பல ஆண்டுகளுக்கு முன்னால் நான் எனது சொந்த ஊரான கர்நாடக மாநிலம் சிருங்கேரி சென்றிருந்தேன். அப்போது பள்ளியில் படித்துக் கொண்டிருந்த எனக்கு, கோடை விடுமுறையில் ஊருக்குச் செல்வதென்றால் ஒரே கொண்டாட்டம் தான். ஒரு மலையடிவாரத்தில் அமைந்திருந்த அந்தச் சிறிய ஊரில் எங்கு பார்த்தாலும் வயலும் வரப்பும் வாய்க்காலுமாய் இருக்கும். நண்பர்களோடு ஆற்றில் குளிப்பது, காட்டில் அலைவது, சந்தைக்குச் செல்வது என்று பொழுது போனது தெரியாமல் விளையாடிக் கொண்டிருப்போம். சரியான சாப்பாட்டு ராமனான எனக்கு, அத்தை விதம் விதமாகப் பலகாரங்கள் செய்து கொப்டுபார்கள். நானும் பொழுது தெரியாமல் சாப்பிட்டுக் கொண்டே இருப்பேன். மாட்டுத் தொழுவம், காப்பித் தோட்டம், தென்னந்தோப்பு என்று ஒரு ideal கிராமத்திற்கான எல்லா விஷயங்களும் உண்டு அந்த ஊரில். பொதுவாகவே ஊருக்குச் செல்லும் போது எனக்கு ஒரு பிரச்சனை இருக்கும். நான் அடிப்படையில் கர்நாடகத்தைச் சேர்ந்தவனானாலும், பிறந்தது, வளர்ந்தது எல்லாம் சென்னையில் தான். அதனால் சென்னை செந்தமிழ் சரளமாகப் பேசத் தெரிந்த எனக்கு கன்னடம் சற்று உதைக்கும். தினமும் வீட்டில் பேசுவது கன்னடம் தான் என்றாலும், அந்த கிராமத்திற்குச் சென்று, அவர்களின் slang-கைப் புரிந்துகொண்டு பேசுவது கடினமாக இருந்தது. எப்படியோ இரண்டொரு நாட்களில் கன்னடம் பழகிவிட்டது. வருவோர் போவோரிடத்தில் எல்லாம் அந்த ஊர் slang-கிலேயே பேசி அசத்தலாய்ப் பெருமையடித்துக் கொண்டிருந்தேன். எங்கள் அத்தையின் வீடு அந்த ஊரிலேயே இருந்த பெரிய வீடுகளில் ஒன்று. பல அறைகளைக் கொண்ட அந்த வீடு ஒரு maze மாதிரி இருக்கும். ஒவ்வொரு அறையையும் தேடித்தான் கண்டுபிடிக்க வேண்டும். ஒரு நாள் வீட்டில், நான் பசுங்கன்று ஒன்றோடு விளையாடிக் கொண்டிருந்த சமயம். என் அத்தை, வீட்டின் பின்புறத்தில் துணி துவைத்துக் கொண்டிருந்தார். கொஞ்ச நேரத்தில் என் அத்தை என்னைக் கூப்பிடும் குரல் கேட்டது. நானும் ஓடிச் சென்றேன். துணிகளுக்குப் போடும் நீலம் தீர்ந்துவிட்டது என்று சொல்லி, என்னைப் பக்கத்தில் இருக்கும் கடைக்குப் போய் நீலம் வாங்கி வரச் சொன்னார். என் அத்தையும் சென்னையில் வளர்ந்தவர் என்பதால் என்னிடத்தில் தமிழில் தான் பேசுவார். நீலம் வாங்கி வரச் சொன்னதும், நானும் மண்டையை நன்றாக ஆட்டினேன். நீலத்திற்கு கன்னடத்தில் ‘நீலி’ என்று சொல்வார்கள். ஆனால் எனக்கு அது தெரியாது. விளையாட்டு கவனத்தில் அத்தையிடமும் கேட்க மறந்துவிட்டேன். என் அத்தையிடத்தில் பணம் வாங்கிக் கொண்டு பக்கத்தில் இருக்கும் அந்த மளிகைக் கடைக்குப் போனேன். பொதுவாக, தமிழில் ‘அம்’ விகுதி பெறும் வார்த்தைகளுக்கு, அந்த ‘அம்’ விகுதியை எடுத்து விட்டால், கன்னடமாகிவிடும். உதாரணமாக, தமிழில் ‘காரியம்’ என்றால், கன்னடத்தில் ‘கார்யா’, தமிழில் ‘சாகசம்’ என்றால், கன்னடத்தில் ‘சாஹ்சா’ – இப்படி. இந்த வகையில், நீலத்திற்குக் கன்னடத்தில் ‘நீலா’ என்று தீமானித்துக் கொண்டேன். நேராகக் கடைக்காரரிடம் சென்றேன். இரண்டு ரூபாய்க்கு ‘நீலா’ கொடுங்கள் என்றேன். (கன்னடத்தில், ‘எரடு ருப்பாய்கே நீலா கொடி’). கடைக்காரர் என்னை ஒரு மாதிரியாகப் பார்த்தார். மறுபடியும் கடைக்காரரிடம் ‘நீலா’ வேண்டும் என்று கேட்டேன். இதற்குள், அந்தக் கடைக்காரர் கெகெகே… என்று சிரிக்க ஆரம்பித்து விட்டார். எனக்கு ஒன்றுமே புரியவில்லை. மறுபடியும் ‘நீலா’ கேட்டேன். ஆனால் அவர் சிரித்து முடித்தபாடில்லை. என்ன செய்வது என்று தெரியாமல் பயந்து போய் வீட்டிற்கு வந்துவிட்டேன். வீட்டில் அத்தையிடம் வந்து நடந்ததைச் சொன்னேன். உடனே அத்தையும் சிரிக்க ஆரம்பித்து விட்டார். எனக்கு
ன்றும் புரியாமல் நின்றேன். அதற்குப் பிறகு என் அத்தை விஷயத்தைக் கூறிய பிறகு தான் எனக்கே தெரிந்தது. உண்மையில் ‘நீலா’ என்பது, sorry, நீலா என்பவள், கன்னட சினிமாவில் ஒரு பிரபலமான கவர்ச்சி நடிகையாம். துணிக்குப் போடும் நீலத்திற்குக் கன்னடத்தில் ‘நீலி’ என்று கேட்க வேண்டுமாம். நான் போய் கடைக்காரரிடம் ‘நீலா’ வேண்டும் என்று சொன்ன போது அவர் என்ன நினைத்திருப்பார் என்று நீங்களே எண்ணிப்பாருங்கள். இங்கே ஒரு கடைக்குப் போய் ‘எனக்கு மும்தாஜ் வேண்டும்’ என்று கேட்பதைப் போல இருந்திருக்கும். இன்றும் என் அத்தை ‘என்ன தீபு, உனக்கு நீலா வேண்டுமா?’ என்று கேட்டுக் கலாய்ப்பார்கள். இன்றுவரை எந்த மொழியையும் அரைகுறையாகத் தெரிந்து கொண்டு சீன் போடும் நான் யாரிடத்தில் என்னவெல்லாம் கேட்கப் போகிறேனோ தெரியவில்லை… ஈஷ்வரா!!





நல்ல அனுபவம்.. நம்மூரில் மும்தாஜ் கேட்டு தாஜ்மஹாலில் புதைத்தது போல் உங்களையும் புதைத்து விடப் போகிறார்கள்.
All the best
[Reply]
Kangs(கங்கா)
13 Mar 05 at 9:31 am