boston

    [Reply]

    Anonymous

    10 Jun 05 at 3:10 am

  3. ஆமாம், அவன் அப்பன்னு இல்ல, எப்பவுமே வழவழ கொழகொழ தான்… இதனாலேயே பல பேர்க்கு வெண்டைக்காய் பிடிக்காதாமே… உங்களுக்கும் அப்படித் தானோ?
    Thanks Balaji…

    [Reply]

  4. hey deepak..added ur blog2my fave list da :) )
    tk care…keep in touch!

    [Reply]

    viji

    13 Jun 05 at 10:26 am

Leave a Reply