மீண்டும் ஒரு சிறுகதை

April 23rd, 2005       3 comments

மீண்டும் ஒரு கதையை மொழிபெயர்க்கும் முயற்சி. Mike Krath எழுதிய A Most Ambitious Experiment என்கிற சிறுகதை. இந்த முறை கொஞ்சம் மாற்றி, கதைமாந்தரையும் தமிழ்ப்படுத்தியிருக்கிறேன். பிழையிருப்பின் மன்னிக்கவும். விளையாட்டு "கண்மணி, நான் சொல்றதை கவனமா கேட்டுக்க", என்று மதன் சொன்ன போதே தன் கணவன் எக்குத்தப்பாக ஏதோ செய்யப் போகிறான் என்பது புரிந்துவிட்டது கண்மணிக்கு. "ம்ம்ம்… உனக்கு எப்படி சொல்லிப் புரிய வெக்றது? இப்ப நான் ரொம்ப தூரத்துக்கு ஒரு பயணம் போகப் போறேன். பல வருஷம் உன்னால என்னைப் பார்க்க முடியாது. ஆனா நான் உன்னை வந்து பார்ப்பேன். என்ன?" மதன் சொன்னதைக் கேட்டால் எந்த சாமன்யனும் அவனை என்னமோ போல ஏற இறங்கப் பார்த்திருப்பான். ஆனால் கண்மணிக்கு இதெல்லாம் வாடிக்கையாகிவிட்டது. மிகச் சாதாரணமாகக் கேட்டாள், "அப்படி எங்க போறீங்க?" "எதிர்காலத்துக்கு" "என்ன….?" "ஆமாம் கண்மணி, நான் எதிர்காலத்துக்கு போகப் போறேன். உனக்கு இது அதிர்ச்சியா இருக்கலாம். நான் திரும்ப வரும் போது உனக்கு என் மேல கோபமா கூட இருக்கலாம். ஆனா கவலை படாதே. நான் இங்கிருந்து போன 5 நிமிஷத்துல திரும்பி வந்துடுவேன். சரியா?" "……" "ஒண்ணும் இல்லடி, நம்ம சீனு மாமா எறந்தப்ப அவர் சொத்துலருந்து நமக்கு அம்பது லட்சம் வந்துது இல்லியா, அதை எதுல இன்வெஸ்ட் பண்றதுன்னு ஒரே குழப்பமா இருக்கு. இப்போதைக்கு ஒரு பிளான் பண்ணி வச்சிருக்கேன். அது வொர்க் அவுட் ஆகுதான்னு பார்க்கணும். அதான் ஒரு 20 வருஷம் கழிச்சு என்ன ஆயிருக்குன்னு பார்க்கப் போறேன்", மதன் தொடர்ந்தான். கண்மணிக்கு இப்போது புரிந்துவிட்டது. என்னத்தான் மதன் ஒரு மாதிரியான ஆளாக இருந்தாலும்; தன் வீட்டுக் கொல்லைப்புற ஸ்டோர் ரூமில் மணிக்கணக்கில், ஏன், சில சமயம் நாள் கணக்கில் கூடக் கதவைத் தாழிட்டு ஆராய்ச்சி என்று சொல்லி ஏதோ செய்து கொண்டிருப்பவனாக இருந்தாலும், இப்போது அவன் சொல்வது அக்மார்க் பைத்தியக்காரத் தனமாகத் தோன்றியது. தூக்கக் கலக்கத்தில் (அல்லது ஆராய்ச்சி மயக்கத்தில்) ஏதோ உளறுகிறான் என்று நினைத்தாள். "சரிங்க… இன்னிக்கு என்ன சமைக்கட்டும்?", சாவகாசமாகக் கேட்டாள். "இப்போதைக்கு என்னை எதுவும் கேக்காத. ஒரு அஞ்சு நிமிஷம் பொறு. திரும்பி வந்து சொல்றேன்". மதன் வேகமாகத் தன் வீட்டுக் கொல்லைப் புறத்தை நோக்கி நடந்தான். எல்லம் ஒரே குழப்பமாக இருந்தது கண்மணிக்கு. 'சரி, என்னமோ செய்து தொலைக்கட்டும்', என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டாள். வீட்டில் தலைக்கு மேல் வேலை இருந்தது. சமையல் செய்ய வேண்டும், துணி துவைக்க வேண்டும், டிவியில் 'தாலி பாக்கிய'த்தில் தொடங்கி வரிசையாகப் பல ஸீரியல்கள் பார்க்க வேண்டும், இன்னும் என்னென்னவோ! எல்லா வேலையும் ஒவ்வொன்றாகச் செய்து முடிப்பதற்குள், மதன் சொன்ன விஷயத்தை மறந்தே போனாள். "எங்க போனாரு இவரு? ஸ்டோர் ரூம்க்குள்ள போய்ட்டார்னா வெளிய பூகம்பமே வந்தாலும் தலை காட்ட மாட்டார். சாப்பாடு வேற ஆறிப் போகுதே", என்று அங்கலாய்த்துக் கொண்டே கொல்லைப் புறத்தில் சென்று ஸ்டோர் ரூம் கதவைத் தட்டினாள். பதிலேதும் கிடைக்கவில்லை. மீண்டும் ஒரு முறை தட்டினாள். ஊஹூம். கதவைத் திறந்து கொண்டு உள்ளே சென்றாள். வசவசவென்று எலெக்ட்ரானிக் சாமான்கள் எங்கு பார்த்தாலும் கொட்டிக் கிடந்தன. ஏதேதோ விளக்குகள் எல்லாம் எறிந்துகொண்டிருந்தன. கருப்பு நிறத்தில் இருந்த ஒரு விஷயத்திலிருந்து பீப்… பீப்… என்ற சத்தம் விட்டு விட்டு ஒலித்துக் கொண்டிருந்தது. எங்கு பார்த்தாலும் மதனைக் காணோம். வீட்டினுள் இருப்பானோ என்று எல்லா இடத்திலும் தேடிப் பார்த்தாள். எங்கேயும் மதன் இருக்கவில்லை. இதற்குள் இருட்டிவிட்டது.
எங்கேயோ வெளியில் சென்றிருக்க வேண்டும், வந்து விடுவார் என்று நினைத்தாள். மேசை மீது அவனுக்குச் சாப்பாடு எடுத்து வைத்துவிட்டுப் போய்ப் படுத்துக்கொண்டாள். காலையில் எழுந்து பார்த்த போது, அவள் ராத்திரி எடுத்து வைத்த சாப்பாடு, மேசை மீது அப்படியே இருந்தது. மதன் வரவேயில்லை. "மதன்…மதன்…", என்று உரக்கக் கத்திப் பார்த்தாள். பிரயோஜனமில்லை. ஒன்றும் புரியாமல் உள்ளே போய் சோஃபாவில் உட்கார்ந்து கொண்டாள். அதன் பின் மதன் வரவேயில்லை. கொஞ்ச நாள் கழித்து போலீசிடம் சென்றுப் புகார் செய்தாள். அவர்களிடம் நடந்ததைக் கூறினாள். போலீஸ் வந்தார்கள். விசாரித்தார்கள். வீட்டில் ஏதேனும் தடயம் கிடைக்குமா என்று சோதனையிட்டார்கள். ஏதும் பலனில்லை. மதன் எங்கு சென்றான் என்பது யாருக்குமே தெரியவில்லை. "உங்க கணவர் காணாமல் போறதுக்கு முன்னால ஏதாவது சொன்னாரா?" "அஞ்சு நிமிஷத்துல திரும்ப வந்துடுவேன்னு சொன்னாரு" அதன் பின் போலீஸும் சென்றுவிட்டார்கள். நாட்கள் கழிந்தன. அதன்பின் வாரங்கள், மாதங்கள்… மதன் திரும்பி வருவான் என்கிற நம்பிக்கையே போய்விட்டது கண்மணிக்கு. போலீஸும் தம் தேடுதலை நிறுத்திவிட்டார்கள். எந்தத் தடயமும் கிடைக்காததால் கண்மணியின் கணவன் அவளை விட்டு ஓடிப் போய்விட்டான் என்ற முடிவுக்கு வந்தார்கள். ஆறு மாதம் கழித்துக் கேஸை மூடிவிட்டார்கள். ஆண்டுகள் உருண்டோடின. கண்மணிக்கு ஒரு எக்ஸ்போர்ட் கம்பெனியில் வேலை கிடைத்தது. முகத்தில் சுருக்கங்கள் விழுந்திருந்தன. கண்பார்வை மங்கத் தொடங்கியிருந்தது. ரொம்ப கஷ்டப்பட்டுத் தன் காலத்தைத் தள்ளினாள். தன்னைவிட்டு ஓடிப்போன கணவனின் மேல் அவளுக்கு ஆத்திரமும் வெறுப்பும் ஏகத்துக்கு வளர்ந்திருந்தது. தன் துர்பாக்கிய நிலைக்கு அவனே காரணம் என்று தினம் தினம் அவனை மனதிற்குள் திட்டித் தீர்த்தாள். மதன் காணாமல் போய் சரியாக இருபது வருடங்கள் ஆயிற்று. மாலை நேரம். இருட்டத் தொடங்கியிருந்தது. கண்மணி தன் வீட்டின் சமையல் அறை மேஜையில் அமர்ந்து காய்கறி நறுக்கிக் கொண்டிருந்தாள். பின்னால் கொல்லைப்புறத்தில் ஏதோ சத்தம் கேட்டது. யாரோ நடந்து வரும் காலடியோசை கேட்டது. யாரது இந்த நேரத்தில்? மெதுவாக எழுந்தாள். அதற்குள் அந்த சத்தம் தன் கொல்லைப்புறக் கதவை நோக்கி வருவதை உணர்ந்தாள். எச்சரிக்கையாக, கொல்லைப்புற ஜன்னலிலிருந்து எட்டிப் பார்த்தாள். அங்கே, அவள் கண்ணெதிரில் அவளின் கணவன் மதன்! அவளை விட்டுப் பிரிது சென்ற போது எப்படி இருந்தானோ, அப்படியே இருந்தான். இளமை மாறாமல்…! கண்மணி அதிர்ச்சியில் உறைந்து போனாள். அவள் வாயில் வார்த்தைகளே வரவில்லை. கொஞ்ச நேரத்தில் சமாளித்துக் கொண்டு, "நீங்களா…?", என்றாள். "சீனு மாமாவோட அந்த அம்பது லட்சம் என்ன ஆச்சு?", மதன் கேட்டான். "இத்தனை நாள் நீங்க எங்க போயிருந்தீங்க?" "அதெல்லாம் விடுடி. அந்த அம்பது லட்சம் என்ன ஆச்சு? அதச்சொல்லு மொதல்ல" "நல்லா இருக்கு நீங்க சொல்றது. இருபது வருஷத்துக்கு முன்னால என்னை நடுத்தெருவுல அம்போன்னு விட்டுட்டுப் போய்ட்டீங்க. இப்போ திடீர்னு திரும்பி வந்து அம்பது லட்சம் எங்கேன்னு கேக்றீங்க. நல்லா இருக்குங்க உங்க நியாயம்…" "ஓ, அப்ப நீ அதை மொத்தமா செலவு செஞ்சிட்டியா? க்ரேட். வெரி க்ரேட். கொஞ்சம் பொறு, இதோ வரேன்" மதன் மீண்டும் கொல்லைப்புற ஸ்டோர் ரூமினுள் ஓடினான். "மதன்…மதன்… எங்க போறீங்க…?", என்று கத்திக் கொண்டே கண்மணி அவன் பின்னால் ஓடினாள். அவள் ஸ்டோர் ரூமினுள் போய்ப் பார்த்த போது மதன் அங்கு இல்லை. மாயமாகிப் போயிருந்தான். கண்மணிக்கு எதுவுமே விளங்கவில்லை. மறுபடியும் சமையலறைக்குத் திரும்பினாள். என்ன நடந்தது என்பதை மீண்டும் மனதினுள் ஓட விட்டாள். எதுவு
் புரியவில்லை. எல்லாமே குழப்பமாக இருந்தது. அந்த ஐம்பது லட்சம் ரூபாய், மதன் முதலில் காணாமல் போன போது யாரும் சீண்டாமல் அப்படியே இருந்தது. ஆனால், இப்போது, அவள் மனதில் புதிதாக ஏதேதோ தோன்றத் தொடங்கியது. அந்த ஐம்பது லட்சத்தை மதன் ஒரு டிரஸ்டில் இன்வெஸ்ட் செய்திருந்தான். 20 ஆண்டுகள் ஆகும் வரைத் தன் கைக்கு அந்த பணம் கிடைக்காதபடி செய்திருந்தான். மதன் காணாமல் போய், ரொம்ப நாள் தேடியும் கிடைக்காமல் போகவே, போலீஸ், அவன் இறந்து போய் விட்டதாக முடிவு கட்டினார்கள். அதன் விளைவாக, 20 ஆண்டுகள் பொறுத்திருக்காமலேயே அந்த டிரஸ்ட் கண்மணி வசமானது. ஐம்பது லட்சம் அவளுக்கு உடனடியாகக் கிடைத்தது. அதன் பின்னால்… கொல்லைப் புறத்தில் மறுபடியும் சத்தம் கேட்டது. மீண்டும் அதே காலடியோசைகள். மீண்டும் ஒரு முறை மதன் அவள் முன் ஆஜரானான். நேராக சமையலறைக்கு வந்தான். "இப்ப சொல்லு, அந்த அம்பது லட்சம் என்ன ஆச்சு?" "நான் தான் சொன்னேனே, அது செலவாகிவிட்டது" "அது எப்படி முடியும்? நான் அதை ஒரு டிரஸ்டுல போட்டு வச்சிருந்தேனே…" "நீங்க சொல்றது சரிதான். ஆனா நீங்க எறந்து போய்ட்டதா முடிவு பண்ணி அந்த பணத்த என் கைலியே கொடுத்துட்டாங்க" "ஓ அப்படி ஆயிடுச்சா? ஒரு நிமிஷம் இரு" மதன் மீண்டும் மறைந்து போனான். கண்மணிக்குக் குழப்பம் இன்னும் அதிகமானது. 'நான் செலவு செஞ்சேனா? எதை செலவு செஞ்சேன்?', தன்னையே கேட்டுக் கொண்டாள். மதன் காணாமல் போன போது, பணத்துக்குத் தான் மிகவும் கஷ்டப்பட்டதை நினைத்துப் பார்த்தாள். மதனுக்கு ஏதோ சொத்து கிடைத்திருப்பதாகச் சொன்னானே என்று அதைத் தேடிப் போனதும், அதை அவன் எங்கோ மறைத்து வைத்திருப்பதாக வக்கீல் சொன்னதும் அவள் ஞாபகத்திற்கு வந்தன. ஆனால் எங்கு மறைத்து வைத்தான்…? அவள் நினைத்துக் கொண்டிருக்கும் போதே மதன் மீண்டும் தோன்றினான். சமையலறைக்கு வந்தான். "மதன், இந்த இருபது வருஷத்துல நான் எவ்ளோ கஷ்டப் பட்டேன் தெரியுமா உங்களுக்கு? சாப்பாட்டுக்குக் கூட வழியில்லாம நின்னேன்" "கவலை படாத கண்மணி. இதெல்லாமே ஒரு விளையாட்டு. ஒரு கனவு மாதிரின்னு வச்சிக்கோயேன். இன்னும் கொஞ்ச நேரம்தான். அப்றம் எல்லாமே உனக்கு விளங்கிடும்" "அது சரி… நீங்க பாட்டுக்கு காணாம போய்ட்டீங்களா!, ஏதாச்சும் காய்கறி நட்டுப் பொழைக்கலாமேன்னு கொல்லைப்பக்கம் பூரா தோண்டினேன். அப்பத்தான் அங்க புதைச்சி வச்சிருந்த தங்கக் காசு கிடைச்சது. அத வச்சித் தான்…" "அடிப்பாவி! அந்த காசை நீ கண்டுபிடிச்சிட்டியா?" "நீங்க என்ன சொல்றீங்க? ஓஹோ! அப்ப நீங்க தான் அதை அங்க புதைச்சி வச்சீங்களா? எப்படியோ, அந்தக் காசுல தான் ஒரு சின்ன வியாபாரம் ஆரம்பிச்சு, சௌகரியமா வாழ்ந்துண்டிருக்கேன்" மதன் எதுவும் சொல்லாமல் கொல்லைப்புறம் ஓடி மறைந்து போனான். அவன் திரும்ப வருவான் என்று எதிர்பார்த்து அவன் மனைவி காத்திருந்தாள். ஆனால், அவன் திரும்பவேயில்லை. அவனுக்காகக் காத்திருக்க மனமின்றி, அவள் எழுந்து போய்ப் பாதியில் விட்டு வந்த சமையல் வேலையைத் தொடர்ந்தாள். தன் கணவன் செய்த காரியத்தை நினைத்து அவளுக்குக் கோபம் வந்தது. 'அவர் வரட்டும். இன்னிக்கு இருக்குது அவருக்கு", என்று நினைத்துக் கொண்டாள். தான் ஏன் தன் கணவன் மீதுக் கோபம் கொள்ள வேண்டும்? அவன் தன்னை விட்டு ஓடிப் போனானா என்ன? இல்லையே! ஏதோ பிரமை என்று நினைத்துக் கொண்டாள். 'இப்பல்லாம் பட்டப் பகல்லியே கனாக் காண ஆரம்பிச்சிட்டேன்', – கண்மணி நினைத்துக் கொண்டாள். மதன் சாவகாசமாகச் சமையலறைக்குள் நடந்து வந்தான். "என்னங்க? இன்னிக்கி என்ன சமைக்க்ட்டும்? நீங்க சொன்னப்றம் தான் சமையலே ஆரம்பிக்கணும்" "எப்பப் பாரு சமையல் சமையல்! இதைத் தவிர ஒனக்கு ஒண்ணுமே தெரியாதா?"
"ஏங்க? இப்ப என்ன ஆயிடுச்சு?" "உன் கிட்டேருது ஒரு 20 வருஷம், நம்ம பணத்தைக் காப்பாத்தறதுக்குள்ளே, அப்பப்பா…" "என்னங்க… என்ன சொல்றீங்க?" "அல்ப காலம் 20 வருஷம். அது வரைக்கும் கூட உன்னால நம்ம காச செலவழிக்காம பாத்துக்க முடியாதாடி?" "என்னங்க என்னென்னமோ உளர்றீங்க? ஒரு அஞ்சு நிமிஷத்துல திரும்பி வரேன்னு சொல்லி போனீங்க. இப்ப திரும்பி வந்து, ஏதோ பணம், 20 வருஷம் அது இதுன்னு ஏகத்துக்கும் பொலம்ப்றீங்க… என்னங்க ஆச்சு உங்களுக்கு? ராத்திரி கண் முழிச்சி வேலை பாக்காதீங்கன்னா கேக்றீங்களா? வேண்ணா டாக்டர் கிட்ட போலாமா?", அக்கறையுடன் கேட்டாள் கண்மணி. மதன் தன் மனைவியின் முகத்தைப் பார்த்தான். இவளிடமிருந்து 20 லட்சத்தை எப்படிக் காப்பாற்றுவது என்று எண்ணினான். சட்டென்று அவனுக்கு ஒரு யோசனை தோன்றியது. இவளைக் கொன்றுவிட்டால் என்ன? இவளை இப்போதைகுக் கொன்றுவிட்டு, 20 வருடங்கள் முன்னோக்கிச் சென்று தன் 20 லட்சம் என்ன ஆகிறது என்று பார்க்கலாம்; பிறகு, ஒரு 5 நிமிடங்கள் முன்னால் திரும்பி, தன் மனைவியுடன் தன் வாழ்க்கையைத் தொடங்கலாம் என்று திட்டம் போட்டான். அருமையான திட்டம்! "கண்மணி, அந்த கைதுடைக்கிற துணி எங்க இருக்கு?" "இந்தாங்க" அவள் சற்றும் எதிர்பார்க்கவில்லை. அவன் அத்துணியை அவள் கழுத்தில் சுற்றி நெரிக்கத் தொடங்கினான். "கவலை படாத. இது ஒரு சின்ன விளையாட்டு, அவ்வளவுதான்", என்று கூறிக் கொண்டே துணியை இறுக்கினான். சற்று நேரத்தில் கண்மணி மடிந்து சாய்ந்தாள். மதன் கடகடவென்று கொல்லைப்புறம் போய் மறைந்தான். இருபது வருடங்கள் கடந்து தோன்றினான். மீண்டும் கொல்லையிலிருந்து வீட்டுக்கு ஓடி வந்தான். "யார்றா அது?", ஒரு அழுத்தமான ஆண்குரல் கேட்டது. அய்யோ! இதைப் பற்றி அவன் யோசிக்கவே இல்லையே. இப்போது என்ன செய்வது? எங்கேனும் ஒளிந்து கொள்ளலாமா என்று சுற்றிலும் இடம் தேடினான். டூ லேட். அந்த ஆள் கையில் துப்பாக்கி வைத்திருந்தான். "அசையாதே அங்கேயே நில்லு", – இது அந்த ஆளின் குரல். "அவசரப்பட்டு சுட்டுடாத. நான் சொல்றத கொஞ்சம் கேளு" காலம் கடந்துவிட்டது. அவன் சுட்டான். மதன் விழுந்து மடிந்தான். விளையாட்டு முடிந்தது.

ஒரு சிறுகதை

April 12th, 2005       29 comments

முதலில் ஒரு சிறுகதையைத் தமிழில் மொழிபெயர்த்தால் என்ன என்று தோன்றியதால், இக்கதையை எழுதியிருக்கிறேன். ஆங்கில மூலம்: Fernando Sorrentino எழுதிய There's a Man in the Habit of Hitting Me on the Head with an Umbrella என்கிற சிறுகதையைத் தமிழில் மொழிபெயர்க்க முயற்சி செய்துள்ளேன். பிழை இருந்தால் மன்னிக்கவும். எப்போதும் ஒருவன் என் தலையில் குடையால் அடித்துக்கொண்டே இருக்கிறான் ஒரு மனிதன் எப்போதும் என் தலையில் குடையால் அடித்துக்கொண்டே இருக்கிறான். அதனை 'அடி' என்றுகூட சொல்ல முடியாது. ஒரு குடையால் உங்கள் தலையில் லேசாகத் தட்டினால் எப்படியிருக்கும்? அது மாதிரிதான். ஆனால், விடாமல், நிறுத்தாமல்…! அவன் அப்படித் தட்ட ஆரம்பித்து இன்றைக்குச் சரியாக ஐந்து ஆண்டுகள் ஆகின்றன. முதலில் என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லைதான். ஆனால் போகப் போகப் பழகிவிட்டது. அவன் பெயர் கூட எனக்குத் தெரியாது. எல்லோரும் போல சாதாரணத் தோற்றம் அவனுக்கு. நடுத்தர வயது. எதைப்பற்றியும் சஞ்சலமில்லாத சாந்தமான முகம். காதுகளின் அருகில் தலைமுடி இப்போதுதான் லேசாக நரைக்க ஆரம்பித்திருக்கிறது. மையினால் வரைந்தது போல மெலிதான மீசை. மாநிறம். அரைக்கை சட்டையும் தொளதொளவென்று ஒரு பேன்ட்டும் அணிந்திருக்கிறான். ஐந்து ஆண்டுகளுக்கு முன்னால் அவனைச் சந்தித்தேன். மாலை சுமார் 5 மணி இருக்கும். தீபாவளிக்காக ஷாப்பிங் முடித்துவிட்டு, மாம்பலம் ரயில் நிலையத்தில் கைநிறைய பைகளுடன் ரயிலுக்காக காத்துக்கொண்டிருந்தேன். யாரோ லேசாக என் தலையில் தட்டுவது போல இருந்தது. திரும்பிப் பார்த்தேன். அதே மனிதன். அன்றிலிருந்து, இன்று நான் இதை எழுதிக்கொண்டிருக்கிற இந்தக் கணத்தில் கூட என் பின்னால் நின்று கொண்டு ஒரு இயந்திரத்தைப் போல் மந்தமாக, ஆனால் உறுதியாகத் தன் குடையால் தட்டிக் கொண்டே இருக்கிறான். யாரோ ஒருவன் ரயில் நிலையத்தில் என் தலையில் அடிக்கிறான் என்றவுடன் என்னால் கோபத்தை அடக்க முடியவில்லை. "யோவ் நீ என்ன பைத்தியமா?" என்று கொஞ்சம் சத்தமாகவே கேட்டேன். அவன் நான் சொன்னதைக் காதில் போட்டுகொள்ளாமல், தன் காரியமே கண்ணாக இருந்தான். போலீசிடம் புகார் செய்வதாகக் கூட பயமுறுத்திப் பார்த்தேன். ஊஹூம்! எதற்குமே அவன் மசியவில்லை. குடையால் தட்டுவதையும் நிறுத்தவில்லை. கொஞ்சம் ஆத்திர மிகுதியால் ஓங்கி அவன் முகத்தில் ஒரு குத்து விட்டேன். வலியால் முனகிக்கொண்டே அவன் கீழே விழுந்தான். ஆனால் விழுந்த வேகத்திலேயே மீண்டும் எழுந்து, ஒரு வார்த்தை கூட திருப்பிப் பேசாமல், மிகுந்த பிரயத்தனப்பட்டு தன் குடையைத் தூக்கி, முன்பு போலவே என் தலையில் தட்டத் தொடங்கினான். அவன் மூக்கில் ரத்தம் கசிந்து கொண்டிருந்தது. பார்க்கவே பரிதாபமாக இருந்தது. அவசரப்பட்டு விட்டோமோ என்று நினைத்தேன். உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், அவன் என்னை ஓங்கி அடிக்கவில்லை. எனக்கு ஒரு வலியும் உண்டாக்கவில்லை. லேசாகத் தட்டிக் கொண்டுதான் இருந்தான். ஆனால் அவன் தட்டிக் கொண்டிருந்ததே ரொம்ப அசௌகரியமாக இருந்தது. உதாரணத்திற்கு, ஒரு ஈ உங்கள் நெற்றியில் வந்து உட்கார்ந்து கொண்டால் உங்களுக்கு எப்படி இருக்கும்? எந்த வலியும் அதனால் இருக்காது. ஆனால் அந்த அசௌகரியத்தை உடனே விரட்டியாக வேண்டும் என்று செயல்படுவீர்கள் அல்லவா? அப்படித்தான் இருந்தது எனக்கும். அவனின் குடைத் தட்டல்கள், ஒரு ஈ மறுபடியும் மறுபடியும் வந்து என் நெற்றியில் உட்காருவது போல இருந்தது. இதற்குள், நிச்சயம் அவன் ஒரு பைத்தியமாகத் தான் இருக்க வேண்டும் என்று முடிவு பண்ணினேன். அங்கேயே இருந்து கொண்டு அவனை விரட்ட முயன்றால் பயனிருக்காது என்று ஓடத் தொடங்கினேன். (கல்லூரியில் படித்த போது, நான் ஒரு ஓட்டப்பந்தய வீரன் என்பதை நினைவில் கொள்க

). அவனும் என் பின்னால் ஓடி வந்து அடிக்கத் தொடங்கினான். நான் இதே போல் வேகமாக ஓடிக்கொண்டே இருந்தால் அவனும் ஓடி ஓடிக் களைத்து, சோர்ந்து விழுந்து இறந்து போய் விடுவானோ என்றெல்லாம் என் மனம் நினைத்தது. ஓடுவது எனக்கே சற்று பைத்தியக்காரத் தனமாகத் தோன்றியது. சட்டென்று ஓடுவதை நிறுத்தி, அவன் கண்களை நேருக்கு நேர் உற்றுப் பார்த்தேன். ஒரு கெட்ட எண்ணமோ, நிம்மதியோ, மகிழ்ச்சியோ, எதுவுமே அவன் முகத்தில் தெரியவில்லை. உணர்ச்சியில்லாமல், என் தலையில் தட்டுவதை மட்டும் நிறுத்தாமல் தொடர்ந்தான். போலீசிடம் புகார் செய்து விடலாமா என்று யோசித்தேன். போலீசிடம் சென்றால் என்னவென்று புகார் செய்வது? "சார், இந்த ஆள் விடாம குடையால என் தலையில தட்டிகிட்டே இருக்கான்" என்று சொல்வதா? அவர்கள் என்னை நம்புவார்களா? இதற்கு முன்னால் இது போன்ற புகாரை யாரேனும் கொடுத்திருப்பார்களா? நிச்சயமாக இல்லை. போலீசார் என்னையே சந்தேகிப்பார்கள். அவனுக்கு பதிலாக, என்னைப் பைத்தியம் என்று முடிவுகட்டுவார்கள். என்னைக் கைது பண்ணக் கூட வாய்ப்பு இருக்கிறது. போலீசிடம் செல்லும் எண்ணத்தைக் கைவிட்டு, வீட்டிற்குத் திரும்பிச் செல்லலாம் என்று முடிவு செய்தேன். 38-ஆம் நம்பர் பேருந்தில் ஏறினேன். அவனும் என்னைத் தலையில் தட்டிக் கொண்டே என்னைத் தொடர்ந்து பேருந்தில் ஏறினான். நான் முதல் ஸீட்டில் அமர்ந்தேன். அவன், என் அருகில் நின்றுகொண்டு ஒரு கையால் மேலே கம்பியைப் பிடித்துக் கொண்டு, இன்னொரு கையில் வைத்திருந்த குடையால், முன்பு போலவே என் தலையில் தட்டத் தொடங்கினான். பேருந்தில் என்னோடு பயணம் செய்தவர்கள் முதலில் தங்களுக்குள்ளேயே லேசாகச் சிரித்துக் கொண்டார்கள். பேருந்து ஓட்டுநர் எதிரில் இருந்த கண்ணாடி வழியாக என்னைப் பார்த்து சிரித்தார். நேரம் போகப் போக, அந்தப் பேருந்தே சிரிப்பு வெள்ளத்தில் மூழ்கியது. எல்லோரும் தங்களுக்குள் என்னைப் பற்றிக் குசுகுசுத்துக் கொண்டிருந்தார்கள். நான் பேருந்தைவிட்டு என் நிறுத்தத்தில் இறங்கிய போது, பேருந்தில் இருந்த எல்லோரும் என்னையே திரும்பிப் பார்த்துக் 'கொள்'ளெனச் சிரிக்க, எனக்கு அவமானம் தாங்க முடையவில்லை. ஆனால் இதைப் பற்றியெல்லாம் கொஞ்சம் கூடக் கவலையில்லாமல் அவன் மட்டும் தன் வேலையை உறுதியாகத் தொடர்ந்தான். பேருந்தில் இருந்து இறங்கினேன். அல்ல அல்ல, இறங்கினோம். அவனும் என்னுடன் இறங்கிக் கொண்டான். என் தெருவில் நாங்கள் இருவரும் நடந்து சென்ற போது, எல்லோரும் அர்த்தமில்லாமல் எங்களையே வெறித்துப் பார்த்தார்கள். "என்னய்யா பார்க்றீங்க? இதுக்கு முன்னால ஒருத்தன் இன்னொருத்தன் தலையில குடையால அடிக்கிறத நீங்கள்ளாம் பார்த்ததே இல்லியா?" என்று கேட்க வேண்டும் என்று தோன்றியது. ஆனால், அவர்கள் இப்படியொரு விஷயத்தைப் பார்த்திருப்பார்களா என்பதே சந்தேகம்தான் என்று பட்டது. தெருவில் நான்கைந்து வால் பையன்கள் எங்கள் பின்னால் 'ஓ'வென்று கூச்சல் போட்டுகொண்டே ஓடிவந்தார்கள். என் மனதில் நான் ஒரு திட்டம் தீட்டி இருந்தேன். வீட்டுக் கதவைத் திறந்து உள்ளே சென்றதும், அவனை உள்ளே வர விடாமல் கதவை அவன் முகத்திற்கு நேரே மூடிவிட வேண்டும் என்று நினைத்தேன். ஆனால், அவன் என் எண்ணங்களை முன்னமே அறிந்து வைத்திருந்தாற்போல், தாழ்ப்பாளைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு, என்னைத் தள்ளிவிட்டு உள்ளே வந்தான். அப்போது முதல், அவன் நிறுத்தாமல் தன் குடையால் என் தலையில் தட்டிக் கொண்டேதான் இருக்கிறான். எனக்குத் தெரிந்த வரைக்கும் அவன் சாப்பிடுவதில்லை, தூங்குவதில்லை. அவனின் ஒரே கடமை, என் தலையில் தட்டுவதுதான். நான் எங்கு சென்றாலும் என் கூடவே வருகிறான். எப்போதும் என் உடனேயே இருக்கிறான். என் அ

ந்தரங்க நடவடிக்கைகளில் கூட! முதலில் அவன் என் தலையில் தட்டிக் கொண்டே இருப்பதால் இரவில் என்னால் தூங்கவே முடிந்ததில்லை. ஆனால் இன்று, அவனின் குடை அடிகள் இல்லாமல் என்னால் தூங்கவே முடியாது போல் இருக்கிறது. இருந்தாலும், எங்கள் இருவருக்குள் இருந்த உறவு சுமூகமாக இருந்தது என்று சொல்ல முடியாது. நானும் பல சமயங்களில், பல விதங்களில் அவனிடம் கேட்டுப் பார்த்திருக்கிறேன் – அவன் ஏன் இப்ப்டியே தொடர்ந்து செய்துகொண்டிருக்கிறான் என்று. ஆனால் அதனால் எவ்விதப் பயனும் இல்லை. ஒரு வார்த்தை கூடப் பேசாமல், தன் வேலையை நிறுத்தாமல் தொடர்கிறான். பல தடவை அவனை அடித்திருக்கிறேன், அவன் முகத்தில் குத்தியிருக்கிறேன், அவனை உதைத்திருக்கிறேன், ஏன்? குடையால் கூட அடித்துப் பார்த்திருக்கிறேன். ஏதோ அடி வாங்குவதற்கே பிறந்தவன் போல என் எல்லா அடிகளையும் அவன் வாங்கிக் கொள்வான். அதுவும் அவன் கடமையின் ஒரு பகுதி போல் அமைதியாய் இருப்பான். இந்த விஷயம் தான் என்னால் புரிந்து கொள்ளவே முடியவில்லை. ஒரு அதீத நம்பிக்கையுடன், பக்தியுடன் அவன் தன் வேலையைத் தொடர்ந்தான். ஏதோ கண்ணுக்குத் தெரியாத தன் எஜமானன் சொன்னதைத் தட்டாமல் செய்கிற அடிமை போன்ற அவனின் நடவடிக்கைகள் எனக்கு விளங்கியதே இல்லை. அவன் சாப்பிடாமல் தூங்காமல் அதிசயப் பிறவியாக இருந்தாலும், நான் அடிக்கும் போது அவனுக்கு வலிக்கிறது என்பது மட்டும் தெரிகிறது. அவன் பலவீனமானவன் தான் என்பதும் எனக்கு விளங்குகிறது. ஒரே ஒரு துப்பாக்கித் தோட்டா இருந்தால் அவன் தொல்லையிலிருந்து தப்பி விடலாம் என்று எனக்குத் தெரியும். ஆனால் எனக்குப் புரியாத விஷயம், அந்தத் தோட்டாவால் அவனைக் கொல்வதா, அல்லது என்னையே சுட்டுத் தற்கொலை செய்துகொள்வதா என்பதுதான். நாங்கள் இருவரும் இறந்து போன பிறகு அவன் என் தலையில் தன் குடையால் அடிப்பதை நிறுத்திக் கொள்வானா என்பது எனக்கு உறுதியாகத் தெரியவில்லை. எப்படி இருந்தாலும், இந்த சம்பாஷணைகள் தேவையற்றவை. துப்பாக்கியெடுத்து அவனையோ அல்லது என்னையோ நிச்சயம் என்னால் கொல்ல முடியாது என்பது எனக்கு நன்றாகவே தெரியும். மாறாக, இப்போதெல்லாம் எனக்கு ஒரு கவலை உருவாகியுள்ளது. அந்தப் பெயர் தெரியாத மனிதனின் குடை அடிகள் இல்லாமல் என்னால் உயிர் வாழவே முடியாது என்று தோன்றுகிறது. சமீப காலங்களில் அடிக்கடி எனக்கு ஒரு இனம்புரியாத அச்சம் ஏற்படுகிறது. ஒரு வேளை, எனக்கு மிகவும் அவசியமாகத் தேவைப் படுகிறபோது இந்த மனிதன் என்னோடு இல்லாமல் போய்விடுவானோ…? இத்தனை நாட்கள் இரவில் நான் நிம்மதியாகத் தூங்குவதற்கு உதவியாக இருந்த அவனின் குடை அடிகள் நிரந்தரமாக இல்லாமல் போய்விடுமோ…? பயமாக இருக்கிறது.

இஞ்சினீயரிங் கல்லூரி

April 10th, 2005       2 comments

ஒரு நாளைக்கு 30 மணி நேரம் இருந்தால் கூடத் தேவலாம். கல்லூரி project work-இன் அடங்காத் தாண்டவங்களுக்கிடையே எழுதுவதற்கு சமயம் கிடைப்பது – கர்நாடகத்திலிருந்து தண்ணீர் கிடைப்பது போல் ஆகிவிட்டது. இப்போது பருவமழை – அதுதான் எழுத சமயம் வாய்த்தது. எழுதுகிறேன்… நான்கு ஆண்டுகளுக்கு முன்னால் அப்பாவித்தனமான ஃபர்ஸ்ட் இயர் பையனாக கல்லூரியில் சேர்ந்ததிலிருந்து, பல சமாசாரங்களிலும் மேதாவிலாசம் பெற்று 'அடப் பாவி!' த்தனமான ஃபைனல் இயராக உருமாறியிருக்கும் இன்று வரையில் நான் செய்ததெல்லாம், சில foreign author-களும், பலப்பல லோக்கல் author-களும் புத்தகம் என்கிற பெயரில் எழுதித்தள்ளிய விஷயங்களை உருபோட்டு, எக்ஸாம் என்கிற 'நையாண்டி தர்பாரி'ல் அதை வாந்தி எடுத்துப் பாஸ் செய்தது தான். இந்த வெட்டி வேலைக்கு எனக்கு இஞ்சினீயரிங் பட்டம்! ஒரு ரேடியோவைக் கூடத் திறந்து பார்த்த அனுபவம் இல்லை எனக்கு. இதில் கம்யூனிக்கேஷன் இஞ்சினீயராம் – கஷ்ட காலம்! நான்கு ஆண்டுகள் ஒரு பொறியியல் கல்லூரியி வளாகத்தில் நானும் தினம் தினம் நடமாடியிருக்கிறேன் என்கிற அனுபவத்தில் சில விஷயங்கள் (யோசனைகள்) சொல்கிறேன். 1. கிணற்றுக்குள் இருந்து பேசுவது போன்ற குரலை உடைய நபர்களை professor-களாக அமர்த்துவதைக் கல்லூரிகள் மறுபரிசீலனை செய்யலாம். அல்லது அந்நபர்களே, சமூக அக்கறையோடு, ஆசிரியர் தொழிலிருந்து வேறு வேலை பார்த்துச் செல்லலாம் – நிச்சயமாக மாணவர் சமூகம் அவர்கள் 100-ஆண்டு வாழ இறைவனைப் பிரார்த்திக்கும். 2. லோக்கல் author என்கிற பேரில், சகட்டு மேனிக்கு கண்டதையும் எழுதும் சமூக விரோதிகள் மீது 'பொடா', 'எஸ்மா', 'நக்மா' என்று ஏதாவது பெயரில் சட்டம் போட்டு, அவர்களை உள்ளே தள்ள அரசாங்கம் யத்தனிக்கலாம். மொழிக் கொலை செய்வதைத் தடுக்க இ.பி.கோ.-வில் புது செக்ஷன்களை உருவாக்கலாம். ஒரு படு லோகல் author-இல் இருந்து சின்ன துணுக்கு இதோ: "In simple words, motivation can defined as the process of inducing the people inner drives and the action towards certain goals and committing his energies towards achieve of these goals" (நான் டைப் செய்ததில் தவறு இல்லை என்பதை கவனத்தில் கொள்க!) 3. கெமிக்கல் lab என்றால் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், கம்ப்யூட்டர் lab-இல் கூட lab coat அணிந்து தான் உள்ளே வர வேண்டும் என்கிற பைத்தியக்காரத்தனங்களை எதிர்காலத்திலாவது திருத்திக் கொள்ளலாம். 4. ஒரு சில equation-களையும், foreign author-களிலிருந்து ஒரு சில வரிகளையும் ஒவ்வொரு நாளும் மனப்பாடம் செய்து கொண்டு வந்து, கிளாஸ் முன் சிலை போல் நின்று ஒப்பிக்கும் வாத்தியார்கள்/ வத்தியாரினிகள், திருக்குறள் ஒப்புவித்தல் போன்ற போட்டிகள் எங்கு நடக்கின்றன என்று தேடுவதைத் தொழிலாகக் கொள்ளலாம். 5. கல்லூரியில் symposium, காலேஜ் டே, இத்யாதிகள் என்றால், புடவை கட்டிக் கொண்டு வரும் இளம்யுவதிகள், எல்லாம் தெரிவது போல் படுகுட்டையாக (skimpy) ஸீ த்ரூ ரவிக்கையும், லோ ஹிப்பில் சேலையும் கட்டி, இடுப்பசைத்து, படு செக்ஸியாக வந்து, மாணவர்களின் androgen சுரப்பிகளைச் சுண்டியிழுக்கும் வேலைகள் நியாயம் தானா என்று அவர்களுக்குள்ளேயே ப்ரைவெட்டாக ஒரு GD வைத்து முடிவு பண்ணிக் கொள்ளலாம். 6. கல்லூரியில் நடக்கும் டெக்னிக்கல் symposium-களில், ஹாலுக்கு வெளியே ரிஸ்ப்ஷனிலும், ஹாலுக்கு உள்ளே ஆடியன்ஸ்க்கு பிஸ்கட்-காப்பி கொடுப்பதற்கும், பரிசு கொடுக்கும் விழாக்களில் chief guest கையில் பரிசைக் கொண்டு கொடுப்பதற்கும், ஒரு கலருக்காக ஸ்டேஜில் நின்று குசுகுசுத்துக் கொள்வதற்கும் மட்டும் பெண் பிள்ளைகளைப் பயன்படுத்துவதும், அவர்களும் அதைப் பெரும் பேறாகக் கருதி சர்வஜன சேவை செய்வதும், அவர்கள் தலையில் மிளகாய் அரைக்கும் வேலை என்கிற ஞானோதயம் அடைய முயலலாம். symposiu-த்தின் டெக்னிக்கல் சமாசாரமும் உண்டு என்று சற்று எண்ணிப் பார்க்கலாம். 7. சில சமயம், இருப்பது போதாதென
று, மாணவர்களைத் தூங்க வைக்க, IIT, REC, என்கிற வேற்று கிரகங்களிலிருந்து சில பிறவிகளை வரவழைத்து, guest lecture என்கிற கவுரவப் பெயரில் அவர்களும் 120-200 என்று இஷ்டத்திற்கு ஸ்லைடுகளைப் போட்டு, புரியாத விஷயத்தைப் புரிய வைக்கக் கூட யத்தனிக்காமல், அவர்கள் பாட்டுக்கு லெக்சர் கொடுக்கிற பேத்தல் சமாசாரங்களைக் கைவிட முன்வரலாம். 8. டிப்ளமோ அளவிற்குப் பெரிதாக(!) இல்லாவிட்டாலும், குறைந்தபட்சம் ஒரு ரேடியோவையோ, ஒரு டிவியையோ திறந்துகாட்டி, இது இது இன்னது என்றாவது காட்டலாம். இஞ்சினீயரிங் படித்ததற்கு ஒரு அர்த்தம் கிடைக்க வழி செய்யலாம். இன்னும் எத்தனையோ யோசனைகள் சொல்லலாம். அப்துல் கலாம் தேச முன்னேற்றத்திற்குச் சொன்ன எட்டு அம்சத் திட்டம் போல, இந்த எட்டு விஷயத்தையும் நிறைவேற்ற முயலலாம். புண்ணியம் கருதியாவது…

  • The Author

    DEEPAK VENKATESAN

    A Bangalore-based blogger, amateur photographer, engineer, traveler, bird-watcher, cartoonist, designer, stage-performer, and a good cook.
    Know more!

  • Indiblogger Points (Higher the better)

  • I said this on Twitter

  • What the readers feel?

    • MM: oolaalaa…wow…sound s like a nice adventure…
    • varundbest: I always visit your blog and retrieve everything you post here but I never commented but today when I saw...
    • Hemanth: good article…. I too did the yes!+ course…….Definitel y it is a good course and art of...
    • MM: Haha hilarious….good read…and good luck with the search…
    • Suchindra: I have bought a e-stamp, but the deal could not go through. Am left with a e-stamp with names of the...
  • My Random Photos

    More
  • Topics

  • Attic

  • Still not in the Attic