Amusingly Simple

A blog by Deepak Venkatesan

Archive for June, 2005

அவந்திகா

8 comments

நீங்கள் அவந்திகா மாதிரிப் பெண்ணை எங்கும் பார்த்திருப்பீர்கள். பறக்கும் ரயிலின் சன்னலோரத்தில் செல்ஃபோனில் குசுகுசுக்கும் போது, தோளில் ஹேண்ட்பேக்கோடு பேருந்து நிறுத்தத்தில் வாட்சைத் திரும்பத் திரும்ப நோக்கு(லுக்கு) விடும் போது, சத்யம் தியேட்டர் வாசலில் நண்பர்கள் கூட்டத்து அரட்டையில் ஐக்கியமாகிப் போயிருக்கும் போது, வால் பிடித்துச் செல்லும் சென்னை ட்ராஃபிக்கில் ஸ்கூட்டியை செலுத்தும் சாகசத்தின் போது, இன்னும் பல இடங்களில், இன்னும் பல சந்தர்பங்களில்… இப்போது நீங்கள் அவந்திகாவைப் பார்க்க வேண்டியது, கடைசியாகச் சொன்ன ஸ்கூட்டி பயணத்தில். வெள்ளையில் பூப்போட்ட சுடிதார், பச்சை நிற துப்பட்டா, தோளில் ஹேண்ட்பேக், அதற்குள் ஒரு சிறிய பர்ஸ், அதற்குள் ஒரு சின்ன என்னவோ-வில் செல்ஃபோன். அனைத்தும் ஸ்கூட்டி ஸீட்டில், ஸ்கூட்டி சாந்தோம் சாலையில்! சாந்தோமில் இருக்கும் தன் வீட்டிலிருந்து கிளம்பி, க்ரீன்வேஸ் சாலை வழியாக திருவான்மியூருக்குப் பயணம். பீக் ட்ராஃபிக்கின் நடு சென்டரில் மாட்டித் தவிக்கும் மோட்டார் பைக் அந்நியன்களின் பெருமூச்சுகளுக்கும் ஏக்கப் பார்வைக்கும் நடுவில், லேட்டாக வந்தாலும், அவந்திகா, மஞ்சள் கோட்டைத் தாண்டி, சிக்னலுக்காகக் காத்திருப்போர் பட்டியலை மதியாமல் முன்னே நிற்கும் வாகன அணிவகுப்பின் முகப்பிற்குச் செல்ல, சரியாக சிக்னல் பச்சை! விருட்டென்று ஸ்கூட்டியின் காதைத் திருக, ஸ்கூட்டி எல்லோரையும் முந்தி வேகமெடுக்கிறது. சென்னை சூரியனின் மிராஜ்களைத் துளைத்துப் பாய்கிறது. சென்னைதான் எவ்வளவு மாறிவிட்டது. எல்லா நாட்களிலும், எல்லா சாலைகளிலும், ட்ராஃபிக்! ட்ராஃபிக்! ட்ராஃபிக்! நிரம்பி வழியும் பச்சைப் பேருந்துகள் – மினி இந்தியாக்கள்! "யாகாவா ராயினும்…." என்று வெள்ளைத் தகட்டில் அடித்து வைத்திருக்கும் MTC குறளின் கண் முன்னே சென்னைவாசிகளின் தற்கால வரலாறு முழுதும் கடைவிரிப்பு. மாமா ஓரகடத்தில் பிளாட் வாங்கியதிலிருந்து, பிரகாஷ் நளினியை சைட் அடித்தது வரை செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள MTC-கள் உபயம். செவிக்குணவில்லாத போது விழிக்கு உணவு போடும் சுவரொட்டிகள். குமுதம் குமுதம் குமுதம் குமுதம் நக்கீரன் நக்கீரன் நக்கீரன் கல்கி கல்கி கல்கி என்று வரிசையாக. எல்லாவற்றிலும் சிரிக்கும் சோனியாகள், தியாக்கள், சில சமயம் ஆதிகேசவன்கள். எல்லா ஆரவாரத்துக்கும் மௌன சாட்சியாக நிற்கும் பிரம்மாண்ட ஹோர்டிங்குகள். அவற்றைக் கட்டி மேய்க்கிற மாதிரி மேலே இருந்து சிரிக்கும் தகிக்கும் சூரியன். இவை எல்லாவற்றையும் புறக்கணித்து, தன் ஸ்கூட்டியில் பறக்கிற அவந்திகா! திருவிக பாலத்தில் போகும் போதே அடையாறு ஃப்ளைஓவரில் ஸ்கூட்டியில் பறப்பதைக் கற்பனையில் ஓட விடுகிறாள். எதிலும் ஃபாஸ்ட்! சலனமின்றி கடலைத் தொடும் அடையாறு அவள் கண்களின் கவனத்தைக் கவர்ந்தது அரை நொடிதான். பின் மீண்டும் சாலை. ஃப்ளைஓவரில் ஏறி, அங்கு எல்லா சமயமும் தனக்கே உரியதாய் சாலையின் நடுவில் 1985 ஸ்கூட்டரில் போய்க்கொண்டிருக்கிற வழுக்கை விழுந்த ரிடையர்ட் க்ளார்க்கை ஓவர் டேக் செய்வது எப்படி என்று மனம் கணக்குப் போட்டுக் கொண்டே ஃப்ளைஓவரை நெருங்க, முன்னாலேயே சட்டென்று இடது பக்கம் திரும்பி விடுகிறாள். அங்கே நிற்பது ப்ரீத். "ஹாய் ப்ரீத்!" ஸ்கூட்டி நின்று விடுகிறது. "ஹேய் அவந்தி! எங்கே?" "சும்மா தான். நம்ம ஷாலு இல்ல, அவளுக்கு நெக்ஸ்ட் மந்த் மேரேஜ். கொஞ்சம் ஏர்லி தான். US மாப்ளெ. டெலிஃபோன் பண்ணா. அதான் சும்மா போய் பார்க்கலாம்னு… நீயும் வாயேன் ப்ரீத்?" "எனக்கு சொஞ்சம் வேலை இருக்கு. விசா இன்டர்வ்யூக்கு ரெடி பண்ணனும். பெஸன்ட் நகர்ல எங்க அங்கிளைப் பார்க்கணும்&
quot
; "ஏறிக்கோயேன். உன்னை ட்ராப் பண்றேன்" "இல்லை பரவாயில்ல. உனக்கு தான் சுத்து" "ஆமாம். இவனை ட்ராப் பண்றதுனால அம்பானி கூட எனக்கு அப்பாயிண்ட்மென்ட்க்கு லேட் ஆகுது பாரு… சும்மா ஏறுடா" ஸ்கூட்டி இருவரையும் சுமந்து கொள்கிறது. ஃப்ளைஓவர் எதிர்பார்ப்புகளை மறந்து, அதன் அடியில் சாலையில் சென்று, மறுபடியும் சிக்னல்! ஒரு வழியாக பெஸன்ட் நகரில் ப்ரீத்தை உதிர்த்து விட்டு, ஷாலுவின் வீட்டை நோக்கி ஸ்கூட்டியைச் செலுத்துகிறாள். எம் ஜி ரோடில் ட்ராஃபிக் சற்று அதிகமாகவே இருக்கிறது. ரெஸ்டாரண்டுகளில் எல்லாம் ஒட்டி உட்கார்ந்த இரட்டை உருவங்கள் சன்னமாக ஏதோ பேசிக்கொண்டுள்ளன. ஃபுட் ஜாயிண்ட் எதிரில் வண்டியில் வெள்ளரிக்காய் விற்பவன் ரோட்டில் உலாப் போகிற யுவதிகளை ஓரக்கண்ணால் பார்த்துக்கொண்டே "வெள்ளரீ… வெள்ளரீ…" தெருவோரப் பெட்டிக்கடையில் வேளாங்கன்னி மாதா பொம்மைகள். பேக்கரியில் பஃப்ஸ் சாப்பிடும் ஸ்கூல் பையன்கள். ரோட்டைக் கடக்கும் முதியவர். இதோ… அவந்தியை ஓவர்டேக் செய்கிற அந்த யமஹாவில் இரண்டுபேர்… அய்யோ, அவர்கள் என்ன செய்கிறார்கள்? ஓ மை காட்! சட்டென்று அவந்தியின் உடம்பெல்லாம் அட்ரினாலின். கழுத்தில் ஒரு சிராய்ப்பு. "ஹேய் ஹேய் என்னோட செயின்…. செயின்…. திருடன்! திருடன்!!" அவந்தியின் அலறல் கேட்டு அக்கம்பக்கம் இருப்போர் சட்டெனத் திரும்பிப் பார்க்கிறார்கள். அவந்தி ஸ்கூட்டியை நிறுத்திவிடுகிறாள். அந்த யமஹா திருடர்கள் அதோ… இருபதடி தூரத்தில். வாகனக் கூட்டங்களை விலக்கிச் செல்ல எவ்வளவு பிரயத்னம் அவர்கள் செய்கிறார்கள். ஹாங்க்! ஹாங்க்! ஓயாமல் ஹாரன்கள். MTC-யில் பிரசங்கங்கள் நிறுத்தப்பட்டு, எல்லா தலைகளும் ஜன்னலுக்கு வெளியே. அவந்தி என்ன செய்யப்போகிறாள்? யாரேனும் ஏதேனும் செய்கிறார்களா? இன்னும் இன்னும் வெற்றுப் பார்வைகள். முன்னேறும் யமஹா…. ஸம்படி டூ ஸம்திங்! சாலையைக் கடந்த முதியவரைத் தொடர்ந்து ஒரு பள்ளிப் பிள்ளைகள் கூட்டம். சாலை மூன்று வினாடிகளில் ப்ளாக்ட். ட்ராஃபிக்! அதோ ட்ராஃபிக்கில் அந்த யமஹா. அவர்களுக்கு சந்து கிடைக்கவில்லை. இருபதடியில் நிற்கிறார்கள். திடீரென்று தோன்றுகிறது அவந்திக்கு. ஸ்கூட்டியின் காதைப் பலமுள்ளமட்டும் திருகுகிறாள். ஸ்க்கூட்டி விருட்டெனப் பாய, கால் நொடிக்கு அவளை நிறுத்திப்பிடித்த இனர்ஷியா விலகிட, அவளும் பறக்கிறாள். அவந்தி… இன்னும் வேகமாக! பதினைந்து அடி… பன்னிரண்டு… பத்து… ஏழு… ரெண்டு… சடார்! அவந்தியின் ஸ்கூட்டி இடிக்கிற இடியில் யமஹா கொஞ்சம் பேலன்ஸ் மிஸ். அதற்குள் க்ளியராகிவிடுகிறது ட்ராஃபிக்… கிடைத்த சந்தில் பாய நினைக்கும் யமஹா… ஸ்கிரீரீரீரீரீச்ச்ச்ச்ச்!!!! ஸ்கிட் ஆகி சாலையோரத்திற்கு சரிகிறது. இதற்குள் தைரியம் வந்த சில பொதுஜனங்களின் கையில் அந்த யமஹா ஆசாமிகளின் காலர். அவர்களின் முதுகில் தர்ம அடி! தன் ஸ்கூட்டியைப் புறக்கணித்து ஜனத்திரளை நோக்கி ஓடுகிறாள் அவந்தி. "யூ ப்ரூட்ஸ்! செயினைத் திருடினா சும்மா விட்டுடுவேன்னு நினைச்சீங்களா? ராஸ்கல்ஸ்!" தன் ஹீல்ஸ் காலால் அவர்களை நாலு மிதி மிதிக்கிறாள். அதோ அவன் கையில் அவந்தியின் செயின். "டேய் நாதாரி பாப்பாவோட செயினைத் தாடா சோமாரி! இந்தாக் கண்ணு. இவனுங்களையெல்லாம்…" தன் செயின் கிடைத்து விடுகிறது அவந்திக்கு. தன் செயின்! அப்பா அவளுக்கு ஆசையோடு வாங்கிக் கொடுத்தது. தேங்க் காட்! ஒரு நிமிஷம் கலங்கியே போய்விட்டாள். என்ன வேகம்! என்ன பாய்ச்சல்! என்ன தைரியம் அவனுக்கு… அவளுக்கு. இந்த மாதிரியெல்லாம் கூட சென்னையில் நடக்கிறதா என்ன? இவனை…. ரிலக்ஸ்! ரிலாக்ஸ்! அதற்குள் அங்கு வருகிற கான்ஸ்டேபிள் கையில் அந்த யமஹா திருடர்கள். ஜனத்திரளின் ஊடே நகர்ந்து ஸ்கூட்டியை அட

ைகிறாள் அவந்திகா. சே! ஸ்கூட்டி முன் பகுதியில் ஒரு சொட்டை விழுந்திருக்கிறது. ஆனால் செயின் கிடைத்து விட்டதே. அது போதும். செயினை விட்டிருந்தால் ஸ்கூட்டி பழுதாகி இருக்காதோ? ம்ஹூம்! அந்தத் திருடனுக்கு தண்டனை தேவைதான். என்ன தைரியம் இருந்தால் ஒரு பெண்ணின் செயினை நடு சாலையில் திருடுவான். அதுவும் அவந்தியின் செயினை! முட்டாள்கள்! இல்லை… கிராதகர்கள். அவள் செய்தது சரிதான். Prodigal son கதை ஏனோ அவள் நினைவுக்கு வருகிறது. தன் ஸ்கூட்டியை முன்னே செலுத்துகிறாள். "ஷாலூ! ஸாரிடா! நான் அப்றம் உன்னை சந்திக்கிறேன். ஒரு பெரிய மேட்டர். வீட்டுக்குப் போனப்றம் சொல்றேன்" ஸ்கூட்டி வீட்டு வாசலில் நின்றதும் நிற்காததுமாய், உள்ளே டெலிஃபோன் அடிக்கிறது. அவந்திகா தன் சமீபகால சாகசங்களைத் தன் துள்ளலிலேயே விளம்பரப்படுத்துகிறாள். ஓடிச் சென்று, ரிஸீவரை எடுத்து, "ஹலோ." "ஏய் அவந்தி, இன்னிக்கு ஈவ்னிங் நாங்கள்ளாம் பிக்சர் போறோம், நீயும் வரியா?" "ஷ்யூர்! கண்டிப்பா வரேன். ஆமா… என்ன பிக்சர்?" "மிரட்டல் அடி!"

Written by Deepak

June 24th, 2005 at 3:12 pm

உங்களுக்கு மூளையை வளர்க்கும் ஆசை உண்டா?

4 comments

வெண்டைக்காய் சாப்பிட்டால் மூளை வளரும் என்பதற்காக என் நண்பனின் அம்மா (அப்போது 10 வயதிருக்கும்) அவனுக்கு தினமும் மதிய உணவுக்கு வெண்டைக்காய் சாம்பார், வெண்டைக்காய் பொறியல், வெண்டைக்காய் பச்சிடி என்று கட்டிக் கொடுத்து அனுப்பியது இன்னும் நினைவிருக்கிறது. அதில் எந்த அளவுக்கு அவனின் மூளை விருத்தி அடைந்தது என்று எனக்குத் தெரியாது, ஆனால், சமீபத்தில் நியூ சைன்டிஸ்ட் இதழில் வெளியான கட்டுரையில், மூளையை வளர்க்க 11 வழிகள் என்று சொல்லி இருக்கிறார்கள். க்ரிம்ஸன் ரூம்களையும், விரிடியன் ரூம்களையும் திறக்கவேனும் பயன்படுமே என்று அந்த விஷயங்களைப் படித்து வைத்தேன். சில வழிகள் தெரிந்தவை, சில விஷயங்கள், 'அப்படியா என்ன?' ரகம். நிறைய பயாலஜி சம்பந்தமான விளக்கங்கள் சொல்லியிருந்தார்கள். அதெல்லாம் இல்லாமல் gist மட்டும் தர முயல்கிறேன். கொஞ்சம் இங்கே சாம்பிள் பாருங்களேன்… வயசானலும் மங்கிப் போகாத நினைவு வேண்டுமா? Modafinil எடுத்துக் கொள்ளுங்கள்! இது நமக்குப் பெரிதும் உதவும் என்று நினைக்கிறேன். ஒரு 90 மணி நேரம், அதாவது, 4 நாள் – முழுக்க தூக்கமில்லாமல் வேலை செய்து கொண்டே இருக்க முடியுமா? முடியும் என்கிறார்கள் – modafinil எடுத்துக் கொண்டால்! எனது நண்பன் ஒருவன் பஸ்ஸில் ஏறிய அடுத்த நிமிடம் தூங்கி வழிவான்; கொஞ்சம் ஏஸி இருந்தால், அவன் கண்கள் சொக்கும். அவனைப் போன்ற ஆசாமிகளுக்கு வழங்கப்பட்டு வந்த இந்த modafinil, இன்று, வேலைப் பளுவால் தூக்கம் கெட்டுப் போகிறவர்களுக்கும் பரிதுரைக்கப் படுகிறது. இன்னும், வயதானவர்களுக்கே உரிய அசௌகரியமான ஞாபக மறதியைப் போக்குவதற்குக் கூட மருந்து உண்டாம். தாத்தாக்களை எல்லாம் வாலிபர்கள் போல செயலாற்ற வைக்குமாம். ஆச்சரியமாக உள்ளது. எங்கள் தொகுதி MLA-வுக்குக் கொடுக்க வேண்டும். வில்லிவாக்கத்தில் ரயில்வே மேம்பாலம் அமைப்போம் என்று 5 வருடங்களுக்கு முன் கூறி, ஏனோ பாவம், மறந்துவிட்டார். உண்மையிலேயே மூளை வளர்ச்சிக்கு வெண்டைக்காய் சாப்பிட வேண்டுமா? மூளைக்கு சரியான அளவு குளூக்கோஸ் கிடைத்துக் கொண்டே இருக்க வேண்டும். காலையில் breakfast ஸ்கிப் செய்தால், அலுவலகக் கணக்கில் கோட்டை விடும் வாய்ப்பு இருக்கிறது. ஜாக்கிரதை! எப்படியாவது, தினமும் பீன்ஸ் சாப்பிடச் சொல்கிறார்கள். மதிய உணவில், ஒரு ஆம்லெட், அப்புறம் கொஞ்சம் பச்சை விஷயங்கள் இருக்க வேண்டும் என்பதனால், சாலட் வகையறாக்கள், அதன் பின், கொஞ்சம் தயிர், இதெல்லாம் மூளையைச் சுறுசுறுப்பாக வைத்திருக்கும். பிஸ்கட், கேக், பீட்ஸா போன்ற junk food-களின் பக்கம் தலை வைத்தும் படுக்காதீர்கள் என்கிறார்கள். சில எலிகளைப் பிடித்து, நிறைய junk food சாப்பிட வைத்து, அவற்றை ஒரு maze-இல் விட்டிருக்கிறார்கள். அத்தனை எலிகளும் ஒரே மந்தமாகச் செயல்பட்டனவாம். உஷார்! மாலை வேளையில், சாவகாசமாக உட்கார்ந்து ஸ்ட்ராபெர்ரி சாப்பிடுங்கள். விஞ்ஞானிகள் சொல்கிறது போல் உங்கள் கவனம் கூர்மையாகிறதோ இல்லையோ, மாலையில் நல்ல சுவையான சமாச்சாரம் சாப்பிட்ட திருப்தியாவது கிடைக்குமல்லவா? இசை அமைப்பவர்கள் மட்டும் மேதைகள் இல்லை, இசையைக் கேட்கின்றவர்களும் தான்! என்ன ஆச்சரியமாக உள்ளதா? பல நபர்களை Mozart-இன் இசையைக் கேட்கச் செய்து சோதித்திருக்கிறார்கள். கேட்டவர்கள் எல்லாம் மிக்க உற்சாகத்தோடு தம் வேலையைச் செய்திருக்கிறார்களாம். இசை கேட்டால் உற்சாகமாவது இயற்கை தான் என்கிறீர்களா? இதே இசையை எலிகளையும் கேட்க வைத்திருக்கிறார்கள். அவயும் Mozart-இன் இசையைக் கேட்டு maze-களில் உற்சாகமாக வழியைக் கண்டுபிடித்தனவாம். சிறு வயதில் இசை வகுப்புகளுக்குச் சென்ற

மாணவர்களின் IQ, மற்றவர்களை விட சில புள்ளிகள் அதிகமாக இருந்தனவாம். எப்படியும், இசையைக் கேட்பதில் நஷ்டமில்லை என்பதால், கேட்டு வைப்போமே. மூளை அதுபாட்டுக்கு ஒரு மூலையில் வளரட்டும்! எதுவுமே தேறவில்லை என்றால் இருக்கவே இருக்கிறது டெக்னாலஜி! பல நாட்கள் முன்னால், சுஜாதாவின் 'பேசும் பொம்மைகள்' நாவல் படித்தேன். Downloading என்று ஒரு கற்பனை டெக்னாலஜியில், மூளையில் சிப் வைத்து, ஒருவரின் நினைவு வங்கியையே மாற்றலாம் என்கிற போக்கில் எழுதியிருந்தார். அப்படிப்பட்ட தொழில்நுட்பம் இன்னும் வரவில்லை என்றாலும், மூளையில் சில மின்னணு சர்க்கிட்களைப் பொறுத்தி, செயற்கை கை, கால் போன்றவற்றை இயக்க முடியும் என்கிறார்கள். இன்னும், வெறும் மின்காந்த அலைகளைப் பயன்படுத்தி, ஒருவரின் கற்பனை சக்தி, ஆற்றல் எல்லாவற்றையும் மாற்றலாம், ஒரு ஊசி மூலாமாக, இறந்த மூளை செல்களை இயங்கச் செய்யலாம், சில எலெக்ட்ரோடுகளைச் செருகியும் (Terminal Man நாவலில் வருவதைப்போல…) மூளையின் செயல்பாட்டைக் கட்டுப்படுத்தலாம் என்றெல்லாம் சொல்கிறார்கள். மெத்தப் படித்த விஞ்ஞானிகள் – சொல்வதில் நிச்சயம் விஷயம் இருக்கும். மைக்கேல் க்ரைட்டன் சொல்வதையே நம்புகிற கூட்டம் இருக்கும் போது, இவர்கள் சொல்வதை ஏன் நம்பக்கூடாது? மூளையைச் சரியான முறையில் work out செய்ய வேண்டும். அண்மைக் காலம் வரையில், ஒரு மனிதனின் problem solving, verbal reasoning போன்ற திறமைகள் அவனின் மரபணுக்களின் அமைப்பில் நிர்ணயம் செய்யப்படுகிறது என்று கருதப்பட்டது. சமீபத்தில் தான், அவனது working memory-யை பழக்குவதன் மூலம், இவற்றையெல்லாம் மேம்படுத்தலாம் என்று கண்டறிந்துள்ளனர். ஆமாம், அதென்ன working memory? நீங்கள் ஒரு சின்ன கணிதக் கணக்கு போடுகிறீர்கள்: 68+7-23-4+35 என்று ஒரு தொடர் கணக்கு. இதை மனதில் படிப்படியாகத் தானே ஸால்வ் செய்வீர்கள்? அடுத்தடுத்த படிகளின் விடைகளை மனதில் பதிந்துக் கொண்டு, (கணிப்பொறியில் பயன்படும் stack போல…), இறுதியில் சரியான விடையைச் சொல்கிறீர்கள். நம் மூளைக்குள் இதற்கு உதவுகிற stack தான் இந்த working memory. (செயல் நினைவகம் எனலாமா?) பல குழந்தைகளை வைத்து ஆராய்ந்து, செயல் நினைவகத்தைச் சரியான முறையில் பயிற்றுவித்தால் IQ அதிகரிக்கிறது என்று கண்டறிந்துள்ளார்கள். எதுவுமே நினைவில் வைத்துக்கொள்ள முடியவில்லையா? ஒரு அரங்கத்தில் 100 பேர் இருக்கிறார்கள். எல்லோரும், ஒவ்வொருவராக எழுந்து, தம் பெயர்களைச் சொல்லி அமர்கிறார்கள். ஒரு மணி நேரம் கழித்துக் கேட்டால், அத்தனைப் பேரின் பெயர்களையும் உங்களால் நினைவில் வைத்திருந்து சொல்ல முடியுமா? இதெல்லாம் அஷ்டாவதானிகளுக்குத் தான் சாத்தியம், என்னை ஆளை விடுடா சாமி என்று ஒதுங்குகிறீகளா? அதெல்லாம் பொய். பழகினால் எல்லாருக்குமே சாத்தியம் தான் என்கிறார்கள் விஞ்ஞானிகள் (இவர்களெல்லாம் திருந்தவே மாட்டர்களா?) நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய விஷயங்களை, மனதில் கதை போல உருவாக்கி வைத்துக்கொள்ள வேண்டும். mnemonics என்பார்களே, அதுதான். நபர்களின் முகத்தோடு பெயர்களைத் தொடர்புபடுத்தி நினைவில் வைத்துக்கொள்ள, அவர்களைப் பற்றி ஹாஸ்யமாக ஏதேனும் நினைவில் பதித்துக் கொள்ளுங்கள். (கவுண்டமணி வசனங்கள் நமக்குப் பெரிதும் உதவும்… தீச்சட்டித் தலையா!, ஆம்லெட் மண்டையா! – இதுமாதிரி). சம்பந்தப்பட்ட நபருக்குத் தெரியாத வரையில் ஆபத்தில்லை! தூக்கம் கூட ஒரு அருமருந்து! தூங்காதே தம்பி தூங்காதே என்ற பட்டுக்கோட்டை பாடல் எல்லா சமயங்களிலும் பொருந்தும் என்று சொல்லிவிட முடியாது. நீங்கள் 21 மணி நேரம் தொடர்ந்து விழித்துக்கொண்டிருக்கிறீர்கள் என்றால், உங்கள் மனநிலை, நன்றாக மது அருந்திய நபருக்கு ஒப்பாக இருக்குமாம். இதற்கு என்ன தீர்வு? கொஞ்ச நேரம் தூங்குங்கள்

. அது போதும்! ஒரு வீடியோ கேம் விளயாடுகிறீர்கள். தொடர்ந்து 2 மணி நேரம் விளையாடிவிட்டு, 1 மணி நேரம் தூங்கியெழுந்து பின்னால் ஆட்டத்தைத் தொடர்ந்தால், உங்கள் ஆடுதிறன் அதிகரித்திருக்குமாம். தூக்கத்தின் போது, உங்கள் மூளையின் சிக்கலான சர்க்கிட்களில் உள்ள செய்திகள் எல்லாம் ஒன்றோடொன்று தொடர்புபடுத்தப் படுகின்றன. இதன் காரணமாக, தூங்கி எழுந்ததும் ஒரு தெளிவு பிறக்கிறது. வேதிப் பொருட்களுக்கான periodic table அமைத்துக் கொடுத்த ரஷ்ஷிய விஞ்ஞானி Dmitri Mendeleev, அந்த டேபிளை உருவாக்க ஒரு நாள் முழுக்க முயன்றும் முடியாமல் தூங்கப் போனாராம். தூக்கத்தில், அவருக்கு வந்தக் கனவில் அந்த டேபிளை எவ்வாறு உருவாக்குவது என்கிற சூத்திரம் தெரிந்ததாம். தூக்கத்திற்கு அவ்வளவு பவர் உண்டு! இன்னும் பல வழிகள் உண்டு – மூளையை வளர்க்க! தினமும் நடை பயிற்சி செய்கிறவர்களின் மூளைத் திறன், நடை பயிலாதோரை விடவும் அதிகமாக இருப்பதாக ஆராய்ந்துள்ளனர். யோகா முறையில் கூட மூளை வளர்ச்சியை அதிகரிக்கும் பயிற்சிகள் உண்டு. யோகாவில், பின் பக்கமாக வளைகிற ஆசனம், மூளைக்கு ஒரு வேகத்தை அளிக்கிறதாம். மிகவும் ஆச்சரியமான விஷயம்: 2001-இல், சில நபர்களை வைத்து ஒரு சோதனை செய்யப்பட்டது. அவர்கள் அனைவரும் தங்கள் தோள் தசைகளை வலுப்படுத்தும் பயிற்சியில் ஈடுபட்டது போல் கற்பனை செய்துகொள்ள பணிக்கப்பட்டார்கள். தினமும் 15 நிமிடங்கள் இது போல் கற்பனை செய்துகொள்ள வேண்டும். 12 வாரங்கள் கழித்துச் சோதித்ததில், அவர்களின் தோள்கள் 13% வலுவடைந்திருந்தன!! தீயன பார்க்காதே, தீயன கேட்காதே, தீயன பேசாதே என்ற காந்தியின் தத்துவம் மூளைக்குச் சரியான ஆரோக்கியம் தரவல்லது என்று ஆராய்ந்திருக்கிறார்கள். கிறிஸ்தவக் கன்னியாஸ்திரீக்கள் 100 வருடங்கள் மன ஆரோக்கியத்துடன் இருக்கிறார்களாம் – தீயனவற்றிலிருந்து விலகியிருப்பதால்! பி.கு.: ஒரு கன்னியாஸ்திரீ சொன்னாராம்: "Think no evil, do no evil, hear no evil, and you will never write a best-selling novel" என்று! மூளைக்குத் தொலை இயக்க சக்தி இருக்கிறது என்றால் நம்புவீர்களா? எப்படி என்று இன்னும் கண்டுபிடிக்கவில்லை. ஆனால், நியூரோஃபீட்பேக் என்கிறார்கள். EEG (Electroencephalogram) என்பது மூளையில் இருக்குன் மின் அலைகள். இந்த அலைகளில் alpha அலைகள் என்று ஒரு வகை உண்டு. இந்த alpha அலைகளைக் கொண்டு நாம் நினைக்கிறதை இயக்க முடியும் – பயிற்சி இருந்தால். தலையின் மேற்பரப்பில் பொறுத்தப்பட்ட surface electrode-கள் வழியாக இந்த alpha அலைகளைப் பெற்று, அதன் மூலமாக, ஒரு வீடியோ கேமில் காரின் வேகத்தைக் கட்டுப்படுத்திக் காட்டியிருக்கிறார்கள். நினைத்தாலே போதும் – கார் பறக்கிறது என்றால் சும்மாவா? இது போல, நினைப்பதன் மூலமாகவே, கற்பனை சக்தியைக் கூட்டலாம், உடல் வலையை இல்லாமல் செய்யலாம், வேலைத் திறனை அதிகரிக்கலாம், இன்னும் பல அதிசயங்கள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன! எப்படியோ, நான் தினமும் செய்கிற நடப்பது, சாப்ப்பிடுவது, தூங்குவது, இசை கேட்பது – எல்லாமே மூளையை வளர்க்கும் என்றால் என்னால் நம்பவே முடியவில்லை!

Related Posts with Thumbnails

Written by Deepak

June 10th, 2005 at 12:14 am