அருமை நண்பர் Kaushik அவர்களுடைய மின்னஞ்சல்களிலும், வலைச் செயல்பாடுகளிலும் நான் அடிக்கடி ஒரு ஆங்கில வாசகத்தைக் காண்பதுண்டு. “I am not what I think I am. I am not what you think I am. I am what I think you think I am.” இதனுடைய சரியான அர்த்தம் என்னவென்று எனக்குத் தெரியாது. ஆனால், நாம் மற்றவர்களின் கண்கள் வழியாகத் தான் நம்மை நாமே மதிப்பீடு செய்கிறோம் என்பதுதான் இதற்கு விளக்கம் என்று நினைக்கிறேன். அதாவது, மற்றவர்கள் என்னைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்று நான் நினைக்கிறேனோ, அதுவே நான். (ஆமாம், இது எனக்கு இன்னும் குழப்பமாகத் தான் இருக்கிறது).
இந்த விஷயங்களை ஏன் சொல்கிறேன் என்றால், நான் யார், என்னால் என்ன செய்ய முடியும், எனக்கு எதில் நாட்டம் இருக்கிறது என்பது எனக்கே இன்னும் புதிர்தான். Engineering படித்து முடித்தாகி விட்டது, IT உலகிலும் அடியெடுத்து வைத்தாகி விட்டது. இன்னும் எனக்கு எதில் விருப்பம் என்று எனக்கே தெரியாது.
பத்தாம் வகுப்பு படித்த போது, நிச்சயமாக ஒரு ஆசிரியன் ஆக வேண்டும் என்று முடிவு செய்திருதேன். பின்னால், பதினோராம் வகுப்பு படித்த போது, இலக்கியம் ஒரு நல்ல பாதையாகத் தெரிகிறதே என்று நினைத்தேன். பள்ளி நாட்கள் முடிக்கிற போது, எழுத்துலகம் தான் எனக்கானது என்று அப்பாவிடம் அடம் பிடித்தேன். இறுதியாக, Engineering college-இல் ECE பிரிவில் சேர்ந்தேன். நேற்று வரை, சரி, Electronic உலகத்தை ஒரு கை பார்ப்போம் என்று பலதரப்பட்ட விஷயங்களிலும் கவனம் செலுத்தினேன். கடைசியாக ஒரு நாள், Campus Interview என்று சொல்லி வந்தார்கள். ஒரு IT job-பும் கிடைத்தது. ஆனால், இன்னும் மனம் அலைபாய்ந்து கொண்டு தான் இருக்கிறது.
எனக்குக் கல்லூரிக்குச் செல்ல அலைச்சல் எதுவும் இருந்ததே இல்லை. கல்லூரிப் பேருந்து வீட்டு வாசலில் சரியாக வந்து நிற்கும். நேராகக் கல்லூரியில் சென்று சேர்க்கும். ஒரு இயந்திரமயமான (Mechanized) கல்லூரி வாழ்க்கை. பள்ளி, ஒரு சிறிய நண்பர் வட்டம், வீடு, வாசிப்பு, வாழ்க்கை என்று இருந்த எனக்கு, சென்னையின் நீள அகலங்களே, கல்லூரிக்குச் சென்ற பிறகுதான் தெரியும். (சென்னை தியாகராய நகர் எங்கோ வேற்று உலகத்தில் இருப்பதாக நினைத்த சிறு வயது ஞாபகங்கள், இன்று அசைபோட்டுப் பார்க்கச் சிரிப்பாக இருக்கிறது). தினமும் கல்லூரிக்குச் செல்லும் நீண்ட நெடிய பயணத்தில், சுற்றி நடக்கிற விஷயங்களைப் பார்த்துக் கொண்டிருந்தால் சாதாரண பொது ஜனம் கூட இலக்கியவாதியாகி விடலாம். நானோ நான்கு ஆண்டுகளாக இதைத்தான் பார்த்துக்கொண்டிருக்கிறேன். சில விஷயங்கள் மனதில் நிற்கும், சில கோபத்தைத் தூண்டும், சில, சிரிப்பைத் தரும். சிறுகதையே எழுதிவிடலாம் – இவவற்றை வைத்து. நான் எனக்குத் தெரிந்த விதத்தில் எழுதுகிறேன். வாசித்துப் பாருங்கள். உங்கள் Comments-ஐ எனக்குச் சொல்லுங்கள்.




